தாமஸ் பிக்கெட்டின் ‘சமத்துவம் நோக்கிய இயக்கம்– ஒரு சுருக்கமான வரலாறு’ நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
கட்டுரை | வாசகசாலை

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று மிகக் கொடிய பசிப்பிணியைப் போக்க, சத்ய ஞான சபையில் 150 ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு சாதி, மதம், இனம், மொழி பேதம் பாராமல் வந்தோருக்கெல்லாம் மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அறுபடாமல் இந்தச் செயல் தொடர்வதற்கு வெகுமக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்றாலும், இந்த நீடித்த வெற்றி வியப்புக்குரிய ஒன்றாகும்.
இது போல், சமத்துவமற்ற பாரபட்சம் நிறைந்த இந்த உலகில் கல்வியும், சுகாதார வசதியும், நியாயமான சம்பளமும், சொத்துரிமையும் அனைவருக்கும் கிடைக்கும் சமத்துவ நிலை உருவாக வேண்டும். வளர்ச்சி பெற்ற மற்றும் வளர்ச்சி குறைந்த நாடுகள் என்ற வேறுபாடின்றி வெள்ளையினத்தவர், கறுப்பினத்தவர், ஆண், பெண், கண்டங்கள் என்ற பாகுபாடின்றி கிடைக்க வேண்டும். கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மானுடம் சமத்துவ நிலையை எட்டியிருக்கிறது. அது எந்த அளவு? அதை அடைவதை சாத்தியப்படுத்திய மக்கள் இயக்கங்கள் எவை என்பதை ‘சமத்துவம் நோக்கிய இயக்கம் – ஒரு சுருக்கமான வரலாறு’ நூல் விவாதிக்கிறது.
தாமஸ் பிக்கெட்டி (1971) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சமகால பொருளாதார அறிஞர். இவர் எழுதிய ‘A Brief History of Equality’ என்ற நூல் ‘சமத்துவம் நோக்கிய இயக்கம்: சுருக்கமான வரலாறு’ என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது. சக மனிதன் ஏழ்மையில் இருக்கக் கூடாது, ‘உயர்குடிமக்களின்’ வாய்ப்புகள் அதே அளவில், அதே தரத்தில் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். பரம்பரை வரி, வளர்வீத வரிவிதிப்பு, கடந்த காலத் தவறுகளை சரிசெய்தல் மூலம் அத்தகைய சமத்துவம் சாத்தியமாகும். இது வரை மக்கள் இயக்கங்கள் நடத்தியிருக்கும் போராட்டங்கள் சமத்துவத்தைப் பெற்றுத் தந்துள்ளன என்பதை தரவுகள், ஒப்பீடுகளோடு விவரிக்கிறார் தாமஸ் பிக்கெட்டி. இவை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ‘உலக சமத்துவமின்மை தரவுத்தளம்’ ( WID) ஒன்றை அவர் உருவாக்கியிருக்கிறார்.
இந்த நூற்றாண்டுகளில் உலகம் முழுமையும் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேறறங்களை காரணிகளோடு இந்த நூல் விளக்குகிறது. எழுப்பும் ஆதார கேள்விகளும், சொல்லும் தீர்வுகளும் சமூகத்தை மேல்நோக்கி உந்தித்தள்ளும் வல்லமை பெற்றவை. ஆட்சியாளர்களை யோசிக்க வைப்பவை. மக்கள் இயக்கத்தினர் இந்த நூலை ஒரு கையேடாகக் கொள்ளலாம்.
‘பொருளாதாம் குறித்த கேள்விகளை, சில நிபுணர்களும் மேலாளர்களும் அடங்கிய வகுப்பினரிடம் மட்டுமே விட்டுவிட முடியாது’ என்று கூறும் தாமஸ் பிக்கெட்டி, ‘சமத்துவத்திற்கான இயக்கம் நீண்ட காலத்திற்கு முன்பு தொடங்கியப் போர்’ என்கிறார். இந்த நூல் அவர் இதுவரை எழுதிய நூல்களின் சாரம் என்கிறார்.
