
ஒரு பெரிய மொத்த விலை மளிகைக்கடையில் மாதாந்திர சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தார் ராதா. சற்றுத் தொலைவில் தண்ணீர் பாட்டில், தலையணை, டோர் மேட், பாத்திரங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் என அந்தக் கடையில் அடுக்கப்பட்டிருந்த பல்வேறு இதர சாமான்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் கிரிதர்.
“எங்க அம்மா அப்பாவுக்கு இந்த பித்தளை டபரா டம்ளர் செட் எடுத்திருக்கேன், எப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே ராதா தள்ளிக் கொண்டிருந்த வண்டியில் அந்த பொருட்களைச் சேர்த்தார் கிரிதர். சற்று நேரம் பொறுத்து, “யார்ட்லி பவுடர் எடுத்திருக்கேன். போன முறை அப்பா நம்ம வீட்டுக்கு வந்தபோது நல்லா இருக்குன்னு சொன்னாரு” என்று ஒரு டப்பாவையும், “என்சூர் எடுத்திருக்கேன். எங்க அம்மாவுக்கு முட்டி வலி இருக்குல்ல, இது குடிச்சா நல்லதாம்” என்று மற்றுமொரு டப்பாவையும் அந்த வண்டியில் சேர்த்தார்.
“ஏம்பா, அவங்க கல்யாண நாளுக்கு ஏற்கனவே புடவை வேஷ்டி எடுத்தாச்சு, இதெல்லாம் எதுக்கு? சரி, என்சூர், யார்ட்லி பரவாயில்லை, அவங்க வீட்டுல இல்லாத டபரா டம்ளரா?” என்று கேட்டார் ராதா.
“இதோ பாரு, அவங்க கிட்ட இருக்கா இல்லையாங்கறது பிரச்சனை இல்ல, நம்ம அவங்களுக்கு நிறைய செய்யுறோமா என்பதுதான் அவங்க எதிர்பார்ப்பு. உனக்கு அது புரியாது” என்று கிரிதர் ராதாவிடம் விளக்கினார். அவர்கள் திருமணமான புதிதிலிருந்து அம்மா அப்பாவின் ஆசைகளை பூர்த்தி செய்வதில் முனைப்பாக இருக்கிறார் கிரிதர். அவருக்குத் திருமணமாகி இருபது வருடம் ஆகப்போகும் தருவாயில், இன்றும் ஒரு சிறிய குழந்தை போல, மதர்ஸ் டே துவங்கி, ஆங்கிலப் பிறந்த நாள், நட்சத்திர பிறந்த நாள், திருமண நாள், என்று அனைத்திற்கும் வாழ்த்துகளும் பரிசுகளுமாய் போய் நிற்கிறார் கிரிதர்.
“டேய் ரகு, நாங்க போய் தாத்தா பாட்டிய பார்த்துட்டு வந்துடறோம். ரெண்டு நாள்தான். உனக்கு எக்ஸாம் இருக்கறதால உன்ன இங்க விட்டுட்டுப் போறோம். வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வந்து கலாட்டா பண்ணக் கூடாது என்ன?”
“சரிம்மா, நான் பார்த்துக்கறேன். கவலைப்படாம போயிட்டு வாங்க! நான் என்ன குழந்தையா? அம்மா, ஹாவ் ஃபன்” என்று ராதாவை அணைத்து வழியனுப்பி வைத்தான் ரகு. கல்லூரிக்குச் செல்லும் மகன் இருந்தும், மாமியார் மாமனார் வீட்டிற்கு செல்வதென்றால் ராதாவிற்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆரம்பத்தில் சில ஆண்டுகள் சேர்ந்திருந்த அவர்கள், கிரிதருக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்ததால் அங்கே குடிபெயர்ந்தனர். பல வருடங்கள் கழித்து சென்னை வந்த போது, மாமனார் வீட்டருகில், அதே சுற்றுவட்டாரத்தில், வேறு ஒரு வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். சில ஆண்டுகள் முன்னதாக, திருச்சியில், ஓய்வூதியர்களுக்கான குடியிருப்பு ஒன்றில் சகல வசதிகளுடன் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே சென்று விட்டனர் ராதாவின் மாமியாரும் மாமனாரும்.
திருச்சியில் அவர்களைச் சந்தித்து அவர்கள் திருமண நாளன்று வாழ்த்து கூறி ஆசிகள் பெற கிரிதரும் ராதாவும் திருச்சியை நோக்கி காரில் பயணித்தனர்.
