
அதிகாலை மணி நான்கு இருக்கும்.
செய்யது, படலைத் திறந்துக்கொண்டு வீட்டின் முன்முற்றம் வழியே உள்ளே நுழைவதைக் கண்டதும், முத்துப்பொண்ணு இளம் காற்றுத் தீண்டி வெடித்தெழுந்த பஞ்சாக அவனை வரவேற்க வாசலுக்கு ஓடி வந்தாள்.
“வந்திட்டியளா மச்சா..! இன்னைக்கே பெருநாள்ங்கிறதால, அறிவிப்புக் கேட்டு ஊருக்கு வந்து சேர ஒருவேளை லேட்டாவுமோன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் மச்சா..!” அவளது காதல் மொழியில் கட்டியிருந்த வாயில் புடவையில் பதிக்கப்பட்டிருந்த கற்களும் கூட வைரம் போல் பற்கள் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தன. அந்த குளிர் நிலவொளியில் கந்தூரிக் கூடு போல அசைந்து அசைந்து முக்காடை வெட்கத்தோடு சரிசெய்து கொண்டாள்.
இரவெல்லாம் பயணித்து வந்ததில் செய்யதின் கன்னமெல்லாம் எண்ணெய் பசையோடு ஒட்டிப் போயிருந்தாலும் கட்டியவளைக் கண்ட சந்தோசத்தில் நொடியில் புதுமாப்பிள்ளை களை கொண்டுவிட்டான். அவளை அப்படியே அள்ளிக்கொள்ள கைகள் பரபரத்தன. அவள் தரப்பில் உவகையின் வார்ப்புகள் சிரிக்கையில் சிணுங்குவதுப் போல் ஒலித்தன.
“பிறை தெரிஞ்ச சேதி எட்டுன ஒடனே வெரசா கெளம்ப ஆரம்பிச்சிட்டேன். கடைய சாத்ததான் கொஞ்சம் நேரமாயிருச்சி. மாயவரத்துலேர்ந்து பத்தர மணிக்கெல்லாம் பஸ்ஸு ஏறிட்டாலும், பட்டுக்கோட்டைலதான் எப்பவும் போல ரொம்ப நேரம் நிக்க வேண்டியதா போச்சி!”
வந்தவனின் குரல் கேட்டு, “வாப்பா…!” என்றபடி மெல்ல படுக்கையிலிருந்து தாங்கலாக எழ முயன்றாள் அவனுடைய தாய் மரியம்மா.
“ம்மா..! நல்லாருக்கியா..!” மடியைத் தேடி ஓடும் இளம் கன்றை போல ஈன்றவளின் ஸ்பரிசம் பெற அவளருகே விரைந்து சென்றான். மேல் துண்டை சரிசெய்த வண்ணம் அனிச்சையாக அதன் ஒரு முனையை இழுத்து தலைக்குப் போட்டுக்கொண்டாள். முட்டிகளோடு முட்டிகள் உரசும் அளவிற்கு தாயோடு எதிரெதிராய் செய்யது ஒட்டி அமர்ந்துகொண்டான்.
தளர்ந்து, தோல் சற்று சுருங்கித் தொங்கிக்கொண்டிருக்கும் அவளது முதுமைக்கரங்களை வாஞ்சையோடு அழுத்தியபடி ஒரு சிறு குழந்தை மினாராவைப் பார்ப்பது போல் அவள் முகத்தைப் பார்த்தான். உம்மாவின் இளமைக்காலத் தோற்றம் அவன் கண்ணோரம் வந்து நிழலாட, மனம் கசிந்தது. சிறு வயதிலேயே கைம்பெண்ணாகி பெற்ற மக்களை அரும்பாடுபட்டு வளர்த்தவளாயிற்றே!
பெருநாள் இரவுகளில் இதோ இந்த முத்துப்பொண்ணை போலவே கண்விழித்து அத்தனை வேலைகளையும் தனி ஒருத்தியாய் செய்து முடித்து, காலையில் பசியாற எல்லாவற்றையும் நேரத்திற்கு தயாராக்கி வைப்பாள். ஒரு வேளை அதிகாலையே இவனுக்கு விழிப்பேதும் வந்துவிட்டால் போதும், “வா வாப்பா..! கோலியப்பம் திங்கிறியா? இந்த சேமியா குடி!” என இவன் அரைத்தூக்கத்தில் இருந்தால் கூட, எழுப்பி உட்கார வைத்து, தான் செய்த ஒவ்வொன்றையும் சுடச்சுட தீத்திவிட்டு அழகு பார்ப்பாள்.
“எனக்கென்ன வாப்பா, படைச்சவனோட கிருபையால நல்லாருக்கேன்! நீ நல்லாருக்கியா…? சதுரமெல்லாம் ராஹத்தா இருக்கா?” மகனைக் கண்ட உணர்ச்சிப் பெருக்கில் சட்டென கலங்கிய கண்களை சற்று தலையை மட்டும் குனித்து, உதடுகளை உள்ளிழுத்து மடக்கி பார்ப்பவர்களுக்கு நோகாமல் மேல் துண்டால் லாவகமாய் துடைத்துக் கொண்டாள்.
“பொற (பிறை) இருவத்தி ஏழுலேர்ந்து எம்புள்ள எப்ப வருவான் எப்ப வருவான்னு தவிச்சிக்கிட்டுக் கெடந்தேன்..! அல்லாஹ் கொண்டு வந்து சேத்துட்டான்! நல்லாருக்கியா வாப்பா..? நல்லாருக்கியா வாப்பா..? பல்லு வெலக்கிட்டு வா!” அவனது இரு தோள்களையும் கைகளால் பற்றிக்கொண்டபடி மெல்ல எழுந்து, “முத்துப்பொண்ணு..! புள்ளைக்கு தேத்தண்ணிப் போடுவே..!” மருமகளுக்கு குரல் கொடுத்தாள்.
“சரி மாமி…!” என்று பதிலளித்தவள், செய்யதை அறைக்கு வரும்படி கண்ணைக் காட்டினாள். வேறொரு உலகத்திற்கு தயாராகிவிட்டது போல் அவனும் புன்முறுவலோடு அறையை நோக்கி நடந்தான்.
ஆங்காங்கு சில்லுவிட்ட சிமிண்ட் தரைமேல் இடப்பட்டிருந்த பாயொன்றில் அவனது ஆறு வயது செல்ல மகள் அஸ்மா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
ரோஸ் கலர் போர்வையில் நெய்யப்பட்டிருந்த கத்தரிப்பூ கலர் பூக்களில் ஒன்றை கையில் சுருட்டிக்கொண்டு ஒருகணித்தபடி அழகான முயல் போல் படுத்திருந்தாள்.
“தங்கோ..!” என்று அப்படியே வாரி அணைத்து, உச்சி முகர்ந்து தூக்க நினைத்தவனை, ‘உஷ்! கொஞ்ச நேரம் ஆகட்டும்’ என்று சைகை காட்டினாள் முத்துப்பொண்ணு.
“கொண்டு வந்தியளா?”
“ம்ம்” என்று வானவில்லையே வளைத்து வந்தது போன்றதொரு பெருமிதப் புன்னகையோடு அந்த மணிப்பர்ஸை அவளிடம் நீட்டினான். வாடா மல்லி கலர் பேப்பரில் தகதவென மினுங்கிக் கொண்டிருந்த அந்த தங்கச் சங்கிலியைக் கண்டதும் முத்துப்பொண்ணுக்கு அகமகிழ்வு நிலைகொள்ளவில்லை, அவளை மீறி வாநீர் வடிந்தது!
ஆர்வத்தில் அணிந்து பார்க்க முயன்றாள், நுழையவில்லை! கணவனைப் பார்த்து செல்ல கோவத்தை வீசியவள், பட்டென சிரித்து அப்படியே அவனைத் தழுவிக் கொண்டு “மச்சான்னா மச்சாந்தான்!” என்று குதூகலித்தபடி அவன் வலுவான தோள்பட்டையில் தலையைச் சாய்த்து, அழுத்தமாக புஜமொன்றை பற்றிக்கொண்டு, அவன் கழுத்துப் பக்கம் ஒரு செல்ல முத்தம் கொடுத்தாள். அவனும் வெப்பமேறி, அவளது இடுப்போரம் மெதுவாக கை நுழைக்க, அவள் கூசி நெளிந்தபடி தன்னை விடுவித்துக் கொண்டாள்.
“போங்க, போங்க..! மூஞ்சி கழுவிட்டு, மாமிக்கிட்ட காமிங்க!” விரகமும் வெட்கமும் கலந்து முகம் சிவந்தவள், அதற்கெல்லாம் இது நேரமல்ல என்று சுதாரித்துக் கொண்டு மல்லுக்கு வந்தவனை விரட்டிவிட்டாள்.
அஸ்மா கொஞ்சம் கொஞ்சம் இங்குமங்கும் அசைந்தபடியும் புரண்டபடியும், செல்வச் சீமாட்டியைப் போல தூங்கிக் கொண்டிருந்தை அவன் கண்டபோது, அவள் கன்னங்களை அப்படியே கிள்ள வேண்டும் போலிருந்தது. ஆசை தாளாத வாப்பாக்காரன் லேசாக முத்தமிட, சட்டென அஸ்மா முழித்துவிட்டாள்.
“வாப்ப்பா…!” இலைகளை விளக்கி ஒளி சிந்தும் சந்தனப்பூக்களை போல, தங்க முயல்குட்டி தாவி எழுந்தாள். அப்பனும் அவளை அப்படியே வாரிக் கொண்டான்.
“ராஜாத்தி..! முழிச்சிட்டியா தங்கோ..!”
“எப்ப வந்தா..?”
“இப்பத்தாம்மா வந்தே..!”
“ம், முட்டாயி கொண்டு வந்தியா?”
“ம்”
“மிச்சரு?”
“ம்”
“க்ளாஸ்கோ ரொட்டி!”
“எல்லா வாப்பா கொண்டு வந்திருக்கேம்மா”
“சரி, சரி போ.. போ! வாப்பாவோட போயி மூஞ்சி கழுவு.!” என்று முத்துப்பொண்ணு மகளை அதட்டினாள்.
மூன்று மணிக்கே எழுந்து, வட்லப்பம், சேமியா, இடியப்பம் என பொருநாளுக்குரிய அத்தனை பண்டங்களையும் பலகாரங்களையும் செய்துவிட்டிருந்தாள்.
ஊதாங்குழலால் அடுப்பை ‘ஃபு ஃபு’ என்று ஊதிவிட்டு, அப்பச்சட்டியை வைத்தாள். சூடானதும் கரைக்கப்பட்டு சில்வர் பானையில் கரைத்து வைத்திருந்த மாவை வழிய வழிய குழிக்கரண்டியை விட்டு நிரப்பி சட்டி நடுவில் ஊத்த, ‘ஸ்..’. என்று ஆவிபறந்தது. லாவகமாய் பிடித்துணியை வைத்து பற்றி மெல்லியதாய் இங்கிட்டும் அங்கிட்டும் சுற்றி அடுப்பில் திரும்ப வைத்தாள்.
“என்ன கோலியப்பமா..! ” செய்யது வாயைப் பிளந்துக் கொண்டு அவள் பக்கம் வந்தான்.
“ஆமா, அவள பாத்துக்கிருங்க, கோபால் பல்பொடினா போதும் பாதி தின்டுருவா. போன மொற வந்தப்ப பேஸ்ட்டு வாங்கிட்டு வரச் சொன்னேனே, கொண்டு வந்தியளா? பையில இருக்கா?”
