இணைய இதழ்இணைய இதழ் 52தொடர்கள்

அகமும் புறமும்; 1 – கமலதேவி

தொடர் | வாசகசாலை

     செங்காந்தளின் இதழ்

த்தனைக்குப் பிறகும் வாழ்க்கை இந்த நொடியிலிருந்து தொடங்குகிறது என்பதையே இலக்கியங்கள் தன் ஆன்மாவாகக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு நிலத்தில், ஒரு பொழுதில், யானை மேல் துஞ்சிய தலைவனை காலத்தின் முன் அழியாமல் ஒரு நட்சத்திரம் என்று இன்று வரை நிறுத்த இலக்கியத்தால் முடிகிறது. அனைத்தையும் ஊழித்தீ என, ஆழிப்பேரலை என அடித்துச் சென்று ஒன்றுமில்லாமல் ஆக்கும் காலத்தின் முன்னால் வாழ்க்கையையும், இயற்கையையும் பின்னிக் கட்டிய அழியாத சரம் போன்றது சங்க இலக்கியம்.

ஒரே கவிதையை நாவல் என விரிக்கும் அளவிற்கு செறிவுடனும், ஒரு காட்சியாக மின்னலென வெளிச்சம் காட்டி மறையும் நுண்மையுடனும் நம் கைகளில் வைத்துக் கொள்ள முடிகிறது. இதற்கு உதாரணமாக நமக்கு நன்கு அறிமுகமான ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்ற கவிதையை சொல்லலாம். 

சங்கக் கவிதைகளை நான் செங்காந்தள் மலராக உருவகித்துக் கொள்வேன். கார்த்திகை மாதமானால் நெடுக வயல் வரப்புகளில், மலையோரங்களில், வேலிகளில் என்று எங்கும் பூத்து செறிந்திருக்கும். மலரின் கீழ்பாகம் மஞ்சள் நிறம். மேல்பாகம் செஞ்சிவப்பு. அகமும் புறமும் ஒன்றான மலர். புறமாக வாழ்க்கை ஒரு சிவந்த மலரென கிடக்க, அகத்தே மெல்லிய மஞ்சளில் தனக்கே உரிய மென்மையில் பூத்துக்கிடக்கும் மலர். புறத்தை சமனிக்கும் அகம். கார்த்திகை மாதத்தில் பூக்கும் ஒரு சிறுசெடியானது நம்மை நமக்கே பூப்பித்துக் காட்டுகிறது. அதை அன்றாடம் பார்த்தவன் எப்படி கவிதை எழுதாமல் இருந்திருக்க முடியும்? கண்முன் பசுமையாய், பாலையாய் விரிந்து கிடக்கும் நிலத்தினை தன் அகத்தினுள்ளும் உணர்ந்தவன் அந்நிலத்தை எப்படி எழுதினாலும் அவன் தன்னையே எழுதுகிறான். தன் மூலம் தன் மக்களை, நிலத்தை எழுதுகிறான்.

வாழ்க்கை ஒரே கணத்தில் அகமாகவும் புறமாகவும் இரண்டு நிலைகளில் இருக்கிறது. அதனால் தான் சங்கப்பாடல்கள் காட்டும் பாடுகள் இன்று வரை அதே தீவிரத்துடன் நம் வாழ்வில் உள்ளன. நாம் போர்களை இன்னும் விலக்கவில்லை. வெவ்வேறு போர்களை உருவாக்கிக் கொள்கிறோம். காதலை மறுதலிக்கவில்லை. கலம் மாற்றி ஊற்றி வைக்கிறோம். பொருள் தேடிப் பிரிவது ஓயவே இல்லை. மரணத்தை தவிர்க்க முடியுமா என்ன? ஆண் – பெண்ணிற்கான பேரன்பிற்கு பிறகும் கூட மற்றொரு களிப்பை [பரத்தமை] நாடிச்செல்லும் இயல்பு கூட மாறாமல் அப்படியே தான் இருக்கிறோம். அதனால் காயப்படும் ஒருத்தியோ, ஒருவனோ தன் தோழமையிடம் ‘கேள் தோழி’ என்று வெதும்பிக் கொண்டு தான் இருக்கிறாள்[ன்].