ஒரு நிறுவனத்தில் மேலாளர்களுக்கு குறிப்பிட்ட அளவிற்கு மேல் கிடைக்கும் பொருளாதாரப் பலன்களால் அவர்களது செயல்திறன் அதிகரிக்க வாய்ப்பில்லை. மாறாக கீழ்நிலை, நடுத்தர அளவிலான ஊதியங்களில் எதிர்மறைத் தாக்கத்தை அவை ஏற்படுத்தும் என்கிறார் பிக்கெட்டி. உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களை விட ஐந்து மடங்குகளுக்கு மேல் சம்பளம் இருக்கக் கூடாது என்கிறார். அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் குடும்பங்களையோ, நண்பர்களையோ பார்ப்பதில்லை. ஆனால், நுகர்வோர் பந்தயங்களில் பங்கேற்பதுடன் சூழலியல் பாதிப்பிற்கும் பங்களிக்கிறார்கள் என்கிறார்.
உலகின் வடபகுதியிலிருக்கும் வளர்ச்சி பெற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் அடிமை வர்த்தகத்தாலும், காலனியாதிக்கத்தாலும் முன்னேறி, வளம் பெற்று இருக்கின்றன. உழைப்புச் சுரண்டல் வழியாகவும் நாடுகளைக் காலனிப்படுத்தியும் பலன்பெற்ற நாடுகள் இவை. அவை வளம் குறைந்த நாடுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடமை அவற்றுக்கு இப்போது உள்ளது. புவி வெப்பமயமாதலுக்கு முதன்மை காரணமான பன்னாட்டு நிறுவனங்களும், முன்னேறிய நாடுகளும் ஏழைநாடுகளுக்கு நிதி கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது என்கிறார்.
அடிமைத்தனம் ஒழிப்பும், இருபதாம் நூற்றாண்டின் ரஷ்யப் புரட்சியும், இரண்டு உலகப் போர்களும், 1929-ஆம் ஆண்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியும், காலனிய நாடுகளின் விடுதலையையும் சமத்துவத்தையும் விரைவுபடுத்தி உள்ளன. ஜனநாயக அரசுகளும், மக்கள் நல அரசுகளும் மக்களுக்கு கல்வி, சுகாதாரம், வசதி போன்றவை கிடைக்கச் செய்வதில் கவனம் செலுத்தின.
ஜனநாயகச் சட்டங்கள் இருந்தாலும், உயர் கல்வி நிறுவனங்களில், மேல்தட்டு மாணவனுக்கு எளிதாகக் கிடைக்கும் ’அட்மிஷன்’ (பரம்பரை சேர்க்கை) சாதாரண மாணவனுக்குக் கிடைப்பதில்லை. சிறந்த நிறுவனங்களில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கப்படும் தொகை, சாதாரண கல்லூரிகளில் ஒரு மாணவனுக்கு அரசு செலவழிக்கும் தொகையை விட அதிகம். இவை போன்ற தரவுகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், அரசுகள் தாமாக முன்வந்து வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டு முறை, இந்தியாவில் சட்ட அவைகளிலும், பஞ்சாயத்துகளிலும், வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் பெருமளவு மக்களுக்கு வாய்ப்பை அளித்து சமத்துவத்தை அதிகரித்துள்ளது என்று பாராட்டுகிறார்.
சுதந்திரமான தேர்தல் நடைபெற அரசு நிதி உதவி, ஒருசிலரின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களை விடுவித்தல் சமத்துவத்தை விரைவுபடுத்தும் என்கிறார். ஆலைகளில் சில ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, அந்த ஆலைகளின் பங்குகளை ஒதுக்க வேண்டும் என்கிறார். வருமானம் அதிகரிக்கும்போது வரியும் அதிகம் விதிக்கப்பட வேண்டும் (வளர்வீத விரிவிதிப்பு முறை). அதிகம் வரி போடுவதால், உற்பத்தி குறைவதாக தரவுகள் இல்லை என்கிறார். சொத்துகளை பறிகொடுத்தல் என்ற எதிர்காலத்து அபாயத்தைக் காட்டிலும் வளர்வீத வரியை ஏற்றுக்கொள்வது பாதுகாப்பானது என்று கூறுகிறார்.