“ஏன் பேஸ்ட்டு இனிக்காதோ, உனக்கு பேஸ்ட்டுல தீட்டணும். அதுக்கு அவ இத திங்கிறா அத திங்கறான்னு அஸ்மாவ காரணம் காட்டு!” என்றவனை ஒரு கணம் கோபமாய் முறைத்துவிட்டு, “ம்க்கூம். நா வேணா உமிலேயே தீட்டிக்கிறேன்” அவனிடம் பதில்களை எதிர்பார்க்காமல் தன் வேலைகளைத் தொடர்ந்தாள்.
“சரி… விடு. பசியாற எல்லாமே செஞ்சிருக்க போல, (வேலைக்கு) ராத்தா வூட்டுக்கு போவல?”
“பெருநாளைக்கி இங்கேயே இருக்கலாம்னு பாத்தேன். அவ்வொ மகமாரும் வந்துருக்காகளா.. அத சாக்கா வச்சிக்கிட்டு பதுவுசா எடுத்து சொன்னேன், சரி மறுநா வந்துருன்னு ஒப்புக்கிட்டாக”
“ம்ம்”
“சரி, தேத்தண்ணி குடிச்சிட்டு, கறி வாங்கிக்கிட்டு வந்திர்யளா?”
“எவ்வளவு?”
“முக்கா கிலோ வாங்கிகிட்டு வாங்க!”
“ராத்தா வூட்டுக்கு போயிருந்தா அவ்வொளே எல்லாம் குடுப்பாங்கல்ல! அரை கிலோ போதும்ல, அதுக்கே முன்னூறு நானூறு வரும்! எதுக்கு முக்கா கிலோ? உங்க மாமா கடையில ஆயிரம் ரூவாதான் கூட்டிக் குடுத்திருக்காக. நீ பாட்டுக்கு இஸ்ட்டத்துக்கு செலவு பண்ணாத ஆமா!”
“ஆமா ஆமா நாந்தான் சாப்புட போறேன். காலமுழுக்க இப்படியே இருந்துருலாம்னு பாக்குறியளோ… ஊரு ஒலகத்த போல இருக்க ஒரு நாளைக்கி கூட ஆசப்பட கூடாதோ?” அப்பச்சட்டியை போல அவள் பேச்சிலும் ஆவிப் பறக்கத் தொடங்கியது.
“அடியே.. ஏண்டி பெருநாளும் அதுவுமா இப்படி பொலம்புற… நீ ஆசைப்பட்டேனுதான ரெண்டாயிரம் ரெண்டாயிரமா சேத்து வச்சி சங்கிலி வாங்கிகிட்டு வந்துருக்கே. அதுவும் பத்தாம ஐயாயிரம் அங்கிட்டும் இங்கிட்டும் பொரட்டித்தா வாங்கிகிட்டு வந்துருக்கேன். கேட்டுக்க!”
“சரி சரி போயி மாமிக்கிட்ட காட்டுங்க!” என்று நினைவூட்டினாள்.
பெற்றவள் கையில் வாங்கிப் பார்த்ததும் பூரித்துப் போனாள். கண்கள் பனித்தன.
“பரக்கத்தா இரு வாப்பா! அல்லாஹ் ஒங்கொமருக்கு இன்னும் நெறையா செஞ்சு போட நாடுவான்! நல்ல நாளும் பெரிய நாளுமா பொன்ன கண்ணுல காட்டிட்ட, அல்லா ஒங்கள இது போல எப்பவும் நிரப்பமா வைக்கட்டும்! பரக்கத்தா இரு! பரக்கத்தா இரு!” தழுதழுப்போடு பிரார்த்தித்து வாழ்த்தினாள். அந்த நெகிழ்ச்சிக் குறையாமலேயே, “மய்யதுநாண்டவுளே..!” என்று கண்ணீர் சொட்ட கைகளை உயர்த்திக் கலங்கியவள், “எம் புள்ளைங்களை என்னைக்கும் சீரோடும் சிறப்போடும் வச்சிருங்க!”
செய்யதும் தனது தாயோட தூஆவில் கரைந்து போனான். ஏனென்றால் இதுதான் அவன் சம்பாத்தியத்தில் வாங்கிய முதல் பவுனு. அதுவும் முத்துப்பொண்ணு அவ்வப்போது தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்ததால்!
“சும்மா குடுக்குறத வாங்கிக்கிட்டு வராம, ஈரலும் சேர்த்துப் போட சொல்லுங்க! நீங்களும் அஸ்மாவும் திம்பிய”
“ம்” என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு கறிக்கடைக்கு செல்லலானான்.
மாமியாரையும் அஸ்மாவையும் குளிக்க அனுப்பிவிட்டு, செலவு சாமானை அரைக்க தொடங்கினாள். விசேஷ நாளின் இஞ்சி பூண்டின் பச்சை வாசம் வீடெங்கும் பரவத் தொடங்கியது.
சொல்லியபடி எல்லாவற்றையும் சேர்த்துப் போட்டு வாங்கிக்கொண்டு செய்யது ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான்.
“அவ்வொ ரெண்டு பேரையும் கொளத்துக்கு அனுப்பிட்டேன், நீங்களும் குளிச்சிட்டு வந்துருங்க!” என்று அவனுக்கு தனது அடுத்த கட்டளையைப் பிறப்பித்தாள்.
“நீ எப்ப போவா?”
“ஆம்பிளைகளுக்கெல்லாம் முடிஞ்சி எங்களுக்கு பத்து மணிக்கு மேலதான தொழுகை! அதுனால ஆணம் (குழம்பு) காய்ச்சி வச்சிட்டு போயிறே(ன்). நீங்க பள்ளிலலேந்து வந்தா பசியாற சரியா இருக்கும்”
“அதான் தவலை, செம்புச் சட்டியில எல்லாம் தண்ணி நெறச்சி வச்சிருக்கியே… நாம இங்கேயே சேர்ந்து குளிக்கலாமே…!” வழிந்தபடி அவளை நெருங்கினான்.
“ஆமா ஆமா குளிக்கலாம் குளிக்கலாம்.. அங்கிட்டு போவியளா! அப்புறம் தண்ணிக்காக ஒரக்காணத்துக்கும் வூட்டுக்கும் நான்ல்ல நடையா நடக்கணும்!” அவனை முறைத்துக்கொண்டே செல்லமாகத் தள்ளிவிட்டாள்.
“அட, வா..ங்கிறேன்..” செய்யது அவளது கையைப் பிடித்து இழுக்க,
“சும்மா போங்க! பொழுது போவுது..! பள்ளி வாச(ல்) கொளத்துல சேறு மணக்கும், ஆரியாங்கொளம் போங்க!”
“சரி” என்று ஒரு வழியாக சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.
ஊதா, பச்சை, வெள்ளை கலரில் கட்டம்போட்ட கைலி மற்றும் சந்தன கலர் சட்டையில் செய்யதும், தங்க பார்டரில் மாம்பழ கலர் பாவாடை சட்டையில் அஸ்மாவும், வெள்ளை சட்டை, ஊதா அரக்கு பச்சை கட்டம் பூப்போட்ட கைலியும், சிவப்பு ஆரஞ்சு வெள்ளை பூ பிறை போட்டிருந்த இளம்பச்சை மேல்துண்டில் மாமியாரும் முத்துப்பொண்ணு கண்ணுக்கு நிரப்பமாகத் தெரிந்தார்கள்.
“வெள்ள வேட்டி எடுக்க சொன்னா கேக்குறியளா..! தலையில கர்ச்சிப்பு கட்டல?”
“சோப்புல வச்சிருக்கேன்ட்டே.! பள்ளில ஒது செஞ்சிட்டு கட்டிக்கிறேன்..”
“வரிக் காச மறந்துறாதிய!”
“எடுத்துக்கிட்டேன் முத்துப்பொண்ணு!”
“தொழுகை முடிஞ்ச ஒடனே முஸாபா செஞ்சி, மரைக்கால்லாம் தனியா ஹஜ்ரத்துக்கு காசு குடுப்பாங்களாம்ல. ராத்தா சொல்லிக்கிட்டாக. இன்னைக்கு நீங்களும் கொடுக்கணும்!” என்று மறு கட்டளையைப் பிறப்பித்தாள்.
“நான்ல்லாம் குடுத்தா நல்லாருக்காதுடீ.. நானே ஒரு கடைல வேலைக்கு இருக்கவன்”
“ஹஜ்ரத்துக்கு குடுத்தா நல்லதுதான?”
“ஆமா.. அவர்லாம் நம்மள கண்டுக்கிட்டாலும்!” என்று சலித்துக்கொண்டான்.
“ஏங்க அப்படி சொல்லுறிய… அஸ்மாவுக்கு நல்லா ஓதி குடுக்குறாராம். பள்ளியில எல்லா புள்ளைங்க கிட்டயும் ஒரே மாதிரிதான் நடந்துகிறாராம். முன்ன இருந்த ஹஜரத்து மாதிரி இல்ல இவரு. பாக்க நல்ல ஆளாத்தான் தெரியுதுங்றாங்க”
“எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுடி… வெக்கமா இருக்கு!”
“ஆமா, காலத்துக்கும் இப்படியே இருங்க!”
இவளுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு என்று நினைத்தவனாய், “சம்பளம் கொஞ்சம் கூடுன ஒடனே நீ ஏதேதோ சொல்றா, சரி செய்றேன்” என்று பள்ளிக்குச் சென்றுவிட்டான்.
பெருநாளைக்குரிய பிரசங்கம், தொழுகை மற்றும் பிரார்தனைகள் என்று எல்லாம் முடிந்த பிறகு முத்துப்பொண்ணு அறிவுறுத்தி அனுப்பிய உபரி வேலைகள் அத்தனையையும் பள்ளியில் செவ்வென செய்துவிட்ட சந்தோசத்தோடும் புதிதாய் எதையோ சாதித்துவிட்ட மிடுக்கோடும் வீட்டிற்குள் நுழைந்தான்.
முத்துப்பொண்ணு குளிச்சி முழுகி, புது துணிமணியில் சும்மா சினிமா நடிகையாட்டம் பளப்பளவென மின்னினாள்.
“என்னடி சீல..இது! சட்ட ஒரு கலர்ல கையி ஒரு கலர்ல இருக்கு!”
“எதோ சமந்தா ஸ்டைலாம்..! நம்ம ஆரிபா தச்சிக்கிட்டு வந்தாளா.., எனக்குன்னு சொல்லாம நானும் கணேசன் அண்ணன்ட்ட அதுபோல தச்சிக் கேட்டேன். ராத்தா வூட்டு துணிமணியோடு இதையும் குடுத்ததுனால, நல்லா தச்சி தந்துரிச்சி மச்சா!”
ஒரு பக்கம் அவளைப் பார்க்க சந்தோசமாகவும் இன்னொரு புறம் எதுவும் புரிபடாமலும் ஒப்புக்கு ஏதோ சிரித்து வைத்தான்.
“சரி, நீங்க மாமி புள்ள எல்லாம் வாங்க. பசியாற வக்கிறேன்!” என்று அமர்ந்து சாப்பிடும் தடுக்கை எடுத்துப் போடச் சென்றாள்.
“சரி வை! சாப்ட்டுட்டு நானும் கொஞ்சோ பழம்பள்ளியாசல் வரை பொய்ட்டு வர்றேன்” என்று புதிய அவசரத்தைக் காட்டவும் செல்ல கோபத்தோடு முறைத்தாள்.