இந்த நொடியில் ‘சிறு கோட்டுப் பெரும் பழம்’ என ஒரு தலைவிக்கு காமம் பெரும் சுமையாகிறது. எங்கு காணினும் அன்னையர் தன் மைந்தருக்காக டாஸ்மாக்கின் முன் நெஞ்சம் புடைக்க ‘கையறு நிலை’யில் நிற்கிறார்கள். ஏய்த்து சென்றவனை[ளை] எண்ணி ‘மடலேறுவது’ நம் வீட்டின் அருகில் நடக்கிறது. எங்கோ ‘பெருந்திணை’யால் வதியும் உள்ளங்கள் இருக்கக்கூடும். எங்கோ உடன்போக்கு சென்ற தலைவியின் செவிலித்தாய் மண்மகள் அறியாத பாதம் கொண்ட என் பிள்ளை, கடும் சுரத்தில் எப்படி தலைவனுடன் நடந்து செல்கிறாளோ என்று எண்ணி எண்ணி கண்ணீர் உகுக்கிறாள். எங்கோ ஒரு தலைவி இற்செறிக்கப் படுகிறாள். தலைவியைக் காண தலைவன் யாரும் அறியாது இரவில் வருகிறான். ஊர் எல்லையில் கல்லில் தடுக்கிக்கொள்ளும் தன் கால்களை உதறிக்கொண்டு ‘இவ்வூரில் நாய்களை அவிழ்த்து விட்டுவிட்டு கற்களை கட்டிப்போட்டிருக்கிறார்கள்’ என்று பதட்டத்தை எள்ளலாக மாற்றியபடி தலைவியின் ஊருக்குள் நுழைகிறான்.

செங்காந்தள்

மென்பஞ்சு காந்தள் மலர் அன்ன கரங்கள் நோக தலைவி, தலைவன் உணவிற்காக முளிதயிர் பிசைவது கண்டு அவளின் தாய் வியப்படைகிறாள்.

‘வினையே ஆடவர்க்குயிரே’ என்று ஔவை ஏன் எழுத வேண்டும்? ‘கள்ளே ஆடவர்க்குயிரே’ என்றோ ‘காதலே ஆடவர்க்குயிரே’ என்றோ ஏன் எழுதவில்லை? ஒருவன் தனக்குரிய செயலிலேயே நிறைவடைய முடியும்.

இவற்றுக்கு எல்லாம் மறுதிசையில் தன் மென் பிஞ்சு கால்களால் நிலத்தை மிதித்தபடி ‘இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்’ ஒரு குழந்தை அனைத்தையும் மாற்றி மாற்றுலகம் செய்கிறது.

இப்படியிருக்க சங்கப்பாடல்கள் எப்படி பழையதாகும்? என்றும் உள்ள வாழ்வை தன் கருப்பொருளாக்கி வைத்திருக்கும் சங்கக்கவிதைகள் வாழ்வுள்ள வரை புதுப்புது நிலத்தில், புதுப்புது மனத்தில் செங்காந்தளின் கிழங்கு என பொதிந்திருந்து காலம் வருகையில் பூத்துக்கொண்டே இருக்கும். தானே மண்கண்ட இடத்தில் புதைந்து, நீர் வந்து சேரும் காலத்தில் பூக்கும். சங்கக்கவிதைகளும் வாழ்க்கையில் நின்று மனதில் பூப்பவை என்பதால் அந்த மலர்வெளிக்கு அழிவில்லை.

நினைத்துப் பார்த்தால் அனைத்துமே மலர்கள் தானே..சூரியன் மலருகிறான். நிலவும், நட்சத்திரங்களும் அந்தந்த பொழுதில் மலருகின்றன. அது போலவே மனம் மலரும் தருணங்கள் கவிதைகளாக ஆகின்றன. மரணத்தைப் போலவே மலர்தலும் தவிர்க்க முடியாதது என்பதே இந்தக் கவிதைகள் சொல்லும் ஒன்றின் இருமை.

என்னுடைய வெவ்வேறு வயதுகளில் வாசித்த சங்கக் கவிதைகளை என்னால் மனப்பாடம் செய்ய முடிந்ததில்லை. அவற்றை காட்சிகளாக மனதிற்குள் பொத்தி வைத்திருந்தேன். அவற்றை மீள எடுத்துப் பார்க்கும் எளிய வாசகியின் பார்வைகளாக, பழந்தமிழ் பாடல்களின் வாசிப்பனுபவமாக இனிவரும் கட்டுரைகள் இருக்கும். 

