‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து -பிரகாஷ் ராம் லக்ஷ்மி
கட்டுரை | வாசகசாலை

எழுத்தாளர் லட்சுமிஹரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பான “கூத்தொன்று கூடிற்று ” யாவரும் வெளியீடாக வந்துள்ளது.
தனிமனித உலகமாக மாறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் எழுதப்படும் கதைகளை எங்ஙனம் பகுத்தறிவது அல்லது அவைகள் நமக்கு வெளிப்படுத்தும் கூறுகளுக்குள் எப்படி உள்நுழைவது என்பதில் பெரும் சிக்கல் வாசகர்களுக்கு மட்டும் இல்லாது இக்காலகட்டங்களில் எழுதும் இளம் எழுத்தாளர்கள் பலருக்கு இருப்பதாகவே தெரிகிறது. அதனால் என்னவோ இங்கு பலர் எழுதும் கதைகள் அவர்களின் முன்னோடிகளின் வகைமைக்குள்ளேயே மாட்டிக் கொண்டது மட்டுமின்றி அவர்களின் மொழியும் அங்கேயே தேங்கி விடுகிறது. ஏனெனில் ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் அக்காலகட்டத்தை இயக்கும் விசைகளாகச் சிலவற்றை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. அப்போது ‘இப்படிதான்’ என்ற ஒன்றை அவர்கள் கைவிடவேண்டி இருக்கிறது. அதைத் திறமாக கைக்கொண்டவர்களைதான் காலம் தன்னில் தேக்கி வைத்திருக்கிறது.
வணிகம், போர் அதனிலிருந்து வெளிப்பட்ட தத்துவங்கள், அரசியல் , கலை, வெற்றி, தோல்வி போன்றவை மனித குலத்தின் சிந்தனை முறையை மாற்றியுள்ளது. அதே போல் இந்த நூற்றாண்டுக்கான விசையாக ‘தொழில்நுட்ப அகம்’ அனைவருக்கும் பிரத்தியேக உலகை உருவாக்கியிருக்கிறது. அதில் அவர்களுக்கான வரைமுறைகளை உண்டாக்கிக் கொள்ள சாத்தியங்களைக் கொடுத்திருக்கிறது. அங்கிருந்து ஒருவன் எதையும் தன்னிலை படுத்த முயன்றுகொண்டே இருக்கிறான். அப்போது கடவுள், மொழி, அரசியல், செல்வாக்கு, உணர்வுகள் என யாவற்றுக்கும் புது அர்த்தங்களை கைக்கொண்டு விடும் சாத்தியங்களை வழங்கியிருக்கிறது அதனிலிருந்து இயல்பாய் எந்த வித அவசரம் இன்றி கதைகளை கைக்கொண்டு நம்மிடம் அளிப்பதாகவே லட்சுமிஹரின் கதைகள் இருக்கிறது.அதனால் என்னவோ ‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை ஒரு முக்கியமான தொகுப்பாகச் சொல்லமுடியும்.
தொகுப்பின் முதல் கதையான ‘மெழுகு’ ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்ட இளவயது உடைய ஒருவன் மருத்துவரைச் சந்திக்கச் செல்லும் பயணத்தில் நிகழும் தொடர்புகளைச் சுற்றி அமைந்துள்ளது. சர்ச், அங்கு அறிமுகமாகும் பேபி எனும் கதாபாத்திரம் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் உரையாடலில், சமூகம் அவனுக்கு கொடுத்துள்ள கடவுள் என்னும் பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கி தனது பிரார்த்தனைகள் வழியே தனக்கான கடவுளாக அதை உருமாற்றி, தனது நோயிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறான் என்பதே மீதி கதை. இக்கதை முதலில் வாசகர் மனதில் அதைக் கடந்து செல்லவே வலியுறுத்தும், ஆனால் இக்கதையைத் தொடர்ந்து செல்லும் வாசகன் பெறுவது அவர்களை ஆட்படுத்தி வைத்திருக்கிற விலங்குகளுக்கான பாதையை.
