கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரின் ‘நின்றிருந்தது மழை’ நூல் அறிமுகம் – இளையவன் சிவா
கட்டுரை | வாசகசாலை

அடிகளின் எண்ணிக்கையில் அல்ல வரிகளின் வீரியத்தில் நிற்கிறது கவிதைகளின் உயிர்ப்பு. நீண்ட நெடும் செய்யுள் வரிகளெல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க மூன்று வரிகளில் முழுமையான காட்சிப் பதிவை நமக்குள் கடத்தி புதிய புதிய எண்ணங்களை உருவாக்குவதில் ஹைக்கூ கவிதைகள் சிறப்பிடம் பிடிக்கின்றன.
கவிஞன் தான் காணும் காட்சிகளை வரிகளாக்கி அதற்குள் சமூகத்திற்கான ஏதேனுமொரு செய்தியை சொல்வதற்கு முயற்சித்து நிற்கையில் வாசிப்போரின் எண்ண அலைகளையும் தனது கவிதைக்குள் இணைத்து விட்டு அவரையும் படைப்பாளியாக மாற்ற உதவுகிறது ஹைக்கூ கவிதைகள். ஒரு சூழல் உருவாக்கும் வரிகளுக்குள் தன்னைக் கரைக்கப் பார்க்கும் கவிஞன் அதை பதிவாக்கி எழுதுகையில் வாசிப்போருக்கு அந்த வரிகள் வேறொரு கோணத்தையும் வேறொரு அர்த்தத்தையும் வழங்கி விடுகிறது. ஹைக்கூ என்பதன் வகைமைக்குள் எழுதும் கவிதைகள் வாசகனின் பங்களிப்பையும் வாங்கி ஒளிர்வதே அதனுடைய தனித்தன்மையாக விளங்குகிறது.
நின்றிருந்தது மழை நூலின் வழியே தனித்துவமான ஹைக்கூக்களை எழுதி அனைவரது கவனத்தையும் கவர்கிறார் ஜெயக்குமார். யாரும் சிந்திக்காத கோணமும் காணுகின்ற காட்சியில் மறைந்து கிடக்கும் பொருளின் மீதான கவன ஈர்ப்பை அதிகரித்தலும் சமூகப் பார்வைக்குள் தென்படும் முரண்களின் மீதான அவலச்சுவையும் இவரது குறுங்கவிதைகளை ரசிக்க வைத்து நமக்குள் இருக்கும் கவித்துவத்தை எழுப்பி விடுகிறது.
சமூகத்தை நோக்கி சவுக்கை நீட்டும் மனங்களுக்குள் விழுந்திருக்கும் குப்பையை என்ன செய்வது? வளரும் இணையதள உலகில் குவியத் தொடங்கும் தகவல் குப்பைகளுக்குள் இளைய தலைமுறை புதைந்திருப்பதையும் யாருடைய அறிவுறுத்தலுக்கும் செவிமடுக்காத விட்டேத்தியான மனப்பான்மையையும் கூட்டிப் பார்ப்பதன் கவனமும் விரிகிறது கவிதையில்.
வீட்டுக்குள்ளே பத்திரமாய் குப்பை
தெருவிலே
கூட்டினேன்
நகைமுரண்களே நகரும் வாழ்வின் பாதையை சுவாரஸ்யமாக்கும் காட்சிகளை விவரிக்கின்றன. இயற்கையின் கொடையை பேராசைப் பாத்திரத்தில் நிரப்பி நிரப்பி சுரண்டிக் கொண்ட மனிதனுக்கு தேவை ஏற்படும்போது வேண்டும் தவத்தினால் விளைவது நன்மையாகி விடுமா என்ன? யாசகமோ வேண்டுதலோ பொதுநலத்தை நோக்கி இருக்கையில் நலமாகி விடும். ஆனால், இயற்கையின் சிதைவுக்கான ஆணிவேரைத் தேடும்படியான எண்ணம் மனிதனுக்குள் எழும்பினால் புட்டியில் நீரை அடைக்க வேண்டிய அவசியம் இருக்கப் போவதில்லை.
மழை வேண்டி
அம்மனுக்கு பூஜை
பாட்டில் தண்ணீரில்
சொல் வெல்லும் சொல்லாக நம்பிக்கையூட்டும் வார்த்தையாக வழியமைக்கும் எழுத்தாக இருக்கவேண்டியதன் அவசியமாகவே எறும்பின் தீண்டலை பார்க்கவேண்டும். பயத்தை விளைவிக்காத தடம் சொல்லாகவும் மாறி நிற்கையில் வாழ்வே வருடப்படும் வசந்தமாக மாறிவிடும்.
