ச.சக்தி கவிதைகள்

பகலில் மழை
இரவில் நட்சத்திரங்களின் வருகை
இப்பொழுது நான் யாருடனாவது
பேச வேண்டும்
குழந்தைகள் வரைந்த
நிலவின் நிழலில்
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது
நான் எழுதப்போகும்
ஒரு கவிதைக்கான சொற்கள் நூறு.
*
”நாளைக்கு வா
சந்திக்கலாம்” என்கிறாய்
இன்றைய இரவை
என்ன செய்து நானே கடப்பது ?
தாகத்துக்கு தண்ணீர் இல்லை
நீதான் இருக்கிறாய்
என் நெஞ்சுக்குழிக்குள் அமிர்தமாய்.
*
நீர் வேண்டாம்
நீ வேண்டாம்
நிலம் வேண்டாம்
ஊர் வேண்டாம்
அதிகாரம் வேண்டாம்
ஆட்சியில் எங்களுக்கு பங்கும் வேண்டாம்
வாழ தெரியாத
எங்களுக்கோ எதுவும் வேண்டாம்
செத்தால் எரிக்க சுடுகாடு வேண்டும்
நடமாடும் பிணங்களாய் நாங்கள்.
*
ஜன்னல் வழியாக
மழை பார்க்கிறேன்
உள்ளே நனைந்து
கொண்டிருக்கிறது என் இதயம்.
*
அரசின் வரலாற்று
புகைப்பட கண்காட்சியில்
அழுதபடி காட்சியளிக்கிறது
எங்கள் ஊர் தென்பெண்ணை ஆறு.
*
வாசலுக்கு வாசல்
முளைக்க தொடங்கிவிட்டன
அரளிச் செடியும் ரோஜா செடியும்
எங்கே என்
வேப்பிலை மரமும்
முருங்கை மரமும்
ஞாயிறு தோறும் உணவுக்கு முன்
உருண்டை பிடித்து சக்கரை தினித்து
தின்னக்கொடுத்ததை நினைவூட்டுகிறது
ஆயா சொல்லும் கதை ஒன்று.
*
அப்பாவுக்கு ஒரு உருண்டை
அக்காவுக்கு ஒரு உருண்டை
அண்ணனுக்கு ஒரு உருண்டை
தம்பிக்கு ஒரு உருண்டை
எனக்கு ஒரு உருண்டை
நாய்க்குட்டிக்கும் ஒரு உருண்டையென
உருண்டைகளால் நிரம்புகிறது
இன்றைய இரவுக்கான உணவு
நாளைய இரவுக்கு
நாம் என்ன செய்யப் போகிறோம் ?
காலத்தின் கால்களில்
உருண்டோடுகிறது உயிர்களின் பசி,
*
நினைவுகளில் நிரம்பி வழிகிறது
அவர்களது முகம்
நான் எங்கே இருக்கிறேன்
அவர்கள் எங்கே இருக்கிறார்கள்
நான் எங்கேயே
அவர்களும் அங்கே
படர்ந்து விரிந்த
என் மார்பகக் குழிக்குள் நிரம்புகிறது
அப்பாவின் பழைய புகைப்படம்
*
இது இரவுக்கான நேரம்
வானமெனும் செடியில்
பூக்க தொடங்கும் நட்சத்திரங்களை எண்ணத்தொடங்குகிறேன்
முடிவுற்றது என் எண்ணிக்கை