“வேண்டுதலின் உச்சரிப்பு என் சவத்திற்கு முன் இடப்படும் மலர் மாலைகள். அதில் அலங்காரம் என்ற எதுவும் இல்லை.
ஒருவரின் வேண்டுதலில் தலையிடுதல் எவ்வளவு பெரிய குற்றம் என்பதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த காகிதத்தைப் பிரிக்கும் போது நமக்கான வரைமுறை எதன் அடிப்படையில் என்பதிலிருந்தே இங்குப் பல கேள்விகள் தனக்கான கருவை உருவாக்கி மீள்கின்றன,
இந்த தூதனிடம் எத்தனையோ வேண்டுதல்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது..அவைகள் நிறைவேற்றப்பட்ட உடன் இங்கிருந்து அக்காகிதங்கள் தானாக மறையும் ..’ ”
—- மெழுகு கதையிலிருந்து…
பிரார்த்தனைகள் வழியாக உருமாற்றம் பெரும் கடவுள்கள் என்பது இந்த நூற்றாண்டு தனிமனிதனுக்கான கடவுளின் பிரத்தியேக வடிவம் என்பதில் இருந்து இத்தொகுப்புக்கான மற்ற கதைகள் தொடங்குகிறது.
இரண்டாவது சிறுகதையான ‘நிப்பாண காதை’ சிறுகதையும், வரலாற்று ஆன்மீக புதிர் பாண்டஸி கதையாக களம் மாறுகிறது, அதில் வரும் கதாநாயகி ஒரு ஜமீனின் மகள். தனது காதலால் வீட்டை விட்டு வெளியேறி கணவனை இழந்து, கைக்குழந்தையைக் கழுகு சதை பிண்டமாக நினைத்து கவ்விக் கொண்டு செல்ல, அதில் தன்னிலை இழந்து நிர்வாணமாக மீண்டும் தனது வீட்டிற்கு வரும் அவளை ஊர் மக்கள் அவளின் அப்பா கட்டிய வீட்டில் பூட்டி வைக்கிறார்கள். பிக்குணியின் பின்புல கதையில் புத்தன் ஆக நினைக்கும் ஒருவன் வரும் கதை. இவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடல் என்பது முக்கியமானது. அவள் தன் உடலை எவ்வாறு கற்பனை செய்கிறாள்; தன் உடலைக் கடந்து என்ன தேடுகிறாள் அல்லது எவ்வாறு உருவகித்துக் கொள்கிறாள் என்பதான தொடர் கேள்விகளை நோக்கி வாசகனை இழுத்துச் செல்கிறது. அவளின் கோவத்தை வெறும் உடல் சார்ந்த கோபமாக மட்டுமில்லாமல் வேறோதொன்றின் வெளிப்பாடாகக் கண்டடைந்து, தன் உடல் என்னும் கற்பனையை அவன் எவ்வாறு கடந்து சென்று எதை அடைகிறான் மற்றும் அதன் எல்லைகளை உணர்வது என்பதே மீதிக் கதை.
இக்கதை மட்டுமல்ல இத்தொகுப்பின் எல்லா கதைகளும் தனி மனிதன் மேல் ஏற்பட்ட சமூகத்தின் மதிப்பீடுகளை மறு உருவாக்கத்திற்கே இட்டுச் செல்கிறது.
‘எதன் பொருட்டு தனக்கு இப்படி நடந்தது என்ற கோபத்தை, எல்லாவற்றையும் துறந்து வந்த ஒருத்தனிடம் காட்டிவிட்ட திருப்தி அவளிடம் இருந்தது ‘
— நிப்பாண காதை கதையிலிருந்து…
இக்கதைகளைத் தொடர்ந்து இக்காலத்தின் இளைய தலைமுறைகள் தனக்கான சமூக மற்றும் தனிமனித பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவுடன், தனது சூழலில் கிடைக்கும் நட்புகளை நோக்கிக் கதை வளர்கிறது. நிஜத்திலிருந்து விடுபட அவர்கள் மேற்கொள்ளும் பயணங்களைக் கவனிக்க முடிகிறது. அப்படிச் செல்பவர்கள் அடைவது என்ன.. அல்லது அதிலிருந்து எதை எடுத்துக் கொண்டு மீண்டும் தனது ‘ரெகுலர் லைப்’ க்கு வருகிறார்கள் என்ற கேள்வியைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைகளாக ‘ஆன் தி ராக்ஸ்’ சிறுகதையும், கதவுச் சிறகு சிறுகதையும் அமைகிறது.
