இணைய இதழ் 122கவிதைகள்

ஆஷா ஞானமரியம் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

வேலி

பராமரிக்கவோ
தண்ணீர் ஊற்றவோ
வேலி போடவோ
யாருமில்லை என்று
தெரிந்துதான்
முட்களால் வேலி
அமைத்துவிட்டு
பூக்கிறது
கள்ளிச்செடி.

*

பெயர்

தொலையாமல்
ஆவணங்களில்
ஒட்டிக்கொண்டு
வருகிறது
ஓடிப்போன அப்பனின்
பெயர்.

*

ஒப்பனை

உதிர்ந்து போன
இலைகள்
சருகாக மாறுவதை
வேடிக்கை பார்த்துக்கொண்டே
பூக்களால் ஒப்பனை
செய்கிறது
இலையுதிர் காலத்தைக்
கடந்து வந்த மரம்.

*

விளையாட்டு

கோடி மலர்கள்
அவன் வருகைக்காக
காத்திருக்கின்றன
என்று தெரிந்தும்
பனித்துளியை
காதலோடு உருக வைத்து
விளையாடிக் கொண்டிருக்கிறான்
சூரியன்.

*

வாழ்த்து

”நல்லா இரு”
என்று விடைபெற்ற
நொடிகள்
ஆசீர்வாதமா..?
ஜென்ம சாபமா..?

*

ashagnanamariyam@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button