மிஷன் தெரு

சசிகலா…
ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் நடக்கும் கதை. தஞ்சாவூர், மன்னார்குடி சுற்று வட்டாரம்தான் கதைக்களம். மன்னார்குடியின் கமிஷ்னர் ஸ்டோன் துரை. அவரிடம் கணக்குப் பிள்ளையாக பணி புரிகிறார் ராஜரெத்தினம் வன்னியர். கிறிஸ்தவராக மாறின கள்ளர் வகுப்பை சேர்ந்தவர். ராஜரெத்தினம் வன்னியரின் ஒரே மகள் எஸ்தர், பேரழகி.
துலுக்கப்பட்டாளம் அடிக்கொருதரம் வந்து திருமணமாகாத பெண்களை வீட்டின் உள்ளேயே புகுந்து தூக்கிக் கொண்டு போகும் காலகட்டம் அது. இதன் காரணமாக எட்டு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள் பெற்றோர்கள்.
ராஜரெத்தினம் வன்னியரோ எஸ்தரை பள்ளிக்கு அனுப்பி ஆங்கிலப் படிப்பு படிக்க வைக்கிறார். மிகவும் துடுக்கான தைரியமான பெண்ணாக வளர்கிறாள் எஸ்தர்.
ராஜரெத்தினம் வன்னியரின் மூன்று தங்கைமார்களும் வாழா வெட்டியாக இவரின் வீட்டிலேயே தஞ்சமடைந்திருக்கிறார்கள். எஸ்தரை, அவளின் தாயோடு சேர்த்து மூன்று அத்தைமார்களும் வளர்த்தெடுக்கிறார்கள்.
எஸ்தரின் பேரழகே, வாழ்க்கையில் அவள் பல இன்னல்களை சந்திக்க காரணமாகிறது. பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு ஆசிரியர் வரை அவளிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஸ்டோன் துரையே அவள் மேல் காதல் கொள்கிறான்.
இவர்கள் அனைவரிடத்தில் இருந்தும் தன்னை பாதுகாத்துக் கொண்டு, தனக்கானவனாக வில்லியம்ஸை விரும்புகிறாள் எஸ்தர். அவனோ தலீத் கிறிஸ்தவன். இவர்களின் காதலை வீட்டில் ஏற்க மாட்டார்கள் என்று ஊரை விட்டு ஓட முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி தோல்வியடைந்து லாசரஸ் என்பவனிடம் பிடிபடுகிறாள் எஸ்தர். பின் அவளின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் அலைகழிக்கப்படுகிறது என்பதை அடுத்தடுத்த சம்பவங்களில் கூறுகிறார் தஞ்சை பிரகாஷ்.
பெண் எவ்வளவுதான் முற்போக்காக இருந்தாலும் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் எங்கோ ஓரிடத்தில் அவளின் தைரியத்தை புத்திசாலித்தனத்தை விட்டுவிட்டு, கவனிக்கவும்.. தொலைத்து விட்டு அல்ல, விட்டுவிட்டு.. எதிலேயும் பற்றில்லாமல் நாட்டமில்லாமல் இருப்பாள். அந்த பெண்களின் பிரதிநிதியாகத்தான் எஸ்தர் தெரிகிறாள்.
தஞ்சை மற்றும் மன்னார்குடியில் அன்றைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை, துலுக்கர்கள் மராட்டியர்கள் கள்ளர்கள் என்று அன்று வாழ்ந்தவர்களின் வாழ்வியலை இந்த நாவலின் மூலம் நமக்கு புரிய வைக்கிறார் தஞ்சை பிரகாஷ்.
இந்த புத்தகத் திருவிழாவில் தவற விடாமல் வாங்க வேண்டிய புத்தகம் “மிஷன் தெரு”.
நண்பர்கள் கட்டாயம் வாங்கி வாசிக்கவும் :-)//
வாசகசாலை வெளியீட்டில் இந்த புத்தகத்தை அதைப்பற்றி எதுவும் தெரியாமல்தான் வாங்கினேன். நான் எந்த புத்தகத்தையும் சீக்கிரத்தில் வாங்கமாட்டேன், வாங்கிய பிறகு பிடிக்கவில்லை என்றால் காசு வீனாகிடும் என்ற பயம் தான்.
நான் பெயரைப்பார்த்து, mission impossible போல் நவீன நாவல் என்று நம்பினால், முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் ஆட்சியில் தஞ்சை பகுதியை பற்றி என்று காட்டியது. சரி எஸ்தரைப்பற்றி தெரிந்துக்கொள்ள மேலும் படித்தேன்.
ஒரு பதினெட்டு வயதுப்பெண் தன் காதலனுடன் ஓடிவிடுகிறாள், அவளை பிடித்து வைக்கிறார்கள், ஒருவன் அவளை மீட்டு தனது குதிரை வண்டியிலேயே பலமுறை வண்புணர்வு செய்து அவள் பெற்றோரிடம் பேசி அவளையே மணம் செய்கிறான். அதன் பிறகு அவளை மூன்று பிள்ளைகளுக்கு தாயாக்கியும் அவளை ரணத்திலேயே வைத்திருக்கிறான். இதுதான் கதை.
இந்த கதையில் அந்த பெண்ணின் வலியையும், அந்த காலத்தில் நடந்த பல சம்பவங்களையும் ஆசிரியர் பேசுகிறார். சாதிப்பெருமை பேசினாலும் தன் ஒரே மகளை ஆசையாய் வளர்த்து, படிக்க வைத்து, madam ஆக்க ஆசைப்பட்ட அப்பா, அவர் தங்ககைகள்,தம்பி என்று ஒரு குடும்பம்.கிறிஸ்தவர்களை அன்று பிறர் பார்த்த விதம், முக்கியமாக அந்தகால திருச்சபையில் இருந்த சாதிய மோதல்.
சிறு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு காரணமாக ஆசிரியர் சொல்லும் விசயம் உண்மையாக நடந்ததா இல்லை அந்த காலத்து மக்களால் நம்பப்பட்டா மாயையா என்று தெரியவில்லை. துலுக்கர்கள் கம்மாளப்பெண்ணை தூக்கிச்சென்று கப்பலில் துபாய்க்கு அனுப்பியதெல்லாம் இப்பொழுது சொன்னாலே என்னால் நம்ம முடியாது.
இவர் விவரித்த காலத்திலிருந்து இன்றுவரை பெண்களின் நிலை, சாதிய வேறுபாடு, ஆணாதிக்கம் எதுவும் மாறவில்லை., சிறிது பெண்களின் படிப்பில் வேண்டுமானால் முன்னேற்றம் இருக்கலாம். இந்த நாவல் மூலம் மராட்டிய, கள்ளர் மற்றும் கிறிஸ்தவ மிஷினரி பற்றி தெரிந்து கொள்ளலாம்.
எஸ்தரை நினைத்து பரிதாபப்பட்டே முடித்தேன். தஞ்சை பிரகாஷ் நம்மிடையே இல்லை என்பதால் நான் அவரிடன் போகும்போது இந்த பதிவை கொண்டுப்போகிறேன். இவரைப்பற்றி ஜெயமோகன் நன்றாய் சொல்லவில்லை என்பதிலேயே இவர் சிறப்பான எழுத்தாளர் என்பது புரியும்.
நன்றி
- NIYAS AHMED
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒரு உலகத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஒரு இருட்டை ஒளித்து வைத்திருக்கிறாள்.
– மிஷன் தெரு | தஞ்சை ப்ரகாஷ் | வாசகசாலை