‘பறவைகளைக் காணும் முகாமிற்கு நான் புதிது, நான் அதிகமாகப் பார்த்த பறவை இனமே காக்கை தான் “ என்று சொன்னதும் அவர் சிரித்துக்கொண்டே, “எல்லா இடங்களுக்கும் ஒரு பறவை இனம் காக்கைகள் தான் “ என்று சொன்னார் .
—- கதவுச் சிறகு கதையிலிருந்து
தொழில்நுட்பம் சார்ந்த இந்த வாழ்கைச் சூழலில், தன்னை சுற்றியுள்ள சக மனிதனிடம் இருந்து நாம் விலகி இருக்கப் பழகிக் கொண்டோம். இந்த விலகல்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் மீண்டும் இத்தொழில்நுட்பம் உருவாக்கும் கேளிக்கை உலகில் பெரும்பாலோனோர் மாட்டிக் கொள்கின்றனர். அதில் விரும்பி மாட்டிக் கொள்வதே இச்சூழலின் இன்னொரு முகம். அவ்வாறு இருக்கும் ஒருவன் தன்னை வெவ்வேறு நிலப்பரப்பு பயணங்களில் தேடி, தனது வாழ்க்கையில் சந்திக்கும் பெண் எவ்வாறு மீண்டும் சகமனிதன் கொடுக்கும் சுவையை அறிய வைத்துவிட்டுச் செல்கிறாள் என்பதையும், தான் வாழும் சூழலில் நிகழும் நிறைவின்மையைப் போக்கிக் கொள்ள வெவ்வேறு நிலத்தைத் தேடி மேற்கொள்ளும் பயணங்களில் அவர்கள் அப்பயணத்திற்கு அளிக்கும் அச்சிறுகால அளவைக் கொண்டு சக மனிதன் தரும் சுவையை அறியமுடியாமல் கடைசியில் அப்பயணத்தில் அவர்கள் பெற்ற கேளிக்கை நினைவுகளை மட்டும் சுமந்து திரும்புவதால் அவர்களே அறியாத நிறைவின்மையை சுமந்தே மீள்கிறார்கள். இதற்குக் காரணமும் அப்பயணத்தில் எல்லோரும் காட்டும் அவசரம். என்னதான் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் மனம் அதைச் சுற்றியே இருப்பதால் பயணத்திற்கும் மனதை அளிப்பதில்லை. இவ்விரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஊசலாட்டத்தையும் இக்கதைகளில் அறியமுடிகிறது.
‘சுவைகள் அனைத்தும் ஒன்றே; அது மனிதர்களைச் சார்ந்து மட்டும் பொருந்துவது அல்ல’
- ஆன் தி ராக்ஸ் கதையிலிருந்து
மெழுகு கதையின் அடுத்த அடி முன்னேறிய கதையாக ‘கித்தானுடைய வண்ணப் பேழை’ மரணத்தைப் பற்றி கூற்றைக் கேலியாக்குகிறது…
சினிமா நண்பன் பயணத்தின் போது ஓர் குழந்தையின் சவ ஊர்வலத்தைக் கவனிக்கிறான். அதில் அக்குழந்தையின் சவப்பெட்டி எப்போதும் இருக்கும் கருப்பு வண்ணத்தில் இல்லாமல் பல வண்ணங்களில் இருப்பதைப் பார்க்கிறான். இப்போது சினிமா துறையில் இருப்பவன் அதன் பாதிப்பில் தனக்கான கதையாக அதை மாற்ற முயல்கிறான், அதே போன்று சவப் பெட்டியைச் செய்யச் சொல்கிறான், சில காரணங்களால் ஷூட்டிங் தள்ளி சென்றதால் அச்சவப்பெட்டியைத் தான் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு எடுத்து வருகிறான். அங்கு அவனுடன் சேர்ந்து சினிமா துறை சாராத இன்னொரு நண்பனும் இருக்கிறான். அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் இக்காலகட்டங்களில் மரணத்திற்கான பகடியை கைக்கொள்கிறது.
