இணைய இதழ் 110கவிதைகள்

ராணி கணேஷ் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

எல்லாம் முடிந்துவிட்டது
என்ற எண்ணத்தில் சோர்வுறும் மனதை
ஒற்றைப் புன்னைகையில் உயிர்க்க வைக்கிறாய்
மாயங்கள் நிறைந்த மந்திரப் புன்னகை
மறையாமல் இருக்கட்டும் உன்னிடமிருந்து
நான் கொஞ்சம் சந்தோஷமாய் வாழ்ந்து கொள்கிறேன்.

*

பேசவேண்டாமென நான்தான் கூறினேன்
அதையே வேதவாக்காக்கி பேசாமல் இருக்கிறாய்
அதற்காக உன்னுடன் நான்தான் சண்டையிடுகிறேன்
நான் அப்படித்தான் பேசுவேன் என்றும்
இப்படித்தான் சண்டை பிடிப்பேன் என்றும்
அறிந்தேயிருக்கிறாய்
இருந்தாலும்
நீயாகப் பேசியிருக்கலாம் எனக்காக!

*

சிறு மணித்துளிகளுக்கிடையே
உன்னிடமிருந்து வரும் ஒற்றை வார்த்தையை
தாங்கிய குறுஞ்செய்தி போதுமாய் இருக்கிறது
அந்நாளை ஆதுரத்துடனும் சிறுமுறுவலுடனும் நான் கடந்திட!

*

நீ பேசாவிட்டால் நானும் என் பிரியங்களைப் புதைத்து
அமைதியாய் இருக்க வேண்டுமா?
நீ பேசாதிருந்தாலும் நானாகப் பேசுவேன்
மீண்டும் மீண்டும்…
எனக்கு உன்னிடம் மானம் ரோஷம் என ஒன்றுமில்லை.

*
எனைத் தேடாத பொழுதுகளை
கணக்கில் சேர்த்து
சட்டெனக் கோபிக்கவும்
அடுத்த நொடியே கட்டியணைக்கவும்
இயல்பாய் இயல்கிறது உன்னிடம்
என்னிடம் கோபிக்காதே என்று கூறிக்கொண்டே
உன்னைத் திட்டி தீர்க்க முடிகிறது எனக்கு
சிரித்துக்கொண்டே கோபம் தீர
அடித்துக்கொள் எனக் கைநீட்டுகிறாய்
கைகோர்த்து கண்ணீரோடு
உன் கண்களைப் பார்க்கும் நொடியில்
எல்லாமே கரையத் துவங்குகிறது
எனை அப்படிப் பார்க்கும் அந்தக் கண்களை எப்படித் தவிர்ப்பேன்?

*

md@pioneerpac.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button