
கடந்து போதல்
நிமித்தம் சொல்லியும் நிலையழியாது
ஒளிச்சிறகுகளுடன் சமர் புரியாது
உகிர் உதிர உதிரம் உறையாது
நெடும்பயணத்தின்
சுவடு மறைத்து
ஓர்நாள் அடையக்கூடும்
நசிந்த காதலை.
கூசும் விழிகளில் நடனமிடும்
வர்ணஜாலங்களிலும்
மறைக்க முடிவதில்லை
கடற்கரை மணலின் உறுத்தல்களை
இமைரெப்பையில் படிந்திருக்கும்
உப்புப் படிமங்கள்
ஓயாது சொல்லிக் கொண்டிருக்கின்றன
தனியாய்க் கிடக்கும்
மனதின் அவசங்களை
கேட்கும் பாடலின் இசைக்குறிப்புகளும்
வரிகளும் சிலையென
சமைந்துகொள்ள
ஓயாது சபிக்கின்றன
தேங்கிப்போக எண்ணமிலாது
தேடிக்கொண்டே போவதி்ல்
தொலைந்து போயிருக்கிறது
பளிங்கெனும் நீருருவம்.
செம்மண்ணும் கழிவுமாய்
கலந்து மொத்தமாய்
நிறம்மாறிப்போனதில்
அப்படியொன்றும் வருத்தமில்லை
தழுவிவிட்டு வந்த பாறை மட்டும்
தனியே கிடப்பதைத் தவிர.
***
தேடல்
தட்டானின் சிறகில்
அமைந்து விடுகிறது
வேட்கை.
காதலின் ஆணிவேர் மட்டும்
இன்னும் மூர்க்கமாய்
அகழ்ந்து கொண்டிருக்கிறது
கான்கிரீட் தளத்தின்
ஒற்றைப் பொத்தலில்.
***
இருள் மறுக்கப்பட்தோர் அறை
சாத்தியமற்ற ஒரு வெளி.
வலிந்து புனைந்த மொழியும்
நினைந்து தொலைத்த பிரிவும்
உள்ளங்கால் உணரும் சிறுபுற்களென
உயரத்தில் காய்ந்து கொண்டிருக்கும்
உன்துணிகளின் வாசம்
அரூப போர்வையென
இயலாமையின் உச்சத்தில்
வெடிக்கும் மூளைமடிப்புகளில்
வழிவது மட்டும் தேவ மதுரம்
அடர்ந்த மழைக்குப்பின்னான
சில்லிப்பில் அசையும்
பிரயத்தனம்தான்
சிதறுதேங்காய்த்துண்டு
கடித்த பற்களிடையே
எட்டிப்பார்த்த
குருதிச்சுவை கொடும்பசியின்
முதற்கவளம்.
சவைத்த எலும்பின் மஜ்ஜைகளிலும்
ஊறியிருக்கக் கூடும்
அழுக்காய் ஒரு அதீதம்
அவலச்சுவை பழகியபின்
அந்தரங்கம் புனிதமானது என்பது
மட்டும்
மனிதர்களால்
புனரமைக்கப் பட்டது.
******
– Savithavenkatakrishnanv@gmail.com –