‘முடிவுறா அவ்வண்ணங்களில் அவளின் முகத்தைத் தேட முற்பட்டேன். என்னிடமிருந்து மறைந்து விளையாட தொடங்கியிருந்தாள். அந்த வண்ணப்பேழையின் நிறம் மாறிக்கொண்டே இருந்தது. ’
-‘கித்தானுடைய வண்ணப்பேழை’ கதையிலிருந்து
மரணம் தன்னை கதவாக மாற்றிக்கொண்டு தான் சந்திக்கும் மனிதர்களிடம் தனக்கான சாவியை அளித்துவிட்டு, தனக்குப் பின்னால் பல வண்ணத்தினை மறைத்து வைத்துக்கொண்டு, தன்னை தைரியமாக அணுகும் மனிதனுக்காக காத்திருக்கிறது.
மேலும் கடந்த காலத்தில் வெற்றியாகக் கொள்ளப்பட்ட பெருவிசைகளின் நினைவுச் சின்னங்கள், மரபுகள், நம்பிக்கைகள், வழக்கங்கள் இக்காலத்தில் எவ்வாறு பொருள் கொள்ளப்படும், அதன் மதிப்பை எப்படி உணர்கிறோம் என்பதைத் தொட்டுச் செல்லும் கதைகளாக யுதிரம், கூடார கரிசனம் மற்றும், வேடிக்கையும் இன்ன பிறவும் போன்ற கதைகள் உள்ளது. இம்மாதிரியான கதைகள் தொன்ம பாணிக் கதைகளாக மட்டும் நின்று விடாமல் வலுவான மானுட தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
எதையாவது சாதித்தே ஆக வேண்டும் என்கிற பெரும் பொறுப்பை ஏற்றி இல்லையென்றால் அவனை மதிக்கத் தேவையில்லை என்று நினைத்து, அவன் மேல் அன்பு கொண்டு ஏற்றப்படும் மதிப்பின்மையை உணர்த்தும் கதையாக அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனையைக் கொள்ளலாம்.
“ஏன் மாமா இப்படி உன்ன கரிச்சுக்கொட்டிகிட்டே இருக்காங்களே உனக்கு கடுப்பாகல “
“கடுப்பாகி என்ன செய்ய போறோம் சொல்லு ..அதுல தப்பு இருக்குற மாதிரி எனக்கு தெரியல..இது நான் வேணுன்னு எடுத்துகிட்டது அது அவங்களோடது…அவ்வளவுதான்..உன்னையும் இச்சமூகம் ஆசிர்வதிக்கட்டும்..”
-அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனை கதையிலிருந்து
இந்த அரசியல் புரிதல்களை நான் மேற்கோள் காட்டிய அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனை கதையின் வரிகளில் இருந்து கவனிக்க முடியும். இச்சமூகம் சந்திரன் மாமா அவர்களின் மீது உருவாக்கும் பொருள்மயமாக்கலின் அழுத்தத்தை அவரின் மீது அன்பு கொண்டவர்கள்தான் உருவாக்குகிறார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டு இன்னொரு கதாப்பாத்திரற்கு சொல்லும் பதில்தான் முக்கியம். அதிலிருந்து அக்கதாபாத்திரத்தின் தேடல் எதை நோக்கியது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலேயே கதைகளில் வெளிப்படும் அகவுணர்வுகளின் விவரணைகள் எல்லாம் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஊடுருவிச் செல்வதால் நீண்ட வாக்கிய அமைப்புகள் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. மையக் கதாபாத்திரமான சந்திரன் தன் இயல்பில் இயங்கக் கூடிய பாத்திர வார்ப்பாய் அமைகிறது. அது லட்சுமிஹரை முதிர்ந்த கதை சொல்லியின் பாதைக்கு நகர்த்தியிருப்பதைக் காட்டுகிறது.
