இணைய இதழ்இணைய இதழ் 93கவிதைகள்

உமா ஷக்தி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

கை நழுவிய கவிதை

எதைவிடவும் எது முக்கியம்
முற்றுப் பெறாத
கவிதை ஒன்றினை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
எரியும் மிச்சத்தை
அணைக்கும் சொற்களால்
உள்வாங்கினேன்
அது குறைபாடுள்ள அழகியல்
என்பதை ஒப்புக்கொள்கிறேன்
ஆயினும்
நிறைந்த தானியங்களுடன்
எழுந்து செல்கிறேன்
புறாக்கள்
வந்து இறங்கிவிட்டன.

****

பாதுகாக்கப்பட்ட இதயம்

இருமுனை கூர் கொண்ட
கத்தியால் மீண்டும் மீண்டும்
கீறிக் காயம்பட்ட
ஒரு இதயத்தை
சிறு கண்ணாடிக் குடுவைக்குள்
வைத்துப் பாதுகாக்கிறேன்
நீயும் வேறு உடைக்காதே!

****

கடைசி தேநீர்

எதிர் எதிரே
அமர்ந்து
விழிகளை
உற்றுநோக்கியபடி
இனி ஒருபோதும்
சந்திக்கவே இயலாத
துயரத்தை மென்று
விழுங்கியபடி
அந்தக் கடைசி
தேநீரைப் பருகி முடித்தோம்!
மிச்சம் வைத்த
ஒரு துளி நேசம்
நம்மைப் பார்த்து
புன்னகைக்கிறது!

****

இறுதிச் சுற்று

உன்னிலிருந்து
காணாமல் போக விழையும்
ஒவ்வொரு முறையும்
திரும்பி வர விரும்பாத தூரம்
என
உன் இதயத்தின்
பரப்பளவிற்குள்தான்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

*******

um.parvathy@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button