“குட் மார்னிங் மா! திருச்சி போயிட்டு இருக்கோம். ரகு தனியாதான் இருக்கான். அடச்சே… மறந்தே போயிட்டேன் பாரேன். ஹேப்பி பர்த்டே மா!” என்று தனது அம்மாவை வாழ்த்தினாள் ராதா.
“ஆண்டி பர்த்டேவையே மறந்துட்டியா நீ? வழக்கமா பொண்ணுங்கதானே இதெல்லாம் மறக்காம இருப்பாங்க? நீ ஏன்தான் இப்படி இருக்கியோ!” என்றார் நக்கலாக கிரிதர்.
“இதுல கூட ஆம்பளை, பொம்பளையா? நான் மறந்தா என்ன, என் அம்மாவே என்னை கால் பண்ணி உரிமையா அவங்க வாழ்த்தை வாங்கிக்கிட்டாங்க. உங்க அம்மா மாதிரி அடுத்த நாள் ஃபோன் பண்ணி திட்டல. அது என்ன உங்க அம்மா அப்பாவுக்கு கல்யாண நாளா இருந்தாலும் நம்மதான் முதல்ல வாழ்த்து சொல்லணும், நமக்கு கல்யாண நாளா இருந்தாலும் நாமளே கால் பண்ணி ஆசி வாங்கணும்? இந்த லாஜிக் எனக்குப் புரியல!”
“பெரியவங்களுக்கு, குறிப்பா, ஆண் குழந்தைகளை பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைகள் மேல அதீத எதிர்பார்ப்பு இருக்கும். அவங்கள நாங்க எப்போதும் தாங்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எல்லா இடங்களிலும் அவங்கள முதன்மைப் படுத்தணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எப்படி நம்ம பிள்ளையாரை எல்லா பூஜைகளிலும் முதன்மையா வெச்சு வழிப்படறோமோ அந்த மாதிரி. என் அம்மா அப்பாதானே, செய்துட்டு போறேன் விடு!”
“அது இல்லைங்க… நீங்களும், உங்க அண்ணனும், உங்க பெத்தவங்களுக்காக எவ்வளவோ செய்யறீங்க! இருந்தாலும், அவங்க இன்னும் செய், எங்களுக்கு பாத பூஜை பண்ணு, இது உன் கடமை அப்டிங்கறது மாதிரி மிடுக்கா இருக்காங்க. அவங்களுக்கு பொருளாதார ரீதியா சுதந்திரம் இருக்கு, ரெண்டு பேருக்கும் பென்ஷன் நிறைய வருது, இல்லைன்னு சொல்லல. ஆனா, தன் சொந்த பசங்க, பேரன் பேத்தி மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாம எப்படி இப்படி அவங்களால இருக்க முடியுது? அப்பப்போ வந்து ஐநூறு, ஆயிரம்னு பாக்கெட் மணி கொடுத்தா போதுமா?”
“இதெல்லாம் ரொம்ப யோசிக்காத ராதா! என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு நான் செய்துட்டுதான் இருப்பேன். என் வருத்தமே, அவங்க உரிமையா என்கிட்ட எதுவும் கேட்க மாட்டேங்கறாங்க அப்டிங்கறதுதான். நீ இப்போ இப்படி பேசற, நாளைக்கு ரகு கிட்ட எப்படி நடந்துக்கப் போறேங்கறத நானும் பார்க்கத்தானே போறேன்.”
“நான் ரகுவை இப்போ எப்படி நடத்தறேனோ அப்படியேதான் அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நடத்துவேன். ஒரு வருத்தம்னா உடனே பேசித் தீர்த்துப்பேன். மனசுலயே வெச்சு புழுங்க மாட்டேன். அன்பையும் எப்போதும் போலதான் காட்டுவேன். ஐம்பது வயசானாலும் ரகு என் புள்ளதானே? என் புள்ள ஆறு வயசுல அவன் கைப்பட செய்து ஒரு பர்த்டே கார்டு கொடுத்தான், அதை இன்னும் நான் பத்திரமா வெச்சிருக்கேன். அஞ்சு வருஷம் கழிச்சு அவன் எனக்கு வைரத்தோடு போட்டா சந்தோஷப்படுவேன்.. இல்லன்னு சொல்லல. ஆனா, குறைந்தபட்சம் என் பிறந்த நாளை அவன் ஞாபகம் வெச்சுகிட்டு ஒரு ஃபோன் கால் பண்ணினாலும் சந்தோஷப்படுவேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் அவன் கிட்ட கிடையாதுங்க. ”
“ரொம்பப் பேசற… எல்லாத்தையும் நானும் பார்க்கத்தான் போறேன். சரி, சரி, வீட்டுக்கு வந்துட்டோம், அவங்க என்ன சொன்னாலும் நீ எதுவும் பேசாத, நான் பேசிக்கறேன். அமைதியா இரு!” என்று வழக்கம்போல அறிவுரைகள் கொடுத்துவிட்டு, ஒரு திரை விழுந்தது போல தன்னை உள்ளிழுத்துக் கொண்டார் கிரிதர்.