மேலும் இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் வெறும் இந்த காலகட்டத்தைச் சார்ந்த விசைகள் உருவாக்கும் பிரச்சனைகளை தொட்டுக் காட்டும் கதைகள் மட்டும் அல்லாது இந்த தொழில்நுட்ப விசைகள் ஏற்படுத்தும் நிலையில்லா தன்மைகளினால் ஒருவனுக்கு தனக்குள் ஏற்படும் “தன்னை எங்ஙனம் இச்சமூகத்தில் பொருத்திக் கொள்வது, அதனால் ஏற்படும் கோபம், சோர்வு, பொருள்மயமாக்கலின் விளைவாக தன்னை இவ்வாறு காட்டிக் கொள்ளவேண்டும் என்கிற சமூகம் இடும் நிபந்தனை” ஆகியவற்றால் ஏற்படும் கேள்விகளை அலசும் கதைகளாகவும், தன்னை சுற்றியுள்ள நிலையின்மைகளில் எங்கு தன் சுயத்தை நிலைநிறுத்திக் கொண்டால் ‘உண்மை’ யை புரிந்துகொள்ள முடியும் என்கிற லட்சுமிஹரின் அல்லது அவரின் கதைமாந்தர்களின் தேடலின் விளைவான கதைகள்தான் இவை.
மேலும் இக்கதைகளில் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த குறைந்தபட்ச புரிதல்கள் எது வென்ற உண்மைகளைப் புரிந்துகொள்ள முயல்கிறது.
அதனால் இக்கதாபாத்திரங்கள் அனைத்தும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் தனக்கான அரசியல் புரிதல் என்னும் நிலையில் நின்றுதான் உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. அதற்கு மாறான கதை மாந்தர்களின் வாழ்க்கையையும் லட்சுமிஹர் எழுதாமல் இல்லை. கதைக்கான உண்மையைக் கண்டறிய விளையும் மனநிலை கதைகள் எங்கும் நிரம்பி இருக்கிறது அவரது பலம். அது மட்டுமில்லாமல் பெரும்பாலான கதைகளில் உரையாடல் சிக்கல்கள் இருக்கிறது, அது மொழியின் அலட்சியம் அன்று, இன்றைய நவீன உரையாடல்கள் அவை என்று தெளிவாய் புரிகிறது. வாசகனை லட்சுமிஹர் அதிகமாக நம்பியே இக்கதைகளை எழுதி உள்ளதாகத் தெரிகிறது. அதனால் சிறு கருணை கூட காட்டாத அவரின் கச்சிதமான கதை சொல்லும் முறை சிலரைத் திணறடிக்கலாம். கதை சொல்வதிலேயே முழு கவனத்தையும் கதைகள் குவித்திருக்கிறது அதுவே இந்த கச்சிததிற்குக் காரணம் சில நேரங்களில் அக்கதையை சிதறடித்தலில் இருக்கும் பாங்கு கதையை வாசகனின் எல்லையை விரிவடையவே செய்திருக்கிறது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் ‘materialistic’ மன நிலையிலிருந்து முழுவதுமாக விலகி நின்று கதைகளை எழுதுகிறான், அது அவனின் தனிப்பட்ட முடிவாக அதைப் பார்க்க முடியாதவையாக அமைகிறது. இக்கதைகள் அதிலிருந்து மீண்டும் வர எழுதிய கதைகளாகவே இயற்கை என்னும் பரப்பில் தன்னை ஒன்றாக்குவதற்கான முயற்சியாகவே இருக்கிறது. பலரின் மாதிரிகள் அவை.
