நக்னமுனி கவிதைகள் – தெலுங்கிலிருந்து தமிழில்; ஸ்ரீனிவாஸ் தெப்பல
மொழிபெயர்ப்பு கவிதைகள் | வாசகசாலை

பொழுது குத்தி எழுப்புவதற்கு முன்பாகவே
மெலிந்த காளைகள் பின்தொடர
தோளில் ஏரைச் சுமந்து
வயலுக்குச் செல்லும் ஒவ்வொரு விவசாயியும்
சிலுவையைச் சுமந்து செல்லும்
யேசுவைப் போல்
தோன்றுவான்
ஆம்
நான் கொலையைப் பற்றித்தான் கூறுகிறேன்
இறுதி விருந்தில்
தன்னைக் காட்டிக்கொடுக்கபோவது யாரென்று
இயேசுவுக்குத் தெரியும்
கொலைகாரர்கள் யாரென்று
எனக்குத் தெரியும்
பழியைச் சற்று நேரம் கடலின் மீது சுமத்துகிறேன்
நாட்காட்டிக்கு ரத்தமும்,சதையும் இல்லை
காலமென்பது வெறும் நாய் கவ்விய எலும்புத் துண்டு
பல்லியாய் சுவரில் ஒட்டிக் கிடக்கும்
ஒரு வெற்றுக் காகிதத் துண்டு
தேதிகள் குற்றவாளியாக கூண்டில் நிற்கும்
அது எந்தத் தேதியாகவும் இருக்கலாம்
அது நவம்பர் பத்தொன்பது ஆகியது தற்செயலாக இருக்கலாம்
நாட்காட்டியில்
பேரழிவுகளும் பரிகாசங்ளும் தவிர
கண்ணீரின் தடங்கள் இல்லை
வாரங்கள் நோயாளிகளைப் போல்
போர்வையில் காலை விரித்து உறங்கும்
போர்வை போர்த்திய முனங்கல்களின் மீது
வெள்ளையடிக்கும் வெள்ளைக் காகிதம்
காலத்தை நாட்கள், வாரங்களென வெட்டுகையில்
பீறிடும் வெள்ளைக் குருதி
வெள்ளைக் குருதிக்குப் பின்னால்
போர்வையை அகற்றி முனகல்களைக் கேட்க முடிந்தால்
அது எந்த நாள் ஆகட்டும், எந்த வாரமாகட்டும்
காலத்தின் கண் மட்டும் சனிக்கிழமை தூண்டில் முள்ளில் சிக்கி
துடித்துக்கொண்டே நின்றுவிட்டது
செய்யுள் வழக்கானாலும்
பேச்சு வழக்கானாலும்
அசுரத்தனத்தின், ‘அந்தகாரம்’ தான் எப்பொழுதும்
மனிதர்களை ஆளுகின்ற உண்மை
மனிதம் மட்டுமே
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியும் பிறந்து மடியும்
ஒளிக்கீற்று.
******
கடல், உனக்கு நினைவில் உள்ளதா?