இந்தக் கட்டுரையை முடித்துவிட்டு துறையூர் அரசுமருத்துவமனைக்கு கிளம்புகிறேன். இருபது வயது நிறையாத பிள்ளைக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. உடன்போக்கு திருமணம் என்பதால் தாயும் தமையனும் கைவிட்ட பிள்ளை. தந்தையும் இல்லை. சித்தப்பாவும் சித்தியும் பிள்ளைப்பேறு பார்க்கிறார்கள். இதன் பின்னால் உள்ளது என்ன? சித்தப்பாவிற்கு தன் சகலையின் மீதுள்ள அன்பும் நட்பும் மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு அறம் விவசாயிக்கு உண்டு. கருவுற்ற பெண்ணை, பசுவை ,மண்ணை தனித்து விடக்கூடாது என்ற அறம். தனக்குப்பின் இந்த நிலத்தில் எஞ்சப் போவது அந்த புதுஉயிர் மட்டுமே என்ற ஆழ்பிரக்ஞை. ஒரு விவசாயிக்கு இந்த நிலமும், விண்ணும், விசும்பும், மழையும், காற்றும், காலமும் அனைத்தையும் சொல்லித்தரும். இத்தகைய மனிதர்கள் தங்களின் ஐவகை நிலத்தின் அறங்களை,வாழ்க்கையை பழந்தமிழ் பாடல்களில் நிரப்பி வைத்திருக்கிறார்கள். 

மொழி என்பது அகமாகிய ஒன்று புறமாக ஒலி என எடுத்த வடிவம். மனிதன் தன்னையே அதில் வைத்து பத்திரப்படுத்தும் கருவூலத்தின் பேழை. காலத்தின் முன் தன்னை நிறுத்தி வைக்கும் அரூபம். காலம் கடந்து மனிதன் நடந்து செல்லும் சூட்சுமப் பாதை. இன்னொரு மனம் சென்று அமரும் பொற்பீடம். பழந்தமிழ் பாடல்களின் வழியே மொழியாகி வருகிறார்கள் முன்னவர்கள். மொழியாகி வருகிறது அவர்கள் உணர்ந்த அறம். மொழியாகி வருகிறது அன்பு. மொழியாகி வருகிறது வன்மம். இவை அனைத்தும் இணைந்து மொழியாகி வருகிறது வாழ்க்கை. வாழ்க்கையே பழந்தமிழ் இலக்கியத்தின் பாடுபொருள். எனில் அழிவில்லாதது…அந்தமில்லாதது என்றே பழந்தமிழ் கவிதைகளை சொல்ல விழைகிறேன். 

இந்தத் தொடர் வழியே பழந்தமிழ் இலக்கியத்தின் ஒரு சில கவிதைகளை நம் வாழ்க்கையின் வெளிச்சத்தில், இருளில் எடுத்துப் பார்க்கலாம். நம் எளிய மனதிற்கு அவை என்னவாகத் தெரிந்தாலும் அதன் பொருட்டே அது எழுதப்பட்டுள்ளது. வைரத்திற்கு எண்ணற்ற பட்டைகள். காலத்தால் இறுக்கி செறிக்கப்பட்ட வைரங்கள் இந்தக் கவிதைகள். நிலத்திலிருந்து எழக்கூடிய நம் மனதின் ஔியுடன் இணைந்து, இந்த வைரங்களில் ஔிர்வது விசும்பின் ஔியும் தான். இவை மனம் என்னும் பிரபஞ்சத்தின் இருண்மை என்னும் முதன்மையை அசைத்த ஒளிப் புள்ளிகள். மொழியும், கவிதையும் மனிதன் கண்டடைந்த வெளிச்சங்கள். இந்தத் தொடரை எழுதுவதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘சங்கச்சித்திரங்கள்’ என்ற நூலை முன்னோடி நூலாகக் கொள்கிறேன். இந்த தருணத்தில் அவருக்கு என் வணக்கங்களும், அன்பும்!

(தொடரும்…)

kamaladevivanitha@gmail.com – 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button