“களவாணி.. சீட்டாடத்தானே? உங்களுக்குன்னே அந்த கருவக்காட வசமா விட்டு வச்சிருக்காக பாருங்க” என்று அவனைச் சத்தம் போட்டவள், அருகே மாமியார் இருப்பதை உணர்ந்தவுடன் ‘அல்லாஹ்வே!’ என்று நாக்கை கடித்து கொண்டாள்.
உம்மா, மகள் சகிதம் பெருநாள் பசியாறலை வயிறு முட்ட ஒரு பிடி பிடித்தான் செய்யது.
“வாப்பா, வாப்பா! பெருநா காசு குடு வாப்பா..! மணலுக்கு போவணும்!” என்று சாப்பிட்டுக்கொண்டிருந்த அஸ்மா சட்டென செய்யதின் மடியில் சாய்ந்து புரண்டபடி சிணுங்கத் தொடங்கினாள்.
“இப்பவே என்னடி மணலு?! பொழுது விடிஞ்சி இன்னும் உச்சி உருமங்கூட ஆகல.. எவ்வொடி அங்கப் போறது? அஸருக்கு அப்புறம் போவலாம். உம்மா கூட்டிக்கிட்டு போறேன்” என்று முத்துப்பொண்ணு ஒரு அதட்டலைப் போட்டாள்.
“ஹூம்… நா இப்பவே போறே…” அஸ்மாவும் விடுவதாகயில்லை! அழ ஆரம்பித்தாள்.
“வெளக்கமாறு பிஞ்சிரும், இன்னும் சோறு கூட உங்கல, அதுக்குள்ள மணலா மணலு!” என்று சத்தம் போட்ட முத்துப்பொண்ணை நிறுத்தச் சொல்லி கையைக் காட்டியபடி செய்யது அஸ்மாவிடம்,
“சரி ராஜாத்தி, வாப்பா வெளில போயிட்டு வந்து அப்புறம் காசு தர்றேன் என்ன?”
“எனக்கு இப்பவே காசு குடு!”
சட்டைப்பையை தடவியவன், அதிலிருந்து ஐந்து ரூபாய் நாணயமொன்றை எடுத்தான்.
“சரி இந்தா, சத்திவேலு மாமா கடையில ஏதாவது வாங்கித் தின்னு. மணலுக்கு உம்மா பொழுதொட்டு கூட்டிப் போவும், சரியா? அது வர போயி புள்ளைகளோட இங்கினயே வெளயாடணும். சரியா செல்லக்குட்டி?”
அப்பனுடைய கெஞ்சலுக்கு அஸ்மா ஒரு வழியாக இறங்கி வந்தவளாக தனது வாப்புச்சி அதாவது தனது பாட்டியார் பக்கம் சென்று நல்லபிள்ளையாய் அமர்ந்துகொண்டாள்.
முந்தைய தினம் பகலெல்லாம் பட்டறையில் நின்று, ராத்திரியெல்லாம் கண் விழித்து வந்தவனுக்கு, மதியம் பொண்டாட்டிக்காரி ஆக்கி வைத்த சோறும், காய்ச்சி வைத்த கறியானமும், வாழைக்காய் பருப்புப் போட்ட கலியாவும், தேங்காய்பால் ரசமும், இனிப்பு மங்காய் பச்சடியும், உண்மையில் அவனுக்கு அதெல்லாம் பெரிய கல்யாண விருந்து போலதான் அமைந்துப் போனது என்று சொல்ல வேண்டும். உண்ட களைப்பில் அவன் சற்று அயர்ந்து எழுந்த போது, மாலை மணி நான்கு பத்து! பள்ளியில் அஸர் தொழுகைக்கு நகராவும் அடித்துவிட்டார்கள்!
எதற்கோ அரக்க பறக்க அவன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ததில் முத்துப்பொண்ணும் மகளும் கூட விழித்துவிட்டார்கள். பிறகு என்ன அஸ்மாவுக்கு இனி மணலுக்குப் போயே ஆகணும்!
முத்துப்பொண்ணும் விறுவிறுவென எழுந்து முகத்தைக் கழுவிட்டு பரபரப்பாக தேத்தண்ணீர் போட அடுப்படி பக்கம் சென்றாள். பிறகு அஸ்மாவுக்கு தலைபின்னி, முன் பின் தலையின் இரு புறங்களிலும் வண்ண வண்ண கற்கள் பதித்த சைடூசிகளை சொருகிவிட்டாள்.
இளம் வெயில் பட்ட அவளின் பிஞ்சு கருங்கேசம் எண்ணெயின் சேர்க்கையில் டாலடித்தது. வாசல்பக்கம் ‘மாத்தாடு மாத்தாடு மல்லிகை’ என்று சைக்கிளில் கூவி கூவி விற்றுக்கொண்டிருந்த பக்கத்து ஊரு பூமணியிடம் இரண்டு முழம் பூவையும் வாங்கி சரிபாதியை வைத்துவிட, குட்டிப்பெண் அஸ்மா ரதி போல ஜொலி ஜொலித்தாள்.
மேலும் கொஞ்சம் பவுடர் பூசி சிறிய பாட்டிலிலிருந்து மினுக்கத்தை எடுத்து கன்னங்களில் லேசாக அப்பி விட, கைபட்டு அஸ்மாவுக்கு காது கூசியது, ஹா ஹா வென்றுச் சிரித்தாள்!
“நீங்க எங்க கெளம்பிட்டிய?” வெளியில் எங்கோ செல்வது போல் ஆயத்தமாகிக் கொண்டிருந்த செய்யதை கவனித்துவிட்டு முத்துப்பொண்ணுக் கேட்கவும்,
“பயலுவ படம் பாக்க கூப்புட்டானுவட்டே” என்று சற்று நிறுத்தியவன், “பட்டுக்கோட்டைக்கு போவப் போறேன்” என அசடு வழியச் சிரிக்கலானான். “ஊருக்கு வந்தா கூட்டாளிமாரோடு சுத்தப் போயிருவியளே..! சரி, எங்கள மணல்ல எறக்கி உட்டுட்டு போங்க!”
“சீக்கரம் கெளம்புட்டே மணியாவுது..!” மனைவியையும் மகளையும் அவசரப்படுத்தினான்.
வாப்பாக்காரன் கொண்டு வந்திருந்த சங்கிலியை வாப்புச்சிக்காரி, தன் கையால் ‘பிஸ்மி’ சொல்லி போட்டுவிட்டு, அதே சந்தோசத்துடன் தனது சுருக்குப்பையிலிருந்த நூறு ரூபாய் தாளையும் பேத்தியிடம் நீட்டினாள். உற்சாகமான அஸ்மா பாட்டியாரைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் ஒன்று கொடுக்க, “நல்லா இரு ராசாத்தி! நல்லபடியா பொய்ட்டு வாங்க!” என அவளும் நெற்றி, கன்னங்களென முகம் முழுக்க முத்த மழை பொழிந்து, வழியனுப்பி வைத்தாள்.
சைக்கிளில் ஏறியதும், முத்துப்பொண்ணு முகத்திலும் மனதிலும் பெருமிதமும் சந்தோசமும் ஏகமாய் குடிக்கொண்டிருந்தன!
செய்யதைப் போல் முத்துப்பொண்ணுக்கும் தந்தையில்லை. ஒரு அண்ணன், மூன்று அக்காமார்கள். அவளுடைய தாய் பல்கீஸ் வீடுகளுக்கு தண்ணீர் குடங்களைத் தூக்கிக் கொடுத்தும், வீட்டு வேலைகள் செய்தும்தான் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினாள். நல்லுள்ளம் படைத்த பெரிய வீட்டு ஆண்கள், பெண்களின் உதவியோடு எப்படியோ மற்ற மூன்று பெண்களையும் கரை சேர்த்தாள்.
தனது கடைசி காலத்திற்காக அவள் மிகவும் நம்பியிருந்த மகன்காரன்தான் கல்யாணம் ஆனதும் முற்றிலும் மாறிப்போனான். கொஞ்ச நாளிலேயே பொண்டாட்டிக்காரி வீட்டிலேயே குடிக்கொண்டும்விட்டான். இருந்தாலும் எதற்கும் அயர்ந்துவிடாமல் எப்போதும்போல வீடுக்கு வீடு வேலைகள் செய்து கொடுத்தும், தண்ணீர் குடங்களை தூக்கி சுமந்துத் திரிந்தும் கிடைத்த சொற்ப வருமானத்தில்தான் இவளையும் ஒருவனிடம் கைபிடித்துக் கொடுத்துவிட்டுதான் இந்த துன்யாவிலிருந்து அவளும் விடைபெற்றுக் கொண்டாள்.
தனது தாய் பல்கீஸ் பிரதானமாக வேலை செய்து வந்த வீட்டில்தான் முத்துப்பொண்ணும் இப்போது உதவி ஒத்தாசைக்கு சென்று கொண்டிருக்கிறாள் என்பதை விட அவர்களின் அன்புக்கட்டளையின் பேரிலும் நன்றிக்கடனின் பொருட்டிலுமே பெற்றவளின் பெயரைக் காப்பாற்றி வருகிறாள். பிரியத்தோடு அவர்கள் தரும் சோறும், காசும் முத்துப்பொண்ணு செய்து கொடுக்கும் வேலைக்கு கூலியாகக் கருத முடியாது. புதிதாய் பார்ப்பவர்களுக்கு இவளும் அவர்கள் வீட்டு பெண்தான் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு முத்துபொண்ணிடம் அந்த வீட்டிலுள்ளவர்கள் பாசத்தைக் கொட்டுவார்கள்.
இவளை கைப்பிடித்திருக்கும் செய்யதும் கூட அந்த வீட்டின் சம்பந்தபுரத்துக் கடையொன்றில் வேலை பார்த்து வந்தவன்தான். செய்யதுக்கு ஒரே ஒரு தங்கச்சி. நல்ல நாள் பெரிய நாளைக்கு கூட மாப்பிள்ளைக்காரன் அவளை பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க மாட்டான். நாளை கூட வருவாளா என்று தெரியவில்லை. அதனால் இந்த மாமியார்-மருமகள்-மகன்-பேத்தி உறவென்பது கிட்டத்தட்ட விதியால் பூட்டப்பட்ட கூண்டுப் பறவைகள் போலதான். கூடு கொஞ்சம் ஆட்டம் கண்டால் கூட ஒவ்வொரு இதயமும் ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்ளும்!
செய்யது ரோட்டு மேட்டிலேயே சைக்கிளை நிப்பாட்டிக் கொள்ள, வெண்மேகம் சூடிய முழு நிலவாய் மேல் துப்பட்டியை (புடவை போன்ற வெண்ணிற மேலங்கி) சரி செய்துக்கொண்டு முத்துப்பொண்ணு இறங்கினாள். மணலுக்கு வந்துவிட்டதில் அஸ்மாவுக்குதான் எத்தனை குதூகலிப்பு! ‘ஹை, ஹை’ என்று சந்தோசத்தின் உச்சத்தில் நீரூற்றைப் போல் குதித்தாள்!
“சரி, நீங்களும் பாத்து பொய்ட்டு வாங்க, ராத்திரி சோறு உங்க வந்திருவியல்ல?”
“அட, போங்குறேன்! படம் முடியவே எட்ரை ஆயிரும், பஸ்ஸ புடிச்சி வர்றதுக்குள்ள மையிருட்டாயிரும்! எனக்காக வெயிட் பண்ணாம, சோறு உண்டுட்டு நீங்க படுத்துருங்க!”
“கொமரனாட்டம் திரிய பாக்குறிய, போங்க! போங்க!” காதலுடன் கடிந்தவளாய் அவனை அனுப்பி வைத்தாள்.
