
1.
சுருதி கூடக் கூடக் கொட்டி முழக்குகிற
இசைக்கருவியின் கதறல் உரித்த
தோலின் உடலுக்கானதும்.
2.
குன்னிமரக் கருப்பண்ணசாமி நேர்ச்சைப்
பங்கு வராத பூசாரிக்குள்
இறங்கியதேயில்லை அருள்.
3.
முல்லை நிலத்து முசுண்டையாய்
யன்னலிலுன் விழி பார்த்த இரவின்
முகம் கருத்துக் கிடந்தது விடியல் வரை.
4.
எப்போதும் எனை அழைத்தபடியே
இருக்கிறதென உன் பெயரைச் சொல்லித்
தந்த நேற்றிரவிலிருந்து கடலுக்குச்
செம்போத்தின் குரல்.
5.
அள்ளித் தின்றபடி இருக்கிற மரணத்தின்
கடைவாய் அழுக்குண்டு துள்ளும்
சிறுமீன் இப் புகழ்.