வீட்டிற்கு சென்றவுடன் இருவருக்காகவும் வாங்கியிருந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து ராதாவும் கிரிதரும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்தனர். “அம்மாவுக்கு அபிவாதயே சொல்லுடா! புள்ள அம்மாவுக்கு சொல்லலாம், உனக்கு தெரியும்ல?” என்று அபிவாதயே கேட்டு வாங்கிக் கொண்டார் கிரிதரின் அம்மா . “இந்த என்சூர் ரொம்ப நல்லதாமே, எனக்கு மாசா மாசம் ஒண்ணு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக் கொடுத்திடு,” என்று சற்று உரிமையாக அவரது தாயார் கேட்டவுடன் கிரிதருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘எங்க அம்மா எப்படி கேட்கறாங்க பார்த்தியா!’ என்பது போல ராதாவைப் பார்த்துச் சிரித்தார் கிரிதர். “அடேங்கப்பா, நல்ல வாசனைடா இந்த பவுடர்!’ என்று அப்பாவும் அவர் பங்கிற்கு பவுடரை எடுத்து போட்டுக்கொண்டார். அதே சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பித்தளை டபரா டம்ளர்களில் சூடாக காபி எடுத்து வந்தார் கிரிதரின் அம்மா.
எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருக்க, “ராதா, உன் தம்பி சேகர் லண்டன்லதானே இருக்கான்? எப்படி இருக்கான் அவன்?” என்று ஆரம்பித்தார் கிரிதரின் அம்மா.
“நல்லா இருக்காம்மா. PR வேற கிடைச்சிடுச்சு அவனுக்கு.”
“ம்… ஆமாம், நீ எப்போ லண்டன் போற?”
“நான் ஏன் லண்டன் போகப் போறேன்?”
“யார் கிட்ட பொய் சொல்ற? நீ கூடிய சீக்கிரம் லண்டன் போயிடுவ, கிரிதர் உன்ன கூட்டிட்டுப் போயிடுவான். கல்யாணம் ஆன அன்னிக்கு உன் பக்கம் சாஞ்சவன்தானே அவன்? இன்னும் நிமிரவே இல்லயே! நீ ஆசைப்பட்டா என்ன வேணும்னாலும் செய்வான் அவன்” என்றார் கிரிதரின் அம்மா.
ராதா அதிர்ந்து போனாள். இன்றும் அவளை புதிய மருமகள் போல அவர்கள் நடத்துவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் உன் பக்கம் சாஞ்சுட்டான் போன்ற வார்த்தைகள் மிகவும் எரிச்சல் ஏற்படுத்தியது.
“என்னம்மா இது.. உன்கிட்ட சொல்லாம லண்டன் போவேனா என்ன? இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத பேசற?” என்று இடைமறித்தார் கிரிதர்.
“எனக்குத் தெரியும். நீங்க தாஜ் மகால் பார்கல? ஜெய்பூர் போகல? உங்க ஹனிமூனுக்கு கொடைக்கானல் போகல? என்ன உங்க கூட கூட்டிட்டு போனீங்களா என்ன? எனக்கு எல்லாம் தெரியும், நான் என்ன லூசா?” என்று திடீரென பல நாள் தேக்கத்தை வெளியே கொண்டு வந்து சீறினார் கிரிதரின் அம்மா.
“அம்மா, ஹனிமூனுக்கு உன்ன கூட்டிட்டு போக முடியுமா என்ன? சரி, அதை விடு, நீ கூட சிங்கப்பூர், மலேசியா, ஶ்ரீலங்கா , கைலாஷ் எல்லாம் போயிருக்க, என்ன கூட்டிட்டு போனியா என்ன? அண்ணா கூட நிறைய இடங்களுக்கு டிராவல் பண்ணியிருக்கார், அவன ஏதாவது கேட்டியா?” என்றார் கிரிதர் சற்று பொறுமையிழந்து.
“நாங்க ரிடயர் ஆகி எங்க பணத்துல போயிட்டு வந்தோம். நீ ஒண்ணும் எங்கள அழைச்சுட்டு போகல! இப்போ உன் அண்ணனைப் பத்தி பேசாத, நான் உன் கூடதானே பேசிட்டு இருக்கேன்!” என்றார் காட்டமாக கிரிதரின் அம்மா.