1900இ ஸ்வீடனில் சொத்துள்ளவர்க்கே வாக்குரிமை என்ற நிலை இருந்த போது, ஒருவர் மட்டுமே 100 சதவீதம் வாக்களிக்கும் மதிப்பு பெற்றிருந்ததைக் குறிப்பிடுகிறார். அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் (1861) பங்கு பெறும் அடிமைகள் விடுதலையளிக்கப்பட்டு ஒவ்வொருக்கும் ‘நாற்பது ஏக்கர் நிலமும் ஒரு கழுதையும்’ வழங்கப்படும் என ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்கு நிறைவேற்றப்படவில்லை. இந்த வெற்று முழக்கத்தை தனது நிறுவனத்தின் பெயராக வைத்து, திரைக்கலைஞர் ஸ்பைக் லீ பகடி செய்தார். அடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. மாறாகச் சட்டங்கள் மூலம் குறைந்த கூலிக்குக் கட்டாய உழைப்பைத் தர வேண்டியிருந்தது. மாறாக ஆட்சியாளர்கள் அடிமைகள் வைத்திருந்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கினர். பிரான்சிடமிருந்து 1904-இல் விடுதலைபெற்ற ஹைதி தீவு, அந்த நாட்டிற்கு செலுத்திய வெறுக்கத்தக்க இழப்பீட்டு நிதியை பிரான்ஸ் திருப்பி அளிக்க வேண்டும் என்கிறார்.
வாக்குரிமையில், சொத்துரிமையில், சம்பள விகிதத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் பற்றிப் பேசுகிறார். கடைசியாக 2015 – இல் தான் சவுதி அரேபிய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. சம்பளத்தில் ஆண்- பெண் மத்தியில் இடைவெளி இருக்கிறது.
இனவெறியாலும், காலனித்துவத்தாலும் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை போன்றவற்றில் சமத்துவம் வரும் வகையில் வரிவிதிப்பும், சட்டங்களும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நூல் சொல்லும் ஆதார செய்தி.
டிஜிடல் சர்வாதிகாரம், பன்மைத்துவ தேர்தல், மஞ்சள் சட்டை கிளர்ச்சி, விகிதாசார வரி, ஜூலை முடியாட்சி, மனித மேம்பாட்டுக் குறியீடு, எதிர்மறைச் சொத்துகள் போன்றவை இந்த நூலின் பின்னடைவில் உள்ள சொற்களில் சில.
ஆசிரியர், பங்கேற்பு ஜனநாயகம் அவசியம் என்கிறார். இவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், இவரது வாதம் ஒவ்வொன்றும் சமத்துவம் நோக்கியே உள்ளது. நூல் கூறும் தகவல்கள் செறிவானவை. ஒப்பீடு செய்துள்ள பட்டியல்கள் நுணுக்கமானவை. நூல் நெடுகிலும் கூறப்படும் சம்பவங்கள், தரவுகள், ஒப்பீடுகள், கருத்துருக்கள் வாசகனை யோசிக்க வைப்பவை.
தேர்தல்முறைகள், ஊடகம், தொழிற்சங்க, சமூக இயக்கங்களின் தாக்கம் சமத்துவத்தை விரைவுபடுத்தி உள்ளன. குடிமக்கள், அறிவைப் பெறுவதும், அதைச் சரியாகப் பயன்படுத்துவதும் சமத்துவத்திற்கு அவசியமானது. அந்தத் தேவையை இந்த நூல் நிறைவேற்றும். கடந்த நூற்றாண்டில் 1980 வரை விரைவாக நடந்த சமத்துவ இயக்கம் கடந்த இரண்டு தலைமுறைகளாக தேக்கம் அடைந்துள்ளது என்கிறார். ஆகவே, வாய்ப்புகளை மக்கள் இயக்கங்கள் மேலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அக்களூர் இரவி் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். 350 பக்கங்கள் உள்ள பேசப்பட வேண்டிய இந்த நூலை பொள்ளாச்சி எதிர் வெளியீடு வெளியிட்டு உன்னதமான கடமையைச் செய்துள்ளது. கல்லூரிகளில் பாடத்திட்டமாக இந்த நூலை வைக்கலாம். மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுவதுபோல் இது ’வரலாறு – அரசியல்- பொருளாதார – சமூக முக்கியத்துவம் வாய்ந்த நூல். ’