***
ரோட்டின் மேட்டிற்கும் மணல் என்கிற பெருநாள் கொல்லைக்கும் இடையே ஒரு சின்ன ஓடை போல ஆற்று நீர் கடலை நோக்கி ஓடிக் கொண்டிருக்க, அதை ஒட்டிய ஒத்தையடி பாதையின் இருபுறமும் ஒரு நூறு மீட்டர் தூரத்திற்கு கருவேலங்காடும் உண்டு. அதை கடந்துவிட்டால் கந்தூரித் திருவிழாக் கூட்டம் போல கண்ணை நிறைக்கும் அஸ்மாவின் மணல் கொல்லை வந்துவிடும்.
மக்கட் கூட்டம் நடந்து நடந்து இந்த பாதை முழுக்க மணலாக தெரிந்தாலும், வெறும் காலென்றால் பார்த்துதான் நடக்க வேண்டும், சில சமயம் முள் தைக்கவும் வாய்ப்புண்டு.
இந்த மணல் கொல்லைக்கு மூன்று வழிகளில் வரலாம். தெற்கிலிருந்து வரும் வழி இது. வடக்கூர் மற்றும் புதுமனைத் தெரு மக்கள் வேறொரு பாதையிலும், மேற்கே உள்ளவர்கள் வண்ணாங்கொல்லைக்கு எதிர்த்த மாதிரி உள்ள வழியாகவும் வருவது வழக்கம். தங்களது வசதிப்படி மாறி வருவதும் உண்டு. வரப்போக வரையறைகள் என்று எதுவுமில்லை.
முத்துப்பொண்ணும் அஸ்மாவும் மணலுக்குள் நுழைந்த போது பெண்களும், குமரிகளும், பிள்ளைகளும் எறும்பு போல உள்ளே போவதும் வருவதுமாய் இழைந்து கொண்டிருந்தார்கள். பொதுவாக பருவம் வந்த ஆண்பிள்ளைகள் யாரும் இங்கே வருவதில்லை, அனுமதியும் இல்லை. ஆனாலும் எல்லாவற்றிக்கும் சேர்த்த மாதிரி இங்கே வரும் சிறுவர்கள் செய்யும் சேஷ்ட்டைகளுக்கும் மூன்று நாட்களுக்கு இங்கே அளவே இருக்காது!
ஒரு கருவேல மர நிழலில், ‘பாம்..! பாம்..!’ என ஒலியைப் பெருக்கியும், பெட்டியின் மூடியை அடித்து அடித்து மூடியும் பிள்ளைகளை தன் பக்கம் வரவழைத்துக்கொண்டிருந்தார் எப்போதும் தெரு பக்கமே சுற்றிக்கொண்டிருக்கும் ஐஸ்கார தாத்தா. மூத்தவர்களின்றி தனியாக வந்த குழந்தைகள் தங்களது காசையெல்லாம் ஏகத்திற்கு அவரிடமே கரைத்துக் கொண்டிருந்தனர்.
இதோ “ம்மா.. ம்மா! ஐஸ் வாங்கித்தா..!” என்று அஸ்மாவும் தன் பங்கிற்கு ஆரம்பித்துவிட்டாள்.
மாட்டேன்னு சொல்லாமல், முத்துப்பொண்ணு அஸ்மாவிற்குப் பிடித்த சேமியா ஐஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்தாள். அவளது சட்டை பாவாடை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் றோஸ் நிறத்தில் ஐஸ் சொட்டி பாழாகத் தொடங்கியது.
“என்ன உம்மாவும் மகளும் புதுப்பொண்ணு மாதிரி ஜொலிக்கிறியளே..!”
அவளுக்குப் பரிட்சயப்பட்ட குரல் கேட்கவே திரும்பிப் பார்த்தாள்.
“என்ன மும்தாஜி, தண்ணியள்ள வந்தியாக்கும்… ஏம்மூஞ்சியெல்லாம் இப்புடி ஒட்டிக்கெடக்கு..?”
“நோன்புடீ..!”
“என்ன நோம்பா? இது என்ன நோம்பு..!” என்று அவளைக் கண்டு வியந்தாள்.
“நமக்கு நுப்பதும் புடிச்சாதான் நோம்பு நோம்பு மாரி தெரியும்!”
“இது என்னடி புதினமா இருக்கு…!” என்று மூக்கில் விரல் வைத்தபடி, சிரித்துக்கொண்டே முத்துப்பொண்ணு அவளிடமிருந்து நகர்ந்து சென்றாள்.
‘வழக்கம்போல பெருநாள் கொல்லைக் கடைகள் கண்களைக் கொள்ளை கொண்டன! கீழ்நிலையிலிருந்து மேல்தட்டு வீட்டினர் வரை அனைவரும் அங்கே கடைகளை விரித்திருந்தனர். பெரும்பாலும் பெண்களே! பலர் தங்களது வெண்ணிற மேல்துப்பட்டியை எசவுக்கேற்பத் தளர்த்திக்கொண்டு பலகாரங்களைப் பொரிப்பதிலும், பொட்டலங்களை மடிப்பதிலும், காசு வாங்குவதிலும், சில்லறைகளைக் கொடுப்பதிலும் நின்றும் அமர்ந்தும் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருந்தனர். சிலருக்கு அந்த பேணுதல்கள் எல்லாம் தேவைப்படவில்லை, வீட்டிலிருப்பது போலவே சேலைகளிலேயே அந்த கடிசத்தைக் கடைப் பிடித்தார்கள்.
கொஞ்சம் சிறுவர் சிறுமியரும் ஓரிரு ஆண்களும் தங்கள் வீட்டு பெண்களுக்கும், உம்மாமார்களுக்கும், பாட்டியார்களுக்கும், அக்கா-தங்கச்சிமார்களுக்கும் உதவியாய் வியாபாரத்திற்கு துணை நின்றனர். அதே போல மற்ற வீட்டு பெண்களும், பிள்ளைகளும் இங்கும் அங்குமாக கண்டும் உண்டும் பெருநாள் கொண்டாட்டங்களில் திளைத்துக் கொண்டிருந்தனர். மணி இப்போது ஐந்துதானே ஆகிறது!
கொதிக்கும் எண்ணெச் சட்டியில் உருண்டு மிதந்து கொண்டிருந்த றால் வாடா, வடை, வாழைக்காய் பஜ்ஜி, முட்டை பஜ்ஜி, சம்சா, அரிசி முறுக்கு, அச்சு முறுக்கு என்று ஒருபுறம் இழுக்க, இனிப்பாய் இருக்கும் மடக்கு பூரி, சிலேபி, லாடு (லட்டு), சேவு, பூவந்தி, தொதலு, அல்வா, மிக்ஸர், காரா சேவு, பக்கோடா, காரா பூந்தி என்று இன்னொரு புறம் பார்க்கப் பார்க்க தாய்க்கும் மகளுக்கும் நாக்கில் எச்சில் வெள்ளம் ஊற ஆரம்பித்தது. இதில் பரோட்டா கடை வேறு! சால்னா வாசம் அந்த இடத்தையே காலி பண்ணிக் கொண்டிருந்தது.
அஸ்மாவுக்குதான் எதை வாங்கிக் கேட்பதென்றே தெரியவில்லை. எல்லாவற்றையும் கண்களாலேயேச் சப்புக்கொட்டி விழுங்கிக் கொண்டிருந்தாள்.
“முத்துப்பொண்ணு… இங்க வா! எங்கிட்ட வாங்கு! எங்கிட்ட வாங்கு!” என்று ஆளாளுக்கு அவர்களை குரல் வழியே தங்கள் கடைகள் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த ஒளிவான பிள்ளையோடு இளம்பெண் கதீஜா, இவளை நோக்கி கையசைத்தாள்.
கதீஜா இவளை போலவே இன்னொரு வீட்டில் உதவியாளாய் பணி செய்து வருபவள்; முத்துப்பொண்ணை விட எட்டு வயது இளையவள். அந்த வீட்டுப் பிள்ளையோடுதான் மணலுக்கு வந்திருக்கிறாள்.
“கய்ஜாம்மா..! நீ எப்ப வந்தா..?”
“நாலு மணிக்கே வந்துட்டங்க்கா”
“ஸபுரு வரல?!”
“அவ்வொளுக்கு மேலுக்கு நல்லா இல்லையாம். புள்ள வேற அழுதுக்கிட்டே இருந்திச்சா, அதா உடுப்பு உடுத்திவுட்டு மணல்ல வச்சிக்கிட்டு நில்லு நான் சொணங்கி வர்றேன்னு சொன்னாக”
குழந்தையைப் பார்த்தாள். பாலாடைக்கு மேலாடை போட்டுவிட்டது போல பளபளவென இருந்தது. கரும்பச்சை பட்டில் நுணுக்கமான தங்க ஜரிகை வெளிப்பாடுகள் நிறைந்த பாவாடை சட்டையில் மிகவும் அழகான சந்தன பொம்மை போல அந்த பிள்ளை முத்துப் பொண்ணுடைய கண்களை விரிய வைத்தாள். அந்த குழந்தையைப் பார்க்கும்போதே ஆனந்த வெள்ளம் அவளுக்குள் ஊற்றெடுத்தது.
சிரிக்கவோ அழவோ இல்லை! கம்மென தன் உருண்டைக் கண்களால் தன்னைப் பார்ப்பவர்களை அந்த சின்ன வண்ணக்கிளி வசீகரித்துக் கொண்டிருந்தாள். முத்துப்பொண்ணு கதீஜா வைத்திருந்தப் பிள்ளையையும் அஸ்மாவையும் மாறி மாறிப் பார்த்து, மனசுக்குள் ரகசியமாய் பூரித்துக் கொண்டாள்.
“புள்ளைக்கு மூணு வயசு ஆச்சுல்ல கய்ஜா?”
“ஆமாக்கா, நீ இப்பதான் வர்றியோ..?”
“ஆமா.. மச்சாந்தான் உட்டுட்டுப் போறாக!”
“காலையில கறி வாங்கிகிட்டு போவையிலயே அண்ணனைப் பாத்தேன். இன்னைக்கு ராத்தா வூட்டுக்கு நீ போவலயோ..?”
“போவலடி. சரி வா, ஏதாவது வாங்கிட்டு அங்கிட்டு போயி உக்காருவோம்”
கதீஜா தயங்கினாள். “சும்மா வாடீ..!” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.
இறால் மற்றும் மசாலா சேர்த்து அரிசி மாவில் வடை போல் செய்யும் வாடாவின் வாசம் முத்துப்பொண்ணை எதை வாங்குவது என யோசிக்க வைக்காமல் வாங்க வைத்தது.
“இருவது ரூபாய்க்கு வாடா குடு” பொரித்துக் கொண்டிருந்த ஜுனைதாவிற்கு குரல்கொடுத்தவள் கூடவே நாலு சம்சாவையும் சேர்த்துக் கட்டிக்கேட்டாள்.
“ம்மா, ம்மா முட்ட பஜ்ஜி..! முட்ட பஜ்ஜி..!” என்று அஸ்மா கெஞ்சத் தொடங்கினாலும், “ம்மா அப்புறம் வாங்கித் தர்றேன்” என்றதும் சமாதானமாகி ஒண்ணும் சொல்லாமல் நல்லபிள்ளையாய் பின்னாடியே வந்தாள்.
