
இவ்வளவு அழகாக
மெதுவாக
இந்த வாத்துகள்
சாலையைக் கடக்கும்போது
உலகம் எவ்வளவு வேகமாகச் சுழன்றால்
எனக்கென்ன?
*
திடீரென வந்து முட்டி மோதும்
புரட்டிப் போடும்
அடித்துச் செல்லும்
பிறகு எங்காவது
கரை ஒதுக்கி விடும்
காட்டாற்று வெள்ளம் கவிதை.
*
அன்றொரு நாள் இங்குதான்
செடிகளுக்கு அருகில்
மண்ணின் மீது
ஒரு பழத்தை வைத்தேன்
அதைக் காணவில்லை
மண் தின்றிருந்தது
நேற்று கடற்கரையில்
அலைகளில் கால் நனைத்தபடி
ஆழ்ந்த சிந்தனையில் நின்றிருந்தேன்
நினைவு திரும்பியபோது
பாதங்களைக் காணவில்லை
மண் மூடியிருந்தது
பாருங்களேன்
நான் ஒரு பைத்தியக்காரன்
தொலைந்து போக எவ்வளவு
சிரமப்பட்டு இருக்கிறேன்
ஒன்றும் செய்யாமல் இருந்தாலே
எல்லாம் தொலைந்து போகிறது இங்கே.
*