
தொப்புள்கொடி உறவு
கடந்த சில வருடங்களாக, கடலில் இருந்துதான் உயிர் உருவானது என்பதை பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஏற்கத் தொடங்கியிருக்கின்றனர். கடலுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவைப் போன்றது. கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மனிதர்களின் செயல்பாடுகளால் கடல் பாதிக்கப்படுகிறது, கடல் சூழல் மாறும்போது மனிதன் பாதிக்கப்படுகிறான்.
கடலுக்கும் மனிதனுக்கும் எப்போது தொடர்பு ஆரம்பித்தது என்பதைத் தனியாகத் தேடத் தேவையில்லை. மனித வரலாறு தொடங்கிய அந்த கணத்திலிருந்தே கடலுடனான மனிதனது பிணைப்பும் தொடங்கியிருக்க வேண்டும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஆதி மனிதன் கடலைப் பார்த்தபோது ஏற்பட்டிருக்கக் கூடிய அதே அச்சம் கலந்த வியப்பு இன்று பிறக்கும் குழந்தைக்கும் ஏற்படுகிறது. அன்றும் இன்றும் என்றுமே கண்களை விரித்துதான் கடலைப் பார்க்கிறோம். கடலுக்கு முன்னால் குழந்தையாக உணர்கிறோம்.
இந்த அடிப்படை உணர்வைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் கடலுக்கும் மனிதனுக்குமான உறவு மாறிக்கொண்டே இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்ப காலத்தில் கடல் என்பது கடந்து செல்ல வேண்டிய ஒரு தளமாகவும் போக்குவரத்து ஊடகமாகவும் இருந்தது. கடற்கரையில் நின்றுகொண்டு தொடுவானத்தை வெறித்த ஆதி மனிதனுக்கு, “இதற்குப் பின்னால் என்ன இருக்கும்?” என்பதே ஒரே கேள்வியாக இருந்திருக்கும். கடல்வழிப் பயணங்கள் பிரபலமாகி நாடுகள் ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கடல் பற்றிய புரிதல் நமக்கு ஓரளவு வந்தது. சாகசம் நிறைந்த பயணங்களின் களமாக கடல் மாறிப்போனது. கடலில் காணப்படும் உயிரினங்கள், விநோதமான கடல் நிகழ்வுகள், புயல்கள் ஆகியவை இலக்கியங்களில் இடம்பெறத் தொடங்கின. நிலத்தில் உள்ள படைகளோடு பேரரசர்கள் கப்பற்படைகளையும் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினர். பெரிய கப்பற்படைகளோடு பிற நாடுகளுக்குச் சென்று அவற்றைக் கைப்பற்றுவது வழக்கமானது. வணிகத்தில் கடல் பொருட்களான பவளங்களும் முத்துகளும் தென்படத் தொடங்கின.
ஆதிகாலம் தொட்டே மீன்பிடிக்கும் வழக்கம் இருந்துகொண்டிருந்தாலும் தற்போது நாம் பார்க்கும் மீன்பிடிப் படகுகளும் அதற்கான தொழில்நுட்பங்களும் சமீபத்தில் வந்தவைதான். பாய்மரப் படகுகளிலேயே பயணித்துக்கொண்டிருந்த மனித இனம் 1877ம் ஆண்டில்தான் நீராவியால் இயங்கும் மீன்பிடிப் படகுகளுக்கு மாறியது. நீராவிப் படகுகள் டீசல் படகுகளாக உருமாற முதலாம் உலகப் போரின் தொழில்நுட்பம் தேவைப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்ட ரேடார் உள்ளிட்ட கருவிகள், கடலில் இருக்கும்போது வழி கண்டுபிடிக்கவும் தகவல் தொடர்புக்கும் உதவின.