வழியிலே விளையாட்டு ஜமான் கடையை முஜிபு விரித்திருந்தான். பலூன், ஊக்குரி, கடிகாரம், காத்தாடின்னு மட்டுமில்லாமல் ஆமணக்கு பாலில் முட்டைவிட்டுக்கொண்டு, அதன்பால் பிள்ளைகளை தன்பக்கம் வளைத்துக் கொண்டிருந்தான். அஸ்மாவுக்கு ஒரு காத்தாடியும் சின்ன பிள்ளைக்கு பலூனும் வாங்கிக் கொண்டார்கள்.
கொஞ்சம் தள்ளி வளையல், கண் மை, சைடூசி, ரிப்பன், மற்ற மற்ற பிளாஸ்டிக் பொருட்களென கடை விரித்து பெண்களையும் குமரிகளையும் குறி வைத்து ஃபிர்தவ்ஸ் அமர்ந்து கொண்டிருந்தாள். முத்துப்பொண்ணு இதெல்லாம் போகும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கடைகளைக் கடந்து கதீஜாவையும் பிள்ளைகளையும் கொஞ்சம் தள்ளியிருந்த குளத்து பக்கம் கூட்டிச் சென்றாள்.
குளமென்று சொல்லிக் கொண்டாலும் பார்க்க அது சற்று விரிந்து வாரப்பட்ட ஒரு பெரிய குட்டை போலதான் காட்சியளிக்கும். சுற்றி மணல் மேடு. நடுவில் பச்சை நிறத்தில் தண்ணீரும் பாசியுமாக தேங்கிக் கிடந்தாலும் அதை கருத்தக் குளம் என்றே அழைக்கிறார்கள்!
குளத்து மேட்டில் ஒரு நடுத்தரமான இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டார்கள்.
அவர்களைச் சுற்றி எங்கு பார்த்தாலும் பிள்ளைகள்தான். சிரிப்புகளுக்கும், கும்மாளங்களுக்கும் ஏன் சண்டைகளுக்கும், கூச்சல்களுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் கூட குறைவில்லாமல் ஒரே சத்தக்காடாகக் அந்த இடம் நிலவியது. அந்த குழந்தைகள் கூட்டத்தில், பெரியவர்கள் என்று தென்பட்டது இவர்கள் இருவர் மட்டுமே.
அப்போதுதான் வண்ணான் வீட்டுப் பக்கமிருந்த பாதை வழியாக எங்கேயோ கிடந்து முத்து நாச்சியாள் மணல் பக்கம் நுழைந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் அதுவரை முத்துப்பொண்ணு மற்றும் கதீஜாவிடம் நிலவிக்கொண்டிருந்த அந்த சிரிப்பு, கலகலப்பு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மங்கத் தொடங்கின.
அவளும் வைத்த கண் வாங்காமல் இவர்களையே கவனித்தபடி வந்தாள். ஒரு தூரம் வரை அங்கும் இங்கும் வேடிக்கை பார்ப்பது போல பாவனை செய்தவர்கள், அவள் இவர்கள் இருந்த இடத்தை நெருங்க நெருங்க ஒருத்தி தலையை தாழ்த்தி கொண்டாள், மற்றவள் நேருக்கு நேர் ஒரு வெறுமைப் பார்வையை வீசினாள். தலையை தாழ்த்தி கொண்டவள் முத்துப்பொண்ணு, மற்றவள் கதீஜா.
அருகே கடக்கும் போது பிள்ளைகளையும் இவர்களையும் பார்த்துவிட்டு அடி வயிற்றிலிருந்து ஒரு காறு காறி ‘த்தூவென’த் துப்பிவிட்டு, ஒரு பக்கமாக தனது தடித்த உடம்பை கொழுத்த மாட்டைப் போல் சிலுப்பி கொண்டு எங்கோ பார்த்தபடிச் சென்றுவிட்டாள்.
ஏதோ பெரும்புயலொன்று வருவது போல் வந்து சட்டென கரையைக் கடந்துவிட்ட திகைப்பும் மௌனமும் அவர்களை சில நொடிகள் பீடித்திருந்தது.
கதீஜாதான் அதிலிருந்து முதலில் வெளிவர முற்பட்டாள்.
“இவ்வொ ஏங்க்கா நம்மள இப்புடி பாத்துட்டு போறாக..?” என்று கதீஜா அப்பாவியாய் கேட்டாள்.
“அவ்வொல்லாம் அப்டித்தா, விடு!” என்று முத்துப்பொண்ணு பெருமூச்சு விட்டுக்கொண்டாலும். முத்து நாச்சியாவை காண நேரிடும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தீப்பொறி போல மினுங்கிக்கொண்டிருக்கும் சில வலியான ஞாபகங்கள் அவளை ஒரு கணமாவது கல்லாக உறைய வைத்துவிடும்!
தற்சமயம் இவள் உதவி ஒத்தாசைக்கு சென்று வரும் வீட்டு ராத்தாவின் ராத்தாவிற்கு அதாவது முதலாளியம்மாவின் மூத்த சகோதரிக்கு உதவிக்கு ஒரு ஆள் தேவைப்பட்டதால், கொஞ்ச நாள் இவளை அங்கு இருக்கும்படி அனுப்பி வைத்திருந்தார்கள். அது அந்த வீட்டிற்கு முத்து நாச்சியா கல்யாணமாகி புது மணப்பெண்ணாக வந்து, சில மாதங்களே கழிந்திருந்த சமயமும் கூட.
மருமகள் மரைக்காயரோட (முதலாளி) சொந்த தங்கச்சி மகளே என்பதால் புதியவள் போல அவளை யாரும் பாவிக்கவில்லை. அதனால் மூத்த மருமகள் என்ற அந்தஸ்து மட்டுமல்லாமல் அங்கே சகல சலுகைகளையும், உரிமைகளையும் பெற்றிருந்தாள். அவளது மாமியாரும் கூட பொறுப்புகள் ஒவ்வொன்றையும் அவளிடமே அப்போது ஒப்படைக்கத் தொடங்கியிருந்தார்.
இவள் அங்கு வேலைக்கு சென்ற முதல் நாளது. முத்துப்பொண்ணு-முத்து நாச்சியா என பெயரை மாத்தி மாத்தி முத்து நாச்சியாளின் மாமியார் அழைத்தபடி இருக்கவே.. முத்துப்பொண்ணுக்கு அவளையும் மீறிய ஒரு சந்தோசமும் பிரகாசமும்!
திருவளையில் தேங்காய் துருவிக்கொண்டிருந்தவள், “மச்சி… நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே மாரி பேருல்ல..!” என்று பெருமை பொங்க இன்னும் கல்யாணப் புதுத்துணி சரசரப்பு கூட சரியாகப் போகாத முத்து நாச்சியாளைப் பார்த்து சொல்ல வர, “முண்டத்துக்கும் முத்துன்னுதான் பேரு வச்சிருக்கோ…!”என்று வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டு கோவமாய் போனதில், முத்துப்பொண்ணு சூடேறிய சிமிலிப் போல பட்டென உடைந்துப் போனாள்!
அந்தக் குடும்பத்தில் அதுவரை யாரும் அவளை அப்படிப் பேசியதில்லை, நடத்தியதில்லை. மனசு தாழாமல் கண்ணீர் கோர்த்துக்கொண்டது!
“மச்சி…!” காய்ந்த குரலில் அழைத்து கொஞ்சமேனும் அவளது பரிவை எதிர்பார்த்தாள்.
“யாருக்கு யாருடி மச்சி, இனிமே மச்சி கிச்சின்னு ஏதாவது கூப்ட்டனு வச்சிக்க, நாக்க அறுத்துருவேன் பாத்துக்க! போடீ! போயி கெணத்துல தண்ணித் தூக்கிக்கிட்டு வா!” வென விரட்டியதும், கொல்லைப் பக்கம் சென்றாள் என்பதை விட அந்த இடத்தில் நிற்க முடியாமல் கண்ணீர் சொட்டச் சொட்ட ஓடினாள்.
பாரம்பரியம் மிக்க அந்தக் குடும்பத்தில் இப்படி ஒரு அலட்டலையும் ஆணவப் பேச்சையும் அவள் அதுவரை எதிர்கொண்டதேயில்லை!
பிராயத்திலிருந்து பெரிய ராத்தா மகன்களை நாநா (அண்ணன்) என்றே அழைத்தே பழகியவள் என்பதால், ஒரு உரிமையில் மச்சி என்று அவள் வாயிலிருந்து வந்துவிட்டது. மாமியார் தன்னையும் ஒரு வேலைக்காரியையும் சரிசமமாக கூப்பிடுவது, நடத்துவது முத்து நாச்சியாளுக்கு இவள் வந்தலிலிருந்தே பிடிக்கவில்லை. அதனால் வந்த வினைதான் எல்லாம்!
ஈனாக்கானா கொல்லைக்கு எதிர்த்த மாதிரி, மும்காசிம் மரைக்காயர் வீட்டையடுத்து இருந்த கருவக்காட்டை விறகுக்கு வெட்டவிட்டிருந்ததில், கழிந்துக் கிடந்த கம்புகளைகளையும், சுள்ளிகளையும் பெண்கள் தங்களது வீட்டுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள ஆங்காங்கே உட்கார்ந்து வெட்டிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய வீட்டுத் தேவை வேண்டி முத்துப் பொண்ணும் அங்கே போயிருந்தாள். நல்ல வெய்யில் நேரம் வேற!
“முத்து பொண்ணூ…!” தெரு வாட்டையிலிருந்து சித்திரைக்கனி கூப்பிடுவதுக் கேட்டது.
“என்ன சித்ரக்கனி…!”
“பெரிய ராத்தா வூட்ல ஒன்ன கூப்டுறாவோ…!”
வெட்டிய சுள்ளிகளை ஓரமாக கட்டி வைத்துவிட்டு, கொஞ்ச தூரத்தில் அதே வேலையாக அமர்ந்திருந்த ஜலீலாவிடம், “எங்கும்மா வந்திச்சின்னா வூட்டுக்கு கொண்டு போகச் சொல்லு! ராத்தா வூட்ல கூப்புடுறாங்களாம்!” என்று அவளுடைய பதிலை ஏதும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று ஓட்டமும் நடையுமாக பெரிய ராத்தா வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள்.
இவளை எதிர்பார்த்து வாசலிலேயே முத்து நாச்சியாள் நின்றுகொண்டிருந்தாள். முகப்பில் நிறைய செருப்புகள் வேறு கிடந்தன. விருந்தாளிகள் யாரும் வந்திருக்க வேண்டும் என்று முத்துப்பொண்ணு நினைத்துக்கொண்டாள்.
“காலேலேர்ந்து எங்கடி பொய்ட்டா? இந்தா பிச்சத்தம்பிக் கடையில மூணு பவுண்டா வெரசா வாங்கிகிட்டு வா!”
அவளுடைய அதட்டலில், எச்சில் கூட விழுங்க முடியாமல் நாவு வறண்டு வந்தவள், மீண்டும் அதே வறட்சியோடு கடைப் பக்கம் ஓடினாள்.
அம்மாப்பட்டினத்திலிருந்து முத்து நாச்சியாவோட சொந்தக்காரர்கள் யாரோ ஆறு பேர் வரை வந்திருந்தார்கள். மூன்று பெண்கள், இரண்டு பிள்ளைகள் மற்றும் அந்த வீட்டு மரைக்காயரைப் போல ஒரு வயசான பெரியவர். ஏதும் கல்யாணக் கூப்பாடா இருக்கும் என நினைத்தபடி வாங்கி வந்த பவண்டோவை ஆறு குவளைகளில் சரிசம அளவில் ஊற்றினாள்.
பிள்ளைகள் பவுண்டாவை கண்டதும் குதூகலம் பூண்டார்கள். வந்திருந்த பெரியவருக்கு இனிப்பு நீராம். அதனால் குடிக்காமல் வைத்திருந்தார்.
