...
கவிதைகள்
Trending

க.ரகுநாதன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சொல்லில் இருப்பது வெறும் சொல்

மனதில் தோன்றிய படிமத்தின் மீது
சொல்லொன்று  பூனையைப் போல்
லாவகமாக ஏறி அமர்ந்தது.
கவிதையில் அதை சேர்த்து விடக் கூறி
இறங்க மறுத்து அடம்பிடித்தது.
இடமில்லையே என மறுத்தேன்.
நெடிய சொற்போர் தாண்டி
கவிதையை முடித்த போது
வரிகளுக்கு நடுவே ஒளிந்து கொண்டு
அப்பிராணியாகப் பார்த்தது சொல்.
கடுங்கோபத்தில் அதை நீக்கிவிட
சிறுகதையிலேனும் உவமையாக
சேர்க்கலாமே எனக் கெஞ்சியது.
சொல்லைப் படிமம் ஆக்குவது
கவிஞனின் உரிமை என்றேன்.
நானும் படிமமும் ஒன்றே என்றது சொல்.
சொல்லில் இருப்பது வெறும் சொல்
படிமத்தில் இருப்பது அனுபவம் என்றேன்.
படிமத்தின் அடிப்படை சொல் என்றது சொல்.
சொற்களைச் சேர்த்து படிமம் ஆக்குவது நான் என்றேன்.
முற்றிய வாதத்தின் இறுதியில்
படிமத்தின் ஒவ்வொரு எழுத்தாக
சொல் அழித்துச் செல்ல
அனுபவத்தை விட்டுவிட்டு
கவிதை காணாமல் போயிருந்தது.

***

மூன்றாம் நாள்

நீ உதிர்த்த சொற்களின்
பிழை பொருள்களுக்கான
பழிகளை எல்லாம் சேகரித்து
சிலுவையில் என்னை
அறைந்து கொள்கிறேன்.

ஒவ்வொரு சொல்லும்
ஆணியாக இறங்க
குருதியோடு வெளியேறுகிறது
ஆன்மா.

என்றோ உதிர்ந்து
உன் நினைவுகளில்
துருவேறிக் கிடக்கும்
சொற்களை எல்லாம்
ஒன்று சேர்த்து முள்முடியாக்கி
தலையில் சூட்டிவிடுகிறாய்.

குத்திய முட்கள் ஒவ்வொன்றும்
மூளையை ருசி பார்த்து
ரோஜாக்களின் வண்ணத்தை
கசிய விடுகின்றன.

இடைவெளியின்றி அறையப்பட்ட
சொற்களால் நிறைந்து
ஒற்றை ஆணியாகிப் போன இவ்வுடல்
உலர்ந்த ரத்த நிறப் பூ ஒன்றின்
காம்பாகிக் கிடக்கிறது.

நாக்கால் கசக்கி எறியப்படும்
உன் இறுதிச் சொல்லொன்று
உயிரைக் கொல்லும் முன்
பிரபஞ்சம் நோக்கித் தொழுகிறேன்
என்னுள் துடிக்கும்
தேவமைந்தனுக்கு
மூன்றாம் நாளொன்று
இல்லாது போகட்டும் என.

.ரகுநாதன்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.