பல தரப்பட்ட களங்களில் பயணித்தல், கதை வடிவத்தில் பெரிதும் மாற்றங்கள் இன்றி கதை கூறலில் பல எல்லைகளை தன்வசப் படுத்தியிருக்கிறார். அப்படியான கதை கூறலில் உள்ளும், புறமும் இயல்பாய் அக்கதைகளை நகர்த்துதல் மட்டுமின்றி இடைப்பட்ட கதைகளை லட்சுமிஹர் தானாக மறைப்பதையும் நம்மால் உணர முடிகிறது. அப்படியாக ‘இடை நிறுத்தல் வாசிப்பு’ என்ற ஒன்றை லட்சுமிஹர் தன்னுடைய கதைகளில் பெரும்பாலும் பயன்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. அவரது முதல் தொகுப்பிலிருந்து இப்போது வரை அதைக் காணமுடிகிறது. அவைகள்தான் இக்கதைகளுக்குப் பன்முகத் தன்மையையும் வாசிக்கும் சுவாரசியத்தையும் கொடுக்கிறது. அவைகள் பெரிதும் கருத்தியல் முரண்களை, சீண்டல்களை வாசகர்களுக்கு இடையே ஏற்படுத்தத் தவறவில்லை. அப்படியாக வாசகர்களை புதிய எல்லையை அடையும் போது சில நேரங்களில் செயற்கையாக அவைகள் இருக்கிறதோ என்கிற அச்சமும் எழுகிறது ஆனால், அதில் லட்சுமிஹர் வெளிப்படுத்தும் சிந்தனைகள் அதில் உழன்று திரிந்த ஒருவனால் மட்டுமே எடுத்து வரக்கூடிய ஒன்று என்பது விளங்குகிறது. அதன் அர்த்தமாய் இங்கு வினவப்படுவது புதிய ஒரு கோணத்தை எந்த வித அச்சமும், பயமும் இன்றிச் சொல்லும் கதைகள் உள்நுழையக் கஷ்டம் எனினும் புது அனுபவமே. கதைகளை வாசிக்கையில் யாருடைய அடிதொட்டு இக்கதைகள் இயங்குகிறது என்பதைக் கண்டடைந்து அதை வகைப்படுத்த முடியாத படியாக கதைத் தேர்வும் சொல்லும் முறைகளும் வேறுபட்டுக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து ஒன்றே நமக்குப் புலப்படுகிறது கதை அல்லது கதையற்ற தன்மைக்கு உதவும் மொழியினை மட்டுமே லட்சுமிஹர் கையாளுகிறார். எந்த வித பாசாங்கோ அல்லது பக்க அளவோ அவருக்குப் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. சில நேரங்களில் தத்துவ ஒழுங்கின் அவசியமும் அவற்றின் கேள்வியும் நம்முடைய நம்பிக்கையை கேலிசெய்யாது கேள்விகேட்கிறது.
இக்கதைகள் அனைத்தையும் வாசிக்கும்போது கதையை சரியாக ஆசிரியர் முடிக்கவில்லை, சிறுகதை புரியவில்லை, முடிவில் ஒரு ட்விஸ்ட் இல்லை என்று நமக்குக் கற்பிக்கப்பட்ட பலவற்றில் நாம் ஒத்துப் போகலாம். ஆனால், இக்கதைகள் அனைத்தும் லட்சுமிஹர் தொடங்கி வைக்கும் நமக்கான இன்றைய இளைய மனதின் பயணங்கள். இக்கதைகள் அனைத்தும் நாம் எதை பிடித்துக் கொண்டு அல்லது எங்கு நின்று கொண்டு உண்மையை அறியவோ அல்லது குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவாவது முடியுமா? என்கிற இயற்கையை நோக்கிய கைநீட்டலாகவே உள்ளது.
இப்படியான கதைகள் தமிழில் மேலும் அதிகமாகவும் இன்னும் ஆழமாகவும் வருவதற்கு இத்தொகுப்பில் உள்ள கதைகள் தன்னுடைய வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறது என்று நம்புகிறேன்.