“மாமா, உங்களுக்கு சீனி போடாம தேத்தண்ணி கொண்டு வரவா?” முத்து நாச்சியாள் மிகவும் பணிவோடு கேட்டாள்.
“இந்த வெய்யில்ல எங்கம்மா தேத்தண்ணிக் குடிக்கிறது? கொஞ்சம் நல்ல
தண்ணி மட்டும் குடு, போதும்!”
முத்து பொண்ணைக் கொண்டு வந்து கொடுக்குமாறு முத்து நாச்சியாள் சைகை காட்டினாள்.
‘இனிப்பு நீர்க்காரர் எப்படி பவுண்டோவைக் குடிக்க முடியலையோ, அதுபோலவே இந்த வேலைக்காரியால் குடம் நிறைய இருந்தும், தவிச்ச வாயிக்கு ஒரு பொட்டு தண்ணியைக் கூட அருந்த முடியவில்லை!’ என்று தனது நிலையை நினைத்து வருந்தி தன்னிரக்கம் கொண்டாள்.
பெரியவருக்கு தண்ணியை ஒரு சொம்பு நிறைய அள்ளி வந்து கொடுத்தாள். அவர் குடிக்க குடிக்க இவளுக்கு நாக்குச் சுரந்தது. நன்றாகக் குடித்துவிட்டு, கொஞ்சூண்டு மட்டும் மிச்சம் வைத்திருந்தார்.
“சோறுண்டுட்டு போவலாம் மாமி… உங்களுக்கு புடிச்ச செங்கனி மீனுதான் வாங்கிருக்கு..!” முத்து நாச்சியாள் வந்தவர்களை மதிய சாப்பாடு வரை இருக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கினாள்.
“இல்ல முத்து நாச்சியா நேரஞ்சென்டுருச்சி. மச்சி வூட்டுக்கு வேற வர்றோம்னு சொல்லிட்டோம். இன்னொரு நாள் வந்தா கண்டிப்பா சாப்புடுறோம்”
வெயிலுக்கும் அதுக்கும் தள்ளாடித் தள்ளாடி வந்தவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.
மீனாய வேறு உட்கார வேண்டுமென, அந்த மரைக்காயர் மிச்சம் வைத்துவிட்டுச் சென்ற இரண்டு வாய் தண்ணீரை எடுத்துக் குடித்தாள் முத்துப்பொண்ணு. தாகம் தணியவில்லை. அடுப்படி வரை சென்று குடத்திலிருந்து அள்ளிக் குடிக்க பயம். முத்து நாச்சியாள் வேறு அங்கே நின்று கொண்டிருந்தாள்.
“பவுண்டா குடிக்கிறியளா மாமி?” முத்து நாச்சியா மிச்சமிருந்த ஒரு குவளையைக் காட்டி மாமியாரிடம் கேட்டாள்.
“நீங்களுவளே குடிங்களுவொ!” என்று கூறிக்கொண்டே தனது அறையை நோக்கி பெரிய ராத்தா செல்லலானார்.
முத்து நாச்சியா குடிக்கத் தொடங்க, இவள் மீனாய கொல்லைப் பக்கம் வந்துவிட்டாள்.
ஆய்ந்த மீன் துண்டுகளை பானைச் சட்டியில் போட்டு உப்பு மஞ்சள் சேர்த்து நன்றாக உரசி, அலசி, கழுவி, சேர்ந்திருந்த தண்ணீரையெல்லாம் முடிந்தவரை வடிகட்டி அடுப்படியில் கொண்டு வந்து வைத்தாள். முத்து நாச்சியாள் இல்லை.
அவள் குடித்த பவண்டோ குவளை மட்டும் அங்கேயே இருந்தது. கழுவி வைக்க எடுக்கப் போனவள், பாதிக்கு மேல மிச்சம் இருந்ததைக் கண்டுவிட்டு, தனக்கும் தாகமாக இருக்கவே படக்கென எடுத்துக் குடித்துவிட்டாள்.
“எச்சி பக்கிரிசா! ஆளு இல்லாத சமயமா பாத்து பவுண்டாவ எடுத்து அமுக்குறியளோ..!” பேயாய் பின்புறம் நின்றுக் கொண்டிருந்த முத்து நாச்சியாவைக் கண்டதும் திடுக்கிட்டவளாய் வெலவெலத்துப் போனாள்! தொண்டை அடைத்துக் கொண்டு சட்டென வார்த்தைகள் எதுவும் வரவில்லை!
“ஒன்ன யாருடி குடிக்க சொன்னது?”
“இல்ல குடிச்சிட்டு மிச்சம் வச்சது வீணா போயிருமேன்னுதான்..” அவளால் அதற்கும் மேல் எதுவும் பேச முடியவில்லை. மீண்டும் நா வறண்டுவிட்டது போல் உணர்ந்தாள். கண்ணீர் வெள்ளம் முட்டிக் கொண்டு நின்றது!
“ஓஹோ! அது மாதிரி நா எந்திரிச்சி வந்திட்டேன்னா எம் மாப்புள்ள கூட நீ போயி படுத்துருவியோ!”
“முத்து நாச்சியா என்ன பேசுறா!” இவர்களின் பேச்சுச் சத்தம் கேட்டு வந்த, மாமியாரின் பெரும் அதட்டலில் மருமகள் சற்றும் எதிர்பாராமல் நடுங்கி மிரண்டு போனாள். இவளோ நிலைத் தடுமாறி உடைந்து “ம்மா…!” என்றபடி சமையற்கட்டின் வாயிற்கதவைப் பிடித்துக் கொண்டு விம்மி விம்மி ‘ஓ’வென அழ ஆரம்பித்தாள்.
“முத்து நாச்சியா…! என்ன இது! நம்ம குடும்பத்துக்கெல்லாம் பழக்கமில்லாத நாத்தப் பேச்சல்லாம் பேசுறா! இன்னொரு வாட்டி இது போல பேசிப் பாத்தேன்.. நடக்கிறது சேதி!” அதற்கு மேல் சத்தம் போட்டு கண்டித்துப் பேச அவருடைய சுபாவத்திற்கும் ஒத்து வரவில்லை! மருமகளின் அநாகரீகப் பேச்சைக் கேட்டுவிட்டு கோபமும் அதிர்ச்சியுமாக அவருடைய நெஞ்சுக்கூடும் ஏறி ஏறி இறங்கியது.
அவரும் அவ்வப்போது தனது மருமகள் முத்துப்பொண்ணை நடத்தும் விதங்களை கவனிக்காமல் இல்லை. வீட்டின் கௌரவம் கருதி ஒவ்வொன்றிற்கும் சத்தம் போடத் தொடங்கினால் நன்றாக இருக்காதே என்று கருதினார். அதனால் கண்டும் காணாமலும் அதுவரை இருந்து வந்தவருக்கு அன்றைய சம்பவம் அவருடைய பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் ரொம்பவும் அசைத்துப் பார்த்துவிட்டது.
முத்துப்பொண்ணை தண்ணீர் கொடுத்து, முதுகைத் தேய்த்து தேற்றியபடி வீட்டிற்குப் போகும்படிச் சொன்னார். சாயங்காலம் தனது தங்கையிடம் சென்று, முத்துப்பொண்ணு அங்கே இனி வர வேணாம், எப்பவும் போல நீயே பார்த்துக் கொள் என்று கொஞ்சம் பணத்தையும் திணித்துவிட்டு அதிகம் பேசிக்கொள்ளாமல் புறப்பட்டுவிட்டார். அதற்கப்புறம் முத்துப்பொண்ணு அங்கு செல்லவில்லை என்பதை விட, அதிலிருந்தான் இப்படி ஒரு வேலை செய்து பிழைப்பதும் அவளுக்கு வெறுத்துப் போனது.
எப்படியாவது இந்த வாழ்க்கையிலிருந்து மீண்டுவிட வேண்டுமென்றும் ஊர் உலகத்தைப் போல தானும் மதிப்பு மரியாதையோடு வாழ வேண்டுமெனவும் படைத்தவனிடம் துஆ கேட்டபடியே இருந்தாள். ஆனால், பொறுக்காத முத்து நாச்சியாவோ எப்படியோ அவர்கள் வீட்டு வட்டத்திலிருந்து இவளை விரட்டியடிக்க வேண்டுமென்றே நாளும் பொழுதும் திரிந்து கொண்டிருந்தாள். தனது சின்ன மாமியாரிடமும், அவரின் மகள்களிடமும் ஏதேதோ சொல்லிப் பார்த்தாள். அதுவும் பலிக்கவில்லை.
“அவ்வொளக் கண்டதும் நீ ஏங்க்கா ஒரு மாதிரி ஆயிட்டா?” என்று கதீஜா கேட்டபோதுதான் முத்துப்பொண்ணு ஒரு வழியாய் நிகழ்காலத்திற்கு வந்து சேர்ந்தாள்!
பெருமூச்சு விட்டபடி “ஒண்ணுல்லடி தங்கச்சி!” என்று முத்துப்பொண்ணு பேச்சை மாற்றினாள்.
“அக்கா… கொண்ட கல்ல வேணுமா?” அவர்களெதிரில் பெரிய தூக்குவாளியோடு ராஜா முகம்மது வந்து நின்று கொண்டிருந்தான்.
“ராஜாமுதூ…! என்னடா.. எங்கடா இருக்கா?” முத்துப்பொண்ணு அவனை ரொம்ப நாள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியில் விசாரித்தாள்.
“வலங்கிமான்ல அம்மாடத்தாளு கடையில இருக்கங்க்கா”
“அப்புறோ யா இது வேற செய்றா..? நல்லாருக்கியா?”
“ம், உம்மாதான் வித்துட்டு வர சொன்னிச்சிக்கா”
அவனுக்காக ஒரு சுருளை வாங்கிக்கொண்டாள்.
அவன் சென்றதும்,”கைஜா… நீ ஏண்டி அவ்வொளக் கண்டு தெகச்சா?” கதீஜாவிடம் முத்து நாச்சியாவைப் பற்றி பேச்சுக் கொடுத்தாள்.
“அவ்வொ அப்பப்ப ஸபுரு ராத்தாவ பத்தி எங்கிட்ட சாரிச்சிட்டே இருப்பாக, அவ வூட்டுல என்ன பண்ணுவா? யாரு யாரரெல்லாம் அவள பாக்க வர்றாக, போறாக மாப்புள்ளகாரன் மாசத்துக்கு எத்தன கடுதாசி போடறானு.. ஒண்ணு ஒண்ணாக் கேப்பாக. என்ன பாக்குற நேரங்கள்ல அவ்வொளோட ஒரே இம்மிசியா இருக்கும்க்கா!” வருத்தப்பட்டுச் சொன்னாள்.
முத்துப்பொண்ணு சுண்டலைப் பிரித்துக் கொண்டே, “நீ ஏதும் சொல்லுவியோ…” என கேட்க, “நீ வேற யாங்க்கா. அவ்வொ முழிய பாத்தாவே பயமா இருக்கும். அதுவும் அவ்வொ புருவம் இருக்கே சினிமால வர்ற கொள்ள கோஸ்டி ஆளு மாரில்ல இருக்கும்! நா வாயே தொறக்க மாட்டே(ன்). ஒடனே, கோவம் வந்து திட்ட ஆரம்பிச்சிருவாக. இதுனாலயே அவ்வொ வாட்டையில நா போறதே இல்ல தெரியுமா..!” என்று அப்பாவியாய் பதில் சொன்னாள்.