உலகப் போருக்குப் பிறகான காலகட்டத்தில் மீன்பிடித் தொழிலும் கடல்சார் ஆராய்ச்சிகளும் புதிய உச்சத்தைத் தொட்டன. புதிதாக வந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு வணிகமும் ஆராய்ச்சியும் முன்னேறின. 1950களில் மீன் வரத்து குறையத் தொடங்கி ஆங்காங்கே இருந்த மீன்பிடித் தொழில்கள் முழுவதுமாக சீர்குலைந்தபோதுதான், ”கடல் என்பது அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்” என்பது உலகத்துக்கு உறைத்தது. வணிக நோக்கம் கொண்ட மீன்பிடித் தொழிலுக்கும் அறிவியலுக்கும் அன்று தொடங்கிய மிகப்பெரிய இழுபறி இன்றும் தொடர்கிறது.
17ம் நூற்றாண்டு முதலே கடல் எல்லைகள் ஓரளவு வகுக்கப்பட்டிருந்தாலும் கடல் எல்லைகள், கடல் வளங்கள் பற்றிய தெளிவான உலகளாவிய சட்டங்கள் 1982ல்தான் முதன்முதலாக வரையறுக்கப்பட்டன. இந்த சர்வதேச சட்டத்தில் சில போதாமைகள் உண்டு, அது தொடர்பான வழக்குகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னொருபக்கம் கடலின் நீர்ப்பரப்பு மட்டுமல்லாமல் கடற்கரைகள் பற்றிய விதிகளும் ஒவ்வொன்றாக வந்துகொண்டிருக்கின்றன. இப்போது பொதுமக்களின் கருத்துக்காகக் காத்திருக்கும் இந்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019 (Coastal Regulation Zone Notification 2019) ஒரு சமீபத்திய உதாரணம். கடலோரப் பகுதிகளின் பயன்பாட்டு உரிமை, அங்கு அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் ஆகியவற்றை இந்த அறிவிக்கை பேசுகிறது. அது தொடர்பான சர்ச்சைகளும் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
நவீன உலகில் உள்ள கடல் தொடர்பான சர்ச்சைகளில் முக்கியமானது ஆழ்கடல். 1960களில் ஜே.எல்.மெரோ என்பவர் ஆழ்கடலில் கனிம வளங்கள் இருப்பதாக எழுதினார். அதைப் பார்த்து உற்சாகமடைந்த உலக நாடுகள், ஆழ்கடலில் எவ்வளவு கனிம வளங்கள் இருந்தன என்று தேட ஆரம்பித்தன. ஆரம்பகட்ட சோதனைகளில் மெரோவின் கணிப்பை விடவும் குறைவான வளங்களே இருக்கின்றன என்று தெரியவந்ததால் ஆழ்கடல் சுரங்கம் பற்றிய முன்னெடுப்புகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது நிலத்தில் இருக்கும் கனிம வளங்கள் குறையத் தொடங்கியிருப்பதால், “எவ்வளவு செலவு செய்தாலும் பரவாயில்லை, கடலுக்குள் இருக்கும் கொஞ்சநஞ்ச கனிமங்களை எடுத்துவிடலாம்” என்று மீண்டும் உலக நாடுகள் இதில் இறங்கியிருக்கின்றன. ஆழ்கடலைச் சுரண்டுவதில் உலக நாடுகளுக்கு இருக்கும் போட்டி கடல் சூழலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகியிருக்கிறது.
