இணைய இதழ்இணைய இதழ் 69கவிதைகள்

சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

என்னை எவ்வளவு பிடிக்கும்
என்று அடிக்கடி கேட்கிறாய்

அளவுகள் கேட்கிறாய்
காரணங்கள் கேட்கிறாய்

சில சமயங்களில் திடீரென்று
வெறுக்கும் அளவிற்கு கோபம்
உண்டாக்கி இருக்கிறேனா என்றும்
கேட்டுக்கொள்கிறாய்

கேள் கண்ணே!
அடித்துப் பெய்தாலும்
ஆசையாய்த் தூறினாலும்

மழை ஏற்காத
கடல் உண்டா?!

***

இந்தப் பிரபஞ்சம்
கிழித்தெறிந்த
என் காதல் முனைக்கு
நீ
சாத்தியப்படவில்லை!

***

தீராத நேரங்கள் வேண்டி
சில மணித்துளிகள் சிரித்து
கதை பேசி, ஊடல் பூசி
இறவா வரம் வேண்டி
அல்லது
வேண்டும் பொழுது
இறக்கும் வரம் வேண்டி
காதல் தாண்டிய
கவிதைகள் செய்து
அழகாய் ஒருநாள் மரிப்போமா?!

***

உனை அணைத்துக்கொள்ள
என்றுமே நான்
கார்காலம் தேடியதில்லை!
எந்தவொரு இசைவடிவிலும்
நம்மை உட்புகுத்தி
முகம் தேடியதில்லை!

கரடுமுரடான பாதைகள்
என் பாதத்திற்குச் சம்மதமே!
வருடும் தென்றலை விட
வீசும் புயலில் பிழைக்கத் தெரிந்த
உன் காதல் சுமக்கும்
அசாத்தியமனுஷி – நான்!

******

sushkrish7@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button