“ம்ம், தமயன் குடும்பத்து மேல அவ்வளவு அக்கற!” என்று விரக்தியாய் முத்துப்பொண்ணு சிரித்தாள்.
முத்து நாச்சியாவிற்கு ஸபுரு மேல பிரியமெல்லாம் இல்லை. ஸபுரு மாப்பிள்ளை சாகுல் ஹமீது, முத்து நாச்சியாவுக்கு ஒன்றுவிட்ட தம்பி. இப்போது ஸபுரு இருப்பது, கொஞ்சம் கொஞ்சமாகப் பாழடைந்துக் கொண்டிருக்கும் முத்து நாச்சியாவுடைய பூர்வீக வீட்டில்.
பங்காளிகள் சொத்து பிரிக்கும் போது அந்த பிரம்மாண்டமான வீடு சாகுல் ஹமீதோட வாப்பாவிற்கு சென்றுவிட்டதால் முத்து நாச்சியாவுக்கு அப்போதிலிருந்தே பெரும் வயிற்றெரிச்சல். ஆனால், இவள் இன்னும் வயிற்றெரியும்படியெல்லாம் அவர்கள் இப்போது அப்படி ஒன்றும் பெரிதாய் வாழவில்லை என்பதுதான் உண்மை.
எல்லாம் ஸபுருடைய மாமனார் காலத்தோடு முடிந்துவிட்டது. மந்தியப்பா ரோடு, ஓச்சோடி என்று கிடந்த அத்தனை நிலம் புலன்களையும் ஒன்று ஒன்றாக விற்றுத் தீர்த்தது போக, இருக்கும் அந்த வீட்டைத் தவிர வேறெதுவும் மிஞ்சாமல் போயிற்று!
செல்லப்பிள்ளையான சாகுல் ஹமீது தொழில் செய்கிறேன் எனும் பெயரில் எல்லாவற்றையும் கரைத்துவிட்டிருந்தான். கடைசியாக வம்புக்கொல்லையில கிடந்த தோப்பையும் கூட ஒத்திக்கு கொடுத்துவிட்டுதான் இப்போது சவுதிக்குப் போயிருக்கிறான். பிறந்த வீட்டிலிருந்து அவள் போட்டு வந்த நகைகள் கூட இப்போது பேங்க், தட்டான் வீடு என்று அங்கங்கு அடகில் கிடக்கின்றன. எப்போது விடிவு வருமென்று அந்த அல்லாஹ்வுக்குதான் தெரியும் என்று ஸபுரும் ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டு நாட்களை நகர்த்தி வருகிறாள்.
இவ்வளவு சிரமத்தில் அவர்கள் இருந்தும், தமயன் மேல் உள்ள வெறுப்பு இன்னும் முத்து நாச்சியாவிற்குத் தீரவில்லை. தமயன் என்ன தமயன், அவளுக்கு பிடிக்காத யாரும் நன்றாக இருந்திட கூடாது. அவர்கள் நட்டப்படும்போது இவளுக்கு சந்தோசம் அப்படிதான் பொங்கும்!
அஸ்மாவும் சின்னப்பிள்ளையும் பதுவிசாக அமர்ந்தபடி விளையாடி கொண்டிருந்தனர். மற்ற பிள்ளைகள் அப்படியில்லை, பெரும்பாலும் எல்லாம் பெரும் வால்களாகவே அங்குமிங்கும் தவ்விக்கொண்டும், தாவிக்கொண்டும், புழுதியை கிளப்பிவிட்டபடி எம்பிக்கொண்டும் ஓடிக்கொண்டுமிருந்தன. மேட்டிலேர்ந்து உருண்டு உருண்டு குளத்து நீரைத் தொடுவது, குய்யோ முய்யோவென குதித்து குதித்துச் சேற்றை கலக்குவது, மீன் பிடிக்கிறோம் என்று குளநீரை வேகமாக கரைப் பக்கம் காலால் தள்ளி தள்ளி மீன்குஞ்சுகள் துள்ளுவதை ரசிப்பதும் மிதிப்பதுமென அந்த இடமே ரணகளப்பட்டுக் கொண்டிருந்தது!
முத்துப்பொண்ணு பிள்ளைகளுக்கு கொண்டைக் கடலை தீத்த எத்தனித்தபோது, சரக்கென்று பின்னாடிலேர்ந்து வாண்டுகள் ரெண்டு ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டு இவர்கள் மேல் விழ, கடலை எல்லாம் மண்ணுக்கு இரையானது மட்டுமல்ல, எண்ணெய் பிசுபிசுத்த முத்துப்பொண்ணு உள்ளங்கை, விரல்களெல்லாம் புழுதிப் படிந்துப் பாழாய் போனது.
“அட ஹராம்ல பொறந்தவய்ங்களா… என்ன வரத்துல வர்றாய்ங்க… கழிச்சல்ல போறவனுவொ..!” என்று கோபப்பட்டுக் கத்தியவள், பதறியபடி பிள்ளைகளைப் பார்த்தாள். நல்ல வேளை அவர்களுக்கு ஒண்ணும் ஆகியிருக்கவில்லை.
கதீஜாவிடம் பிள்ளைகளை விட்டுவிட்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள இறங்கி, குட்டையை நோக்கிச் சென்றாள். அஸ்மாவும் பின்னாடியே ஓட, கதீஜாவும் அவளை அதட்டி பிடிக்க பிள்ளையோடு ஓடினாள். அப்போது அங்கேயும் இரண்டு மூன்று பொடிப்பயல்கள் வட்டமா நின்றபடி, சேற்று நீரை மேல அடித்து அடித்து விளையாடி கொண்டிருந்தபோது, அது எதிர்பாராமல் கதீஜா மீதும் சின்னப்பிள்ளை மீதும் பட்டுவிட்டது!
“அல்லாஹ்வே! அடேய் யாண்டா இப்புடி படையில வர்றியளுவோ! யாண்டா இந்த அநியாயம் பண்றியளுவோ! அடேய் நீ ராவியத்து மவன்தானே..? இருடா உங்க உம்மாவ வர சொல்றேன்!” கம்பைத் தேடுவது போல் எல்லோரையும் அதட்டி விரட்டினாள். ஒரு பலனும் இல்லை!
கதீஜாவிடமிருந்து பிள்ளையை வாங்கினாள், இப்போதும் அழாமல் பொம்மையாட்டம் இவளேயே உற்றுப்பார்த்தது! இந்த இடத்துப் பிள்ளைகள் மட்டும் எப்படித்தான் இவ்வளவு அழகாக இருக்கின்றனவோ! அல்லது நமக்குத்தான் அப்படித் தோணுதோ என்று நினைத்துக்கொண்டே, “ராஜாத்தி…!” என கன்னங்களைத் தடவிக் கொஞ்சினாள். ஆனால், கதீஜாவுக்குதான் பயம் தொத்திக் கொண்டுவிட்டது. பொக்குன்னு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, பிள்ளையை வாங்கி, துடைக்கத் துவங்கினாள். சட்டையெல்லாம் சேறும், சேற்று வாசமும்! பதறியவளாய் மோந்துப் பார்த்து மூக்கை சுளித்தாள்.
“சட்டய கெழட்டிக் கசக்குடி..!” முத்துப்பொண்ணு அவளின் பதற்றத்தை உணர்ந்தவளாய் சொல்ல, அவசரம் அவசரமாக கதீஜா பிள்ளையின் சட்டையை கழற்றி, கலங்காத பக்கம் சென்று நன்றாக உடையை கசக்க ஆரம்பித்தாள்.
சட்டை இல்லாமல் பிள்ளை வெறுமினே இருந்ததில் கதீஜாவிற்கு பதற்றங்கள் கூடிக்கொண்டு சென்றது. யாரும் ஸபுரு ராத்தாவிடம் கண்டு சொல்லிட்டால், அவளே வந்தும்விட்டால்? என்ற கவலைதான்.
ஈரச் சட்டையை அப்படியேப் போட்டால் பிள்ளைக்கு தடுமல் ஏதும் பிடித்துக் கொள்ளுமோ என்ற கவலைகள் வேறு! கொஞ்சம் காயட்டும் என விரித்து பிடித்து நின்றபோதுதான் கவனித்தாள்..
பிள்ளை கழுத்தில் கிடந்த சங்கிலியைக் காணவில்லை!
“அல்லாஹ்வே… இப்ப நான் என்ன செய்யுவே…!” கதீஜாவின் அலறலில் முத்துப்பொண்ணு மீண்டும் என்ன ஏதென்று ஆடிப்போனாள்!
“என்னடி அழுவுறா? என்னாச்சுன்னு சொல்லுவே..!”
“புள்ள கழுத்துல கெடந்த சங்கிலிய காணாங்க்கா!”
முத்துப்பொண்ணு அஸ்மா கழுத்தைப் பார்த்தாள். அவளுடையது சங்கிலி கிடந்தது.
“எங்கடி விட்டா?”
“செத்த முந்தி கூட கண்டேங்க்கா..! நா என்ன செய்யுவே..! அல்லாஹ்வே..!” தலையில் கை வைத்துக்கொண்டு ஓ வெனக் கதறி அழ ஆரம்பித்தாள்!
அவள் சட்டை கழட்டும்போதுதான் கீழே விழுந்திருக்க வேண்டுமென முத்துப்பொண்ணுக்குப் பட்டது.
அவர்கள் இருந்த இடம், பிள்ளைகள் விளையாடிய இடம், கரை என எல்லா இடத்தையும் சலித்து, சலித்துத் தேடினாள். பலனில்லை! அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளிடமும் சொல்லித் தேடச் சொன்னாள். கூடுமான வரையில் எல்லா பிள்ளைகளுமே விளையாட்டோடு விளையாட்டாகத் தேட ஆரம்பித்தன. இந்த மணலில் விழுந்த சங்கிலியைத் தேடுவது, கடலில் விழுந்த பொருளைத் தேடுவது போல இருந்தது. ஒருவேளை தண்ணிக்குள்ளே ஏதும் விழுந்திருமோ…!
முட்டி இறங்கும் ஆழம் வரை இறங்கித் தேடினாள். மேலும் இறங்க கூச்சமாக இருந்தது. அதற்குள் வாண்டுகள் மூலமாக செய்தி மணலெங்கும் தீயாய் பரவத் தொடங்கியது.
கதீஜா பிள்ளைக்கு காய்ந்தும் காயாதச் சட்டையை அழுது கொண்டே மாட்டிவிட்டாள். இவ்வளவு கூச்சலிலும் பிள்ளை அழவேயில்லை! அஸ்மா அங்கிட்டும் இங்கிட்டும் கண்களை ஓடவிட்டு ஒன்றும் புரியாமல் நின்றாள்.
“போக்கா! எல்லா ஒன்னாலதான், இங்க யாரும் வருவாகளா… யான் இங்கிட்டு கூட்டிக்கிட்டு வந்தா…!” என்று கோபமும் அழுகையுமா கதீஜா கேட்ட கேள்வியில் முத்துப்பொண்ணும் திகைத்துப் போனாள்!
அதானே ஏன் இங்கிட்டு வந்தேன் என முத்துப்பொண்ணுக்கும் புரியவில்லை. பதிலில்லாமல் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
“ஸபுரு ராத்தாட்ட இப்ப நா(ன்) என்ன சொல்லுவே..!” கதீஜா அழுகையை நிறுத்துவதாக இல்லை!
“என்னங்கடீ நாடகம் போட்டுக்கிட்டு இருக்கிய!” – அப்படி ஒரு மிரட்டலான குரலோடு வந்தது முத்து நாச்சியாவேதான்!
