இணைய இதழ்இணைய இதழ் 80கவிதைகள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

கிருதுமாநதி
இழுத்து வந்த
மணல் முகடுகளில்
ரீங்காரமிட்ட
பெருங்கைகளிலிருந்து
தப்பி வந்த
கண்ணாடி வளையல்களின்
பூவண்ணச் சிதறல்கள்
நீரற்றுக் கிடந்த நதி
நீர் திரளும்
பூ நெருப்பாய்
பூக்கையில்
பூவரசமரத்திலிருந்து
அலைக்கழிக்கிறது
ஒற்றைக்கால்
அக்காக்குருவி
வளவிக்காரியாக.

***

பூச்சட்டியில்
பூத்து விழும்
பொறியாய்
பூவானத்தின் மிக அருகில்
நிலைகுத்தி நிற்கும்
உச்சிக் கொப்பில்
மழைவிட்ட பின்
அலப்பி விடும்
அந்த ஒற்றைப் பறவையின்
பிய்ந்த சருகுகள்
நீர்ச்சொடுக்கோடு
உதிர்ந்து
தூவுகின்றன அட்சதையை
ஒதுங்கும் பெண்ணிடம்.

***

கீழ்வானத்தின்
பூங்கண்கள் சிவந்து
கசியும் அதிகாலை
விட்டில்களின் படை
காடியை அலங்கரிக்க
சாணிப்பக்குகள் அப்பிய
கொட்டடியில்
சருவப்பானை போன்று
மடி நீண்டு தொங்கும்
கருமறைப் பசுவிடம்
முட்டி மோதுகிறது
செவலைக் கிடாரி
விற்க மனமில்லை
இருப்பினும்
தாலியறுத்த அக்காவின்
மறுமணத்திற்காக
சந்தைக்குக் கிளம்புகிறது
மாற்றுக் கயிரோடு.

******

ayyanaredadimduttm97@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button