
முக்கியம். அதுவே, ஆம் அதுதான், அந்தச் சம்பவம் நடந்துவிட்டது எனச் சொல்லிவிட்டு, அது எப்படி நடந்தது தெரியுமா என அதிகப்படியாகச் சொல்ல ஆரம்பிக்கும் போது வாசகர்களிடம் தோன்றிய பதைபதைப்பு மாறி ஒரு பத்திரிகை செய்தியை வாசிக்கின்ற மனநிலைக்கு மாறிவிடுகிறது.
இந்தக் கதையைச் செறிவாக்கம் செய்து கடைசி ஒரு பக்கத்தை இல்லாமலாக்கியிருந்தால் கூட இக்கதை முக்கியமான கதையாக மாறியிருக்கும் என்ற எண்ணமே இக்கதையை வாசித்து முடித்ததும் தோன்றியது.
இந்தக் கதையில் உள்ள பலவீனங்கள் இல்லாமல் அடுத்ததாய் ‘ஒன்றுமில்லை!’ என்கிற சிறுகதை அமைந்திருக்கிறது. பாலியல் வன்முறைக்கு ஆளான பள்ளி மாணவி அதனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. வீட்டிலும் வெளியிலும் பள்ளியிலும் அவளுக்கு என்னென்ன நேருமோ என்கிற அச்சத்தை நமக்குக் கொடுக்கும் கதை. இவ்வாறு பாதிக்கபப்ட்டவர்களுக்கு அடிப்படையில் தான் அதிலிருந்து மீண்டு வருவதற்குத் தன்னகத்தே ஒரு துணிச்சல் தேவை. எவன் இனி என்ன சொன்னாலும் நான் செய்யாத தவறுக்கு வாழ்நாள் முழுக்க நான் ஏன் பழியைச் சுமந்து பலியாக வேண்டும் என்று முன் நோக்கி நடக்கத் துணிச்சல் வேண்டும். இக்கதையில் வரும் சிறுமி அதைத்தான் செய்கிறாள்.
‘அந்த ஆசிரியையின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, “நத்திங் மேம். ஐம் ஓகே. கொஞ்சம் நகருங்க.. நான் முன்னாடி போகணும்!”, என்று கையால் நகரச்சொல்லி சைகை காட்டி அவரைத் தாண்டி முன்னே நடந்து சென்றாள்,’ என்று எழுத்தாளர் இச்சிறுகதையை முடித்திருக்கின்றார். ஆனால், ஒரு சிறந்த கதை முடிந்த இடத்தில் இருந்து வாசகர் அதனை இன்னொரு இடத்திற்கான தொடக்கத்தைக் கொடுக்கின்றார் என்பதற்கு இந்தக் கதை ஓர் உதாரணம்.
தொகுப்பில் நிறைவாக நாம் பார்க்கவுள்ளது புத்தகத்தின் தலைப்பு கதையான ‘தீர்மானம்’.
எல்லாக் கதைகளுமே சொல்லப்பட்டுவிட்டன; இன்று நாம் என்ன கதையைச் சொல்கிறோம் என்பதைவிட எப்படிக் கதையைச் சொல்கின்றோம் என்பதே முக்கியமாக இருக்கிறது.
ரிஸ்வான் ராஜாவின் ‘தீர்மானம்’ சிறுகதை புதிய கதை அல்ல. இது பல வடிவங்களில் இன்னும் சொல்லப்போனால் இதே வடிவத்திலேயே கூட வந்திருக்கும் கதைதான். ஆனால், அதனை அவர் சொன்னவிதத்திலும் கதையை அவர் முடித்த விதத்திலும் தனித்த கதையாக இக்கதை மாறுகின்றது.