“அது எப்படி பேசாம இருக்க முடியும்? நாங்க லோக்கல்ல டிரிப் போனா உங்களுக்கு கோபம் வருது. அவர் வெளிநாடு போனா கூட உங்களுக்கு கோபம் வர மாட்டேங்குது, என்ன நியாயம் இது?” என்று தன்னையும் மீறி கேட்டார் ராதா.
“கொஞ்சம் சும்மா இருக்கியா லட்சுமி! இத பத்தி பேசற நேரமில்லை இது!” என்று கிரிதரின் அப்பா சற்று குரலை உயர்த்தவும், மற்ற மூவரும் கூட்டத்தை கலைத்து நகர்ந்தனர். ராதாவிற்கு படபடப்பு அடங்கவில்லை. அந்த குடியிருப்பின் கீழ்தளத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் அலைபேசியில் ரகு அழைத்தான்.
“ரகு, பாருடா, எதிர்பார்த்த மாதிரியே உங்க பாட்டி பிரச்சனை பண்ணிட்டாங்க!” என்று நடந்ததை ரகுவிடம் கூறினார் ராதா.
அவன் அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, “உன்ன நான் போகாதன்னு அப்பவே சொன்னேன். நீ கேட்கல. அப்பா மட்டும் போயிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது தெரியுமா?” என்றான்.
“அப்பா வருத்தப்படுவாருன்னுதான் போனேன். அவங்க அப்படி பேசினது கூட எனக்கு கஷ்டமா இல்ல ரகு. அப்பா மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் சொல்லு? அதைத்தான் என்னால ஜீரணிக்க முடியல. ஒரு கொழந்தை மாதிரி, எங்க அப்பாவுக்கு, எங்க அம்மாவுக்குன்னு பார்த்து பார்த்து வாங்கினார். கிட்ட தட்ட நானூறு கிலோ மீட்டர் வண்டி ஓட்டிட்டு வந்த அந்த மனுஷன் எதிர்பார்க்கறது எல்லாமே ஒரு அங்கீகாரம்தானே ரகு? அது கூட கிடைக்காட்டி எப்படி சொல்லு?”
“அம்மா, இப்படி யோசி, நம்ம படிச்ச ஸ்கூல்ல இருக்கற டீச்சர்ஸ்க்கு எல்லாம் நம்ம மேல ஒரு அபிப்பிராயம் இருக்கும். ஒரு இருபது வருஷம் கழிச்சு, அந்த ஸ்கூலுக்கு அவங்க எதிர்பார்க்காத ஒரு துறைல சாதிச்சுட்டு போனா அதை அவங்களால ஏத்துக்க முடியுமா சொல்லு? அப்படியே அவங்க ஏத்துக்கிட்டாலும், அந்த சாதனையை மனசார அங்கீகரிக்க முடியுமா? நிச்சயமா முடியாது.
அது மாதிரிதான் உங்க உறவும். கல்யாணம் ஆன புதுசுல அவங்க உன்னை எடை போட்டு வெச்சிருப்பாங்க. இருபது வருஷத்துல நீ என்ன தான் மாறினாலும் அவங்ககிட்ட இருந்து அங்கீகாரம் கிடைக்கிறது சிரமம். அதை முதல்ல நீ புரிஞ்சுக்க. அப்புறம், அப்பாவ நினைச்சு ரொம்ப கவலைப்படாத, ஹீ வில் பீ ஆல்ரைட். நீயும் நானும் போடாத சண்டையா? அதனால நான் என்ன மனசுடஞ்சா போயிட்டேன்? அப்பா இப்போ பாட்டி கையால தோசை சாப்டுட்டு இருப்பார். நீயும் பக்கத்துல உள்ள கிருஷ்ணா பவன்ல சாப்டுட்டு, கோபமா ராத்திரி படுத்துட்டு, சந்தோஷமா கார்த்தால எழுந்துக்கோ,” என்று தொண்டுக் கிழவன் போல அசாத்தியமான அறிவுரை கூறினான் ரகு.
அப்போது அருகிலிருந்த கோயில் மணியோசை கேட்க, “கடவுளே! அவர் அம்மா அப்பா கிட்டேயிருந்து கிரிதர் எதிர்பார்க்கும் அங்கீகாரம் அவருக்கு சீக்கிரம் கிடைக்கட்டும்!” என்று ஒரு பிராத்தனையை வைத்த வண்ணம் கிருஷ்ணா பவனை நோக்கி முகமலர்ச்ச்யோடு நடந்தார் ராதா.