இந்த சுருக்கமான வரலாற்றைப் படிக்கும்போது, கடலைப் பார்த்து வியந்த மனித இனம் கடலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக ஒரு சித்திரம் தெரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இன்றும் மீன்பிடித் தொழில்தான் உலகத்திலேயே ஆபத்துகள் அதிகம் கொண்ட தொழிலாக இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை உதாசீனப்படுத்திவிட்டு கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சென்ற டைட்டன் என்ற நீர்மூழ்கி உருக்குலைந்ததும், அதில் இருந்த ஐந்து பேரும் ஜூன் 2023ல் உயிரிழந்ததும் பலருக்கு நினைவிருக்கலாம். கடலின் பிரம்மாண்டத்தையும் அதில் உள்ள ஆபத்துகளையும் குறைத்து மதிப்பிட்டதால் ஏற்பட்ட விபத்து இது. இதுபோல பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம், இவ்வளவு ஏன், கடலில் மிதக்கும் ஒரு பனிப்பாறையைக் குறைவாக நினைத்ததால்தானே 1912ல் டைட்டானிக் கப்பல் மூழ்கியது?! 2014ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி, கடல் பற்றிய நமது பல மதிப்பீடுகளைக் கலைத்துப் போட்டிருக்கிறது. கடல் எவ்வளவு அழகானதோ, அலட்சியமாகக் கையாளும்பட்சத்தில் அதுவே ஆபத்தானது என்பதையும் பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
துரதிருஷ்டவசமாக, காலனியவாதம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இயற்கை வளம் குறித்து ஆட்சியாளர்களுக்கு இருந்த அலட்சியம் இத்தனை படிப்பினைகளுக்குப் பிறகும் இன்னும் தொடர்கிறது. அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்தும் கூட இந்த நிலை மாறவில்லை. வணிக நோக்கில் இயங்கும் இவ்வுலகில் கடலும் ஒரு பண்டமாகிவிட்டது. காலநிலை மாற்றம் உச்சத்துக்குச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் காலநிலை மாற்றத்திலிருந்து நம்மைக் காக்கக்கூடிய ஒரு அம்சமாகவும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக் கூடிய இயற்கை வளமாகவும் கடலை இருவேறாக நாம் பார்க்கவேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. மிச்சம் மீதி இருக்கும் கடல் வளங்களை எடுத்துக்கொள்ள உலக நாடுகள் போட்டி போடுகின்றன.
இத்தனை இருட்டுக்கு நடுவில் சில நம்பிக்கைகள் ஒளிக்கீற்றுகளாக இன்னும் மிச்சம் இருக்கின்றன. பொதுமக்களிடையே சூழல்சார் விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது. கடல்சார் ஆராய்ச்சிகள் அதிகரித்திருக்கின்றன. சூழல் செயற்பாட்டாளர்கள் கடல் பற்றியும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். 2030க்குள் பூமியின் நில மற்றும் கடற்பரப்பில் 30 விழுக்காட்டைப் பாதுகாப்போம் என்று உலக நாடுகள் ஒருமித்து முடிவெடுத்திருக்கின்றன. காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு (அல்லது அச்சம்) ஓரளவு உலகில் வரத் தொடங்கியிருக்கிறது. கடல்சார் தொல்குடிகள் தங்களது வாழ்வாதாரத்துக்கான நேரடிப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் கடல் சூழலுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன.
வரலாற்றிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்வதில்லை, ஆனால் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும், கற்றுக்கொள்ளாவிட்டால் ஏற்படும் ஆபத்துகளையும் காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. கடலுக்கும் மனிதனுக்குமான உறவைப் பின்னோக்கிப் பார்க்கும்போது நாம் அடைய வேண்டிய புரிதல் இன்னும் நிறைய இருப்பதாகத்தான் தோன்றுகிறது. கடலோடு இரண்டறக் கலந்திருக்கும் நம் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் கடலைப் பாதுகாப்பதும் அவசியமானது என்பதை நாம் உணர வேண்டும். இந்தத் தொடர் அந்தப் புரிதலுக்கும் பயணத்துக்குமான ஒரு ஆரம்பப் புள்ளியே.
கடலும் மனிதரும் இணையும் புள்ளியில் நூற்றுக்கணக்கான கதைகள் உண்டு. அவை எல்லாவற்றையும் ஒரு தொடரில் எழுதி முடித்துவிட முடியாது. கடலுக்கும் மனிதனுக்குமான உறவில் இருக்கும் பல்வேறு பரிமாணங்களை சுட்டிக்காட்டும் எளிய நோக்கத்தோடுதான் இந்தத் தொடரை எழுதத் தொடங்கினேன். அது நிறைவேறியிருப்பதாகவே தோன்றுகிறது.
நிறைவடைந்திருப்பது தொடர் மட்டுமே. கடலுக்கும் மனிதருக்குமான உறவு என்றுமே தொடரும்.
(முற்றும்)