பேருந்தில் குழந்தையுடன் ஒரு பொண் ஏறுகின்றாள். வழியில் அந்தக் குழந்தையின் சங்கிலி காணமல் போகிறது. யாரோ திருடிவிட்டார்கள் எனக் கூச்சல் போடுகின்றாள். பேருந்தில் உள்ள அனைவரும் முதலில் தங்களின் உடமைகளைச் சரி பார்க்கிறார்கள். தழும்புடன் செம்பட்டை தலையோடு ஒல்லியாகக் கருத்த தோலுடன் இருக்கும் 45வயது மதிக்கத்த மனிதர் மீது அந்தப் பெண்ணுக்குச் சந்தேகம் வருகிறது. அடுத்த கணமே அந்த மனிதர்தான் குற்றவாளி என முடிவு செய்கிறாள். அவள் மட்டுமல்லாது அந்தப் பேருந்தில் உள்ள அனைவருமே அந்த மனிதர்தான் திருடன் என முடிவு எடுக்கின்றார்கள். அந்த மனிதரின் முகமும் அவரின் உடையுமே அவர்மீது குற்றத்தை சுமத்தப் போதுமானதாக இருக்கிறது. அங்கு மட்டுமல்ல, அந்தப் பேருந்து காவல்நிலையம் வரை செல்கிறது. அங்கும் அந்த நபர்க்கு அதுதான் நிலைமையாக இருக்கிறது.
இதுவரை வழக்கமான கதைதான். ஒருவரின் முகத்தையோ அவர் அணிந்திருக்கும் ஆடையையோ அவரிடம் இருக்கும் தழும்பை வைத்தோ அவர் மீது தப்பான பார்வையை வைத்துக் குற்றம் சுமத்தி; அவர் நிரபராதி எனத் தெரிந்ததும் மன்னிப்பு கேட்பது.
‘தீர்மானம்’ கதையும் இதுவரை அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தது. கதையின் முடிவு கதையின் போக்கையே மாற்றி விட்டது, இது அந்தப் பழி சுமத்தப்பட்ட மனிதர் பற்றிய கதை அல்ல. மாறாகக் குற்றம் சுமத்திய பெண்ணையும் அந்த மனநிலையில் நம்முடன் வாழும் மனிதர்கள் பற்றிய கதை.
காவல் நிலையத்தில் அந்த மனிதருக்கு ஏற்படும் நிலைமை ரொம்பவும் மோசமானது. வாசிக்கையில் நம்மையும் பரிதாபப்பட வைக்கிறது. இதற்கிடையில் அந்தப் பெண்ணுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வருகின்றது. எடுத்துப் பேசுகின்றாள். தான் காவல்நிலையத்தில் இருப்பதாகவும் குழந்தையின் சங்கிலி காணாமல் போனதைக் குறித்தும் பேசுகிறாள். எதிர்முனையில் என்ன பேசினார்கள் எனத் தெரியவில்லை. அவளது முகம் வெளிறிப்போகிறது. ஆனால், நம்மால் அதனை யூகிக்க முடிகின்றது. குழந்தையின் சங்கிலி வீட்டிலேயே இருந்திருக்கக்கூடும்.
சந்தேகப்பட்ட நபரிடம் நகை இல்லை என்பதைச் சொன்ன காவல் துறையினர். அந்நபரை போகச்சொல்லி அந்தப் பெண்ணிடம் புகாரை எழுதிக் கொடுக்கச் சொல்கிறார்கள். அந்தப் பெண்ணோ எதுவும் பேசாமல் வெளியேறிக்கொண்டிருக்கும் நபரைப் பார்க்கிறார்.
தன்னால் தனது அவசர புத்தியாலும் தவறான புரிதலாலும் அப்பாவி ஒருவன் திருடனாகச் சந்தேகப்பட்டுக் காவல்நிலையத்தில் இத்தனை அவமானங்களை அடைந்திருக்கின்றான். ஆனால், அந்தப் பெண் அந்த மனிதருக்காக ஒரு சொல்லையும் சொல்லவில்லை. ஒருவனைக் குற்றம் சொல்ல குற்றவாளி என முத்திரைக் குத்த வேகமாகச் செயல்படும் யாரும் தங்களின் தவறுகளை ஒருபோதும் ஒத்துக் கொள்வதில்லை. திருடன் எனக் குற்றம் சுமத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அந்த மனிதன் மீது நம்மால் கருணை காட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தச் சிறுகதையின் முடிவில் எழுத்தாளர் ரிஸ்வான் ராஜா தனித்து நிற்கிறார்.
அவர் தொடர்ந்து புனைவுகளை எழுத வேண்டும். நாங்கள் அவரிடம் இருந்து இன்னும் பல கதைகளை எதிர்பார்த்திருக்கின்றோம் என்று ஒரு வாசகனாய் சொல்லி இக்கட்டுரையை முடிக்கின்றேன்.