பால்யத்தில்
வெள்ளை நுரைகளுடன் புசுபுசு நாய் போல்
நீ என் கால்களைச்
சூழ்ந்துகொண்டு திரிகையில்
அலைகளின் நாக்குகள் எனது பாதங்களை
நக்குகையில்
உன்னை வெகுளியென நினைத்தேன்
உன்னை வளர்க்க நினைத்தேன்
உன் பேரொலியைக் கட்டுப்படுத்திக் கொஞ்ச நினைத்தேன்
ஆமாம்
நான் கடலைக் கட்டுபடுத்த நினைத்தேன்
ஆனால்
அலைகளுக்குக் கூட நச்சுப்பல் இருக்குமென்று
என்னால் கண்டுகொள்ள முடியவில்லை
காற்றின் சிறகுகளுக்கும் கத்திகள் இருக்குமென்று
கண்டுகொள்ள முடியவில்லை
கண்ணீர்த் துளிகளில் கூட
அரசியல் பாய்ச்சலெடுக்குமென்று
கண்டுகொள்ள முடியவில்லை
அக்கணம்
பெருங்கடல் ஒரு நொடி
சூரியனும், சந்திரனும் கரித்துண்டுகளாய்
மாறிய நொடி
அத்தனையும் அழிந்தது
வானையும், பூமியையும் நம்பி வாழ்ந்த
அனைத்துயிர்களும்
இறந்து பிணமாக மாறிய நொடி
இறந்தவனுக்கு
முகவரி இருந்தாலும் இல்லாவிட்டாலும்
பரவாயில்லை
வயிற்றைக் கையால் பிடித்து
ஒரு பிடி சோற்றுக்காக
ஊர் ஊராகத் திரிபவர்கள் எத்தனை பேர் இறந்தாலும்
பரவாயில்லை
நூறு வருடங்கள் நிழல் தந்த ஆலவிருட்சம்
படபடவென உடைந்தாலும்
குருவிகள் காற்றின் வீச்சில் தரையில் விழுந்தாலும்
மின் கம்பங்கள் செடிகளைப் போல் வளைந்தாலும்
உலகத்தில் ஓலங்கள்
இருளில் இமைப்பொழுதில்
நீரின் இரும்புப் பிடியில்
துடிதுடித்து
எந்த மரணப் புன்னகை தீவுகளுக்கு சென்றடைந்ததோ
கண்ணிமைகள் பறவைகளின் சிறகுகளைப் போல்
படபவென அடித்துக்கொள்ள
கைகள் கழுத்தை
அறுக்கின்ற காற்றின் குத்துவாள்களைத் தடுக்க முயன்று
உதறித் துடித்துப் போய்
துண்டு துண்டாக உடைந்து சிதறி
மரணத்தின் முன்பு
பறவைகள், மிருகங்கள், மனிதன் உட்பட
அனைத்தும் சமமாகத்
தலை தொங்கிக் கிடக்கின்றன
சடலங்களாய்
வாழ்க்கையை
நிலைநிறுத்தப்போவதாகக் கூறி
தலை மீதேறி அமர்ந்திருப்பவர்களின்
அலட்சியத்திற்கும் அகந்தைக்கும்
சாட்சியமாக எஞ்சி நின்றன
ஆனாலும் எலும்புக்கூடு விளக்கம் கேட்காது.
*****
ஆசிரியர் குறிப்பு:
நக்னமுனி
1940ல் மசிலிப்பட்டினத்தில் பிறந்த, ‘நக்னமுனி’ யின் இயற்பெயர் மானேபள்ளி ஹ்ருஷி கேசவராவ். இவரது முதல் நூல், ‘உதயிஞ்சனி உதயாலு’. ‘தூர்ப்பு காலி, ‘நக்னமுனி கதைகள், ‘விலோம கதைகள்’போன்ற பிற நூல்களையும் எழுதியுள்ளார். ‘திகம்பர கவுலு’ என்ற பெயரில் 5 கவிஞர்களுடன் அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் கவிஞர்களுக்கான இயக்கம் ஒன்றை உருவாக்கினார். 1965ல் ஆந்திராவில் எழுத்தாளர்களிடையே இது மிகுந்த கவனத்தைப் பெற்றது. இவரது, ‘கொய்யகுர்ரம்’ தெலுங்கு இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பு.
*****
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

1989ல் பிறந்த இவர், ஆந்திரப் பிரதேசத்தில், விசாகா மாவட்டத்தில், ‘துனி’ எனும் ஊரைச் சார்ந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்து சென்னையில் வசித்து வருகிறார். கணினி அறிவியல் படித்தவர். கிராஃபிக்ஸ் டிசைனராக சில ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது சினிமாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழிலிருந்து தெலுங்கிற்கு நரனின், ‘கேசம்’ சிறுகதைத் தொகுப்பையும், ‘இவன்தான் பாலா’ எனும் இயக்குநர் பாலாவின் நினைவுக் குறிப்புகளையும் மொழிபெயர்த்துள்ளார்.
*******