எறும்பு கடித்த தடம்
வருடுகிறது
பயம்
மக்களுக்கான மேன்மையை வழங்குதல் அவர்களால் தேர்வு செய்யப்படும் அரசியலமைப்பின் அவசியமாகிறது. குடிமக்களின் சகல நிவாரண மருந்தாக அரசின் திட்டங்கள் முழுமையாகச் செயல்பட்டால் சமூகத்தின் இருப்பில் உயிர்ப்பும் உயர்வும் ஒன்றிணைந்து வெற்றிநடை போடும். ஆனால், மதுவின் மயக்கத்தால் திட்டங்கள் எழும்புகையில் யாரோ ஒருவரின் கல்லறைக்குள் தான் நமக்கான வெளிச்சம் எட்டிப் பார்க்கிறது என்பதையாவது உணரவேண்டித் தூண்டுகிறது இக்கவிதை.
தடுக்கி விழுந்தான்
டாஸ்மாக் கடையில்
நலத்திட்டங்கள்
பொதுஇடங்களைப் பேணுதல் எனும் பண்பில் நாம் எங்கே நிற்கிறோம் என்பதை நாமே வினா எழுப்பி அதற்குள் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்.
சாலையோர பள்ளி
காயப்படாமல் நிற்கிறது
எச்சரிக்கை பலகை
கடவுளோ நம்பிக்கையோ சந்தேகத்தை நிறுத்திக் கொள்ளாமல் முழுமையாக தன்னை ஒப்படைத்தலே நமக்கான பாதையை சிறப்பாக அமைத்துக் கொடுக்கும். இயற்கையாக அம்மனை வைத்துப் பாருங்கள் மனிதனின் சுயநலச் செயல்களுக்கான பிராயச்சித்தமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
அம்மனுக்கு வெப்பம்
பூக்குழியில் பாதங்கள்
மாரி குளிர்ந்தது
வீட்டின் மீதான காண்போரின் சகலவித எண்ணங்களையும் தனக்குள் வாங்கியபடி நிமிர்ந்து நிற்கும் பொம்மையின் தியாகத்தை மரமாகப் பார்க்கலாம். இயற்கையாகப் பார்க்கலாம். வானமாகவும் பார்க்கலாம். பொம்மையின் மனமே வீட்டின் குணத்தை வெளிக்காட்டவும் தயங்குவதில்லை.
புதிதாக உருவாகிறது வீடு
புதிதாக வைக்கப்படுகிறது
பொம்மை
கட்டுப்பாடற்ற சுதந்திரம் சிலசமயங்களில் மனிதனுக்கு வரைமுறையற்ற ஒழுக்கக் குறைபாடுகளை வளர்த்தெடுக்க உதவி விடுகிறது.இன்றைய அறிவியலின் எட்டமுடியாத வேக வளர்ச்சியின் நீட்சி இணையத்தில் குவித்திடும் தகவல்களில் ஒளிந்திருக்கும் வஞ்சகத்தை தூண்டி விடுகிறது. பாலியல் உணர்வை எழுப்பி விடுகிறது. தவறுகளை செய்வதற்கான வழிமுறைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இணையத்தில் அலைவது தன்னை உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சமநிலையற்ற மனமும்தான்.
சுட்டெலி
இணையத்தில் அலைகிறது
தடுமாறும் கண்
சொல்லுதல் யார்க்கும் எளிய என்ற அய்யனின் மொழிக்கேற்ப எழுத்திலும் ஆவணத்திலும் எழுதிப் பார்க்கும் மனம் அதை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறதா என்பதை சிந்திக்கத் தூண்டுகிறது வரிகள். ஒருபுறம் சூழல் பாதுகாப்பிற்கான சட்டங்கள் எழுதப்பட, மறுபுறமோ இயற்கைச் சீரழிவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
கணிப்பொறியில் சூழல் பாதுகாப்பு
காற்றிலோ
துர்நாற்றம்
அழகிய கற்பனை. யாரும் சிந்தித்துப் பார்க்காத காட்சியமைப்பு. கற்றுக் கொள்பவர்களுக்கு ஆர்வமிருப்பதைப் பொருத்து கற்றலின் உயர்வு மாறுபடும். எங்கிருப்பினும் யாரும் யாருக்கும் வழிகாட்டலாம் என்பதை குளம் கற்றுத் தருகிறது. எவ்வளவு உயரத்தில் நாமிருந்தாலும் நமக்கான அடித்தளத்தை வழிகாட்டலை பாதுகாத்து தலை நிமிர்த்தியவர்களை மறவாது வணங்குதலை நினைவுபடுத்தியும் விடுகிறது கவிதை.
நிலா
பூமியை முத்தமிடுவதை
கற்றுக் கொடுக்கிறது குளம்
தொழிலின் அடிப்படையில் கடைநிலை தொழிலாளர்களின் அவலம் இன்னும் மேம்பாடு அடையாமல் தவிக்கிறது. எவ்வளவு உயரத்தில் வேலை செய்தாலும் அப்பாவின் பிம்பம் பிள்ளைக்கு குடிசையில்தான் ஒளியாய் தெரிகிறது என்பதை அதன்பின்னிருக்கும் உழைப்பின் மகிமையை பிள்ளையோடு சேர்த்து நம்மையும் உணரவைக்கிறது கவிதை.