இருவரும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகி நிலைகுலைந்து போனார்கள். இப்போது என்ன நடக்க போவுதோங்கிற பயம், பீதி அவர்களை மேலும் அலைக்கழிக்க தொடங்கியது.
“எல்லாத்தையும் கேள்விப்பட்டேண்டி..! ஒளிக்கலாம்னு இங்குனேயே நிக்குறியளோ..? வாங்கடி களவாணி முண்டங்களா..!” என்று கதீஜாவின் கையைப் பற்றி இழுத்தாள். இப்போது சின்னப்பிள்ளையும் அழுகையில் சேர்ந்துகொண்டது.
“சும்மா நீங்களேக் கட்டிவிடாதீய!” முத்துப்பொண்ணு ஆவேசமானாள்!
“ஏண்டி நா பொய் சொல்றன்னா?! புள்ளயோட சங்கிலி எங்கடி, காட்டுடி பாப்போம்! ஸபுர ஏமாத்தலாம் என்ன முடியாதுடி பக்கிர்சா முண்டங்களா..!”
கூட்டம் கூடிவிட்டது! கதீஜா, முத்து நாச்சியாவைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தாலும், ‘இதுக ஏன் இங்கன வந்ததுக…?’ என்ற கேள்வியும் அங்கே எழுந்தது.
“நா வரும்போது, இவளுவ குசுகுசுன்னு ஏதோ பேசிக்கிட்டு இருந்தாளுவோ… என்ன கண்டதும் தெகச்ச மாதிரி உக்காந்து இருந்தாளுவோ… இப்பதான சேதி தெரியுது இந்த கூட்டு களவாணிக செஞ்ச காரியத்த பத்தி! தேவ்டியா முண்டங்களா எந் தமயன் வூட்லேயே களவாங்க துணிஞ்சிட்டியளாடீ?! “
“ராத்தா, எதா இருந்தாலும் கொஞ்சம் மரியாதயா கேளு…. நீ பேசுறதும் சரியில்ல ஆமா” எதிர்த்துக் கேட்க வந்த ராவுத்தரையும், “மம்மு ராவுத்தரு, நீ ஓ சோலிய பாத்துக்கிட்டு போ! இவளுவள பத்தி ஒனக்கு தெரியாது! இவ (முத்துப்பொண்ணைக் காட்டி) எங்கூட்டுல இருக்கும் போது என்னென்ன களவாண்டான்னு எனக்குதான தெரியும்… ஆமா, இவளுக்காக நீ யான் ஏத்துக்கிட்டு வர்றா?” என்று முத்து நாச்சியா விஷமத்தோடுக் கேட்கத் தொடங்க, அடுத்து என்ன பேசுவாளோ என்கிற அச்சத்தில் எதற்கு வம்பு என்று அவனும் பதறி விலகிக் கொண்டான்.
சுற்றி நின்ற பெண்களும் கூட ஏதும் செய்ய முடியாமல், நடக்கும் எல்லாவற்றையும் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு பாவமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நீங்க யான் இப்புடி குதிக்கிறிய? ஸபுரு ராத்தா கிட்ட நா பேசிக்கிறே(ன்). கேக்கலைன்னா ஏம்புள்ள கழுத்துல கெடக்குறத நா கழட்டி குடுக்கிறே(ன்) நீங்க உங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க!” என்று கோபத்தில் முத்துப் பொண்ணும் அவளுக்கு சரிக்கு சமமாய் பதில் கொடுக்க ஆரம்பித்தாள்.
“வாடி திருட்டுக் களவாணி..! ஓ..! இதுதா கதயோ..! கையும் களவுமா பிடிச்சதும் நடிக்கிறியளோ..! எந் தமயன் கஸ்டப்பட்டு சம்பாரிச்சத களவாண்டது மட்டுல்லாம, பக்கிர்சா வேச.. ஓம்முட்டுன்னு வேற சொல்லிக்கிருவியோ..?”
முத்து நாச்சியாவுடைய பேச்சு மேலும் மேலும் தரம் தாழ்ந்துக் கொண்டே செல்ல, “பாத்து பேசுங்க, இது எம் மாப்புள்ள ஒழச்சு சம்பாரிச்ச காசுல வாங்குனதாக்கும்!” ஆவேசத்தை அடக்க முடியாமல் முத்துப்பொண்ணும் விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.
“பாத்தியளா இந்த கதைய! இவ கழுத்து காதெல்லாம் கவரிங்க போட்டுக்கிட்டு.. இது மட்டும் இவ மாப்புள்ளக்காரன் வாங்கி குடுத்த பவுனுன்னு பவுசி பேசுவாளாம்! நாமெல்லாம் நம்பணுமாம்!”
“அது பவுனுதா..! யா(ன்) நாங்கல்லாம் பவுனுல போட கூடாதோ?” தன்மானத்தை இனிமேலும் விட்டுக் கொடுக்க அவளும் தயாராக இல்லை. எதற்கும் அஞ்சாது நெஞ்சை நிமிர்த்தி நின்றாள்.
“போடலாண்டி அதுக்குன்னு ஒரு தராதரம் வேணும், இரு, பாருக் மாமாட்ட சேதி கேக்குறேன்! ஓம் மாப்புள எப்புடி வாங்குனான்னு… சம்பாரிச்ச காசுல வாங்குனானா இல்ல கல்லால இருந்து களவாண்டானான்னு!”
“எம் மாப்பிள்ளய பத்தி ஏதும் தப்பா பேசினியலாக்கும் மரியாத கெட்ரும்!” விரலைகாட்டி எச்சரித்தாள்.
“என்னடி பண்ணுவா..? நாத்த சிறுக்கி! ஓங்கிட்ட என்னடி எனக்கு பேச்சி…? இவதான புள்ளயக் கூட்டிக்கிட்டு வந்தா… ” இப்போது கதீஜா பக்கம் பேய் போல் திரும்பினாள். கதீஜாவிற்கு ஈரக்குலை நடுங்கியது!
“சொல்லுடி இந்த சங்கிலி.. புள்ளையோடுதான?”
“இல்ல ராத்தா அது அவ்வூட்டுதான்” திக்கித்திக்கிச் சொன்னாள்.
“இன்னும் உங்க நாடகம் முடியலயாடி?” மேலும் வெறி கொண்டவள் போல் கதீஜாவிடம் பாயத் தொடங்கினாள். கூட்டம் தடுக்க வந்தாலும் முத்து நாச்சியாள் ஓய்வது போலத் தெரியவில்லை!
“பொறவு எங்கடி ஒளிச்சி வச்சிருக்கா..? எடுடி எடுடி..!” என்று அவளை தர தரவென எங்கோ இழுத்துச் சென்றாள்.
முத்துப்பொண்ணு பிள்ளையையும் தூக்கிக்கொண்டு, அஸ்மாவையும் கூட்டிக்கொண்டு பின்னாலேயே ஓடினாள்.
இந்த முத்து நாச்சியாவுக்கு என்னாச்சு என்று கூட்டமே திகைத்துப் போய் நின்றது! அவளுடைய அடாவடித்தனங்களைப் பொறுக்க முடியாத அங்கிருந்த ஆண்கள், பெண்கள் என்று அத்தனை பேரின் முகங்களில் கோபமும், முகம் சுளிப்பும் கூடிக் கொண்டேப் போனது. ஆனால், அவளின் பேயாட்டம் ஓய்வது போல் தெரியவில்லை! மோசமாகிக் கொண்டேதான் சென்றது!
எல்லோரும் பார்க்க, “பாவாட தாவணிய உருவிக் காட்டுடி.. முடிஞ்சி எங்கேயாவது வச்சிருப்பா..!” என்று அவள் மீது கையை வைக்கச் சென்றபோது, “மச்சி, என்ன வேல நீ பாத்துக்கிட்டு இருக்கா..! அல்லாஹ்வே…! யா இந்த அநியாயம் பண்றா?” என்று தனது சக்திக்கு மீறிய கத்தலோடு ஸபுரு அங்கே வந்தாள்.
“இப்பதான் வர்றியாக்கும்…” அவளை கோபமாகப் பார்ப்பது போல் பார்த்தாலும் அவள் உடுத்தி வந்த மங்கிய பழைய வெள்ளை துப்பட்டி முத்து நாச்சியாவிற்கு உள்ளூர ஒரு வித சந்தோசக் கிளர்ச்சியைத் தந்தது.
“ஓ வூட்டுச் சிறுக்கி பாத்துருக்க வேலைய பாத்தியா..!”
“ஓந் தொண்டதான் கைஜம்புக் கடை வரையும் கேக்குதே..! எல்லா கதையும் கேட்டுகிட்டுதான் வர்றேன்”
“ஒனக்கு புத்தி இருக்கா? இவளோடயா புள்ளய நீ அனுப்பி வப்ப? கொஞ்சம் கூட கூறு வாறு இல்ல! நம்ம வூட்டு புள்ள யாரு கூட சேருறதுன்னு ஒரு எண வேணா? நீ பாட்டுக்கு புள்ளய இவளுவ கிட்ட வுட்டுட்டு, எவன் வர்றான்னு போறான்னு வாசல்ல நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்துருப்பா… இப்ப பவுனு போச்சா? எந் தமயன் ஊருல இருந்தா இந்த அலங்கோலம்லாம் நடக்குமா..?”
“மச்சி பாத்து பேசு..!”
“நிறுத்து நிறுத்து ஓஞ் சேதிலாம் எங் காதுக்கு எட்டிக்கிட்டுதான் இருக்கு.” எல்லோரின் கண்ணுக்கும் இப்போது முத்து நாச்சியா ரட்சியாகவே தெரிந்தாள் என்பதை விட முழுவதுமாக தனது பேரையும் மட்டுமல்லாது வீட்டின் பேரையும் சேர்த்து கெடுத்து, சரித்துக் கொண்டிருந்தாள்.
“வேணா மச்சி… ஒன்ன மாதிரில்லாம் எனக்கு பேச வராது!” தொண்டை அடைத்து, ஸபுருக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது!
“பவுனு போச்சில்ல..!” நக்கலாய் ஒரு மாதிரி இழுத்துக் கேட்டாள்.
“அது பவுனே இல்ல!” வந்துகொண்டிருந்த விம்மலை அடக்கியவாறு, அதற்கு மேல் பேச முடியாமலும் தனது பிள்ளையைத் தூக்கிக்கொண்டு விறுவிறு என்று திரும்பி பார்க்காமல் மணலை விட்டு நடக்கத் தொடங்கினாள்.
‘ஓ… அப்படியா சங்கதி…! அப்ப பொட்டு பவுனு இப்ப வூட்ல இல்ல!’ உலை வைத்த பானையில் எழுந்து அடங்கும் மூடி போல் ஒரு சிரிப்பு முத்து நாச்சியாவின் அடி வயிற்றிலிருந்து தொண்டை வரை எழுந்து எழுந்து அடங்கியது. அவள் சொன்ன வார்த்தை, ஸபுரின் கஷ்ட நிலைமையை எல்லோருமுன்பும் திரை போட்டுக் காட்டி முழுவதுமாக அவளை திருப்தி கொள்ள வைத்திருந்தது.
கூட்டம் சூழ்ந்திருக்க, சட்டென சுதாரித்தவளாய் முத்துப்பொண்ணைப் பார்த்தாள்..
பேய் போல் அருகிலிருந்த மேசைக் கடையொன்றில், ஒரு பவுண்டோ பாட்டிலை அவளே எடுத்து உடைத்து ஆவேசமாக ‘மடக் மடக்’கென குடித்துக் கொண்டிருந்தாள்.
**********