இணைய இதழ் 119கவிதைகள்

சைத்ரீகன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அகாதம்

தோட்டம்
சமையலறைப்
படுக்கை
வாசல் மடி என்று
தேடல் வீடெனச் சுருங்கிக் கிடக்கத்
திறந்திருக்கும் திசைகளிலெல்லாம்
அலைகளே வந்து வந்து
நிற்கின்றன

இக்கணம்
இவள் வேண்டி நிற்பதோ
அலைகளுக்கு
அப்பால் இருக்கும்
அகாதம்.

*

கைநிறைய
கற்கள் வைத்துக்கொண்டு
கடல் நோக்கி வீசுகிறாள்

வீசிய கற்களெல்லாம்
சிறகுகள் முளைக்கப் பறக்கின்றன
ஆழ்நெடிய அகாதத்தில்.

*
அடிவானம் ஓர் அகாதம் .

*

சொற்கள்

இதழ்கள் போன்றே
சொற்கள் வைத்திருக்கிறாள்

மடித்து மடித்து
பூவாக்குகிறாள்

மடிப்பின் ஒவ்வொரு திறப்பிலும்
ஒவ்வொரு வெளிச்சம்.

*

பகல் வந்து எழுப்பிப் போகிறது
இரவு தொட்டவுடன் மூடிக்கொள்ளும் இலைகள் மீது
ஏன் இவ்வளவு கூச்சம் படிந்துள்ளது?

இலைகள் போன்றே
சொற்கள் வைத்திருக்கும் ஒருவன்
இரவெல்லாம் எழுதுகிறான்
அவ்வளவு அமைதி.

*

vsnatchathra@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button