ஏழாவது மாடி
கட்டுமானப் பணியில் அப்பா
குடிசையில் குழந்தை
கையில் காசு இருக்கையில் நின்று நிதானித்து கைக்கு அடக்கமாக செலவுகளைக் கைக்கொண்ட தலைமுறையில் இருந்து முற்றிலும் மாறி இணையப் பரிவர்த்தனையில் ஈடுபடும் இன்றைய சூழலின் காட்சியாகும் தென்படும் கவிதை அகலக்கால் வைப்பதன் விளைவுகளை எச்சரிக்கிறது.
கண்ணுக்குத் தெரிவதில்லை
பணப் பரிமாற்றம்
தலைக்கு மேல் கடன்
சுமைகளைத் துறக்கத் துறக்க நமக்கும் முளைக்கலாம் வானத்தை எட்டும் சிறகுகள். அழுத்திக் கொண்டிருக்கும் சுமைக்குள்தான் நமது பயணங்கள் அவசரத்தையும் வேகத்தையும் அதிகப்படுத்தி விடுகிறது. விட்டு விடுதலையாகிப் போகும் மனநிலை வாய்க்கப் பெற்றால் நாமும் பறக்கலாம்.
எத்தனை வேகம் போனாலும்
எட்டிப்பிடித்து முந்திச் செல்கிறது
பட்டாம்பூச்சி
மனிதனின் மனதை வாய்க்காலாகவும் கற்றாலால் பெற்ற அனுபவங்களை அவரவர் வெளிப்படுத்தும் கடைவிரித்தலாகவும் எண்ணுகையில் மழையாகிப்போகிறது கிடைக்கும் வாய்ப்புகள்.
பெய்த மழைக்கு
கடைவிரித்து விடுகிறது
வாய்க்கால்
எப்போதும் புன்னகை நம்மை உற்சாகத்தில் நடமாட வைக்கும்.இங்கே யாருக்கும் யாருடைய கவலையைப் பற்றிய கரிசனம் பார்வை விரியப் போவதில்லை. அவரவர்க்கான அழுத்தங்களை மறைத்துக்கொண்டு வெளிப்படுத்தும் புன்னகையே நடமாட்டத்தின் நீட்சியை நீட்டிக்கிறது. விளம்பர யுகத்தில் நம்மைத் திரும்பிப்பார்க்க வைக்கும் யுக்தி எல்லோருக்கும் அவசியமாகிறது. திரைப்படத்தின் வீரியமும் நடிகைகள் மீதான அரிதாரப்பூச்சின் மயக்க நிலையும் ஏற்படுத்தும் தாக்கத்தையும் எதிரொலிக்கிறது கவிதை.
நாள் முழுவதும்
புன்னகையுடன் நடிகை
விளம்பரப் பதாகை
பொதுவெளியில் மகளிர் இயக்கத்தை அதிகரித்து அவர்களின் திறமையை உலகு முழுக்க உணரவைக்கும் திட்டமாகவே பார்க்கப்படுகிறது மகளிருக்கான விடியல் பயணம் திட்டம். சில்லறை என்பதையும் தாண்டி மகளிர் மீதான தரிசனமும் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்ற பாரதியின் கனவும் ஒருசேர வெளிப்படுகிறது இக்கவிதையில்.
சில்லறை இல்லை
அரசுப் பேருந்தில்
பெண்கள்
அறிவியலின் தாக்கம் அதிகரிக்கும் இன்றைய காலச்சூழலில் அதனால் உருவாகும் மறுபக்க விளைவுகளையும் அலசிவிடுகிறது கவிதை. காக்கைக் கூட்டில் குயிலின் வளர்ச்சியையும் உணரமுடிகிறது தானே.
சிறு பறவை
கூட்டைத் தேடுகிறது
வாடகைத் தாயின் மகன்
சுற்றுச்சூழல் மீதான பரிவு, இயற்கையின் அசைவுகளை ரசிக்கும் அழகியல், அரசியலின் வழியே சமூகத்தின் நிகழ்வுகளுக்குள். தென்படுகிற அவலங்களை வெளிப்படுத்தும் நகை முரண், வழிகாட்டலை பாதையமைத்தவர்களை நினைவில் நிறுத்தச் சொல்லும் பாங்கு, எதிர்காலத் தலைமுறையினர் மீதான ஏக்கத்துடன் கூடிய கரிசனப் பார்வை என தன்னைச்சுற்றிய நிகழ்வுகளை முழுமையான உள்வாங்கலில் வெளிப்படுத்தி அழகியலை விட வாழ்வியல் மீதான பார்வையால் நம்மை நிரப்பியிருக்கிறது நின்றிருக்கும் மழை.
இன்னும் நிறைய ஹைக்கூ கவிதைகள் வழியே நல்லதொரு உயரத்தை அடைந்து கவனம் பெறும் குவிப்பாளராக ஜெயக்குமார் வலம் வருவார் என்பதில் ஐயமெதுவுமில்லை.
நின்றிருந்தது மழை
புன்னகை பூ ஜெயக்குமார்
படிகள் பதிப்பகம், பொள்ளாச்சி
முதல் பதிப்பு டிசம்பர் 2024
பக்கம் 122
விலை ரூபாய் 200