இணைய இதழ் 114சிறுகதைகள்

பெயராடல் – அசோக்

சிறுகதை | வாசகசாலை

என்னிடம் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது. என்னவெனில், இப்போது உங்கள் பெயர் முருகேசன் என வைத்துக் கொள்வோம். நான் உங்களை மறுமுறை பார்க்கும்போது ‘என்ன செல்வகுமார் எப்டி இருக்க?’ என்றுதான் அழைப்பேன். மறுமுறை ‘என்னப்பா கனகராஜ்?’ எனவும் அழைப்பேன். நியாயமாக, என்னால் ஒருவரின் பெயரை ‘பெயர்’ என்ற அடையாளத்துடன் நிறுத்த விருப்பமில்லை. கூடவே அதில் ஒரு மஜாவும் இருக்கிறது. நான் அப்படி அழைக்கையில் அவர்களுக்கு நிறைய பெயர்கள் என ஆகி விடுகிறது. எப்போதும் வலது கையால் முகம் கழுபவரா நீங்கள்? இம்முறை இடக்கையால் கழுவிப் பாருங்கள். புது முகம் சிக்கும். ஒவ்வொரு முறையும் உங்கள் ஒரிஜினல் தவிர மற்ற அனைத்து நாமத்தாலும் அழைப்பேன். ‘ஹலோ.. இல்லயில்ல. என் பேரு முருகேசன்ங்க’ என நீங்கள் என்னைத்திருத்தும்போது ஒரு புன்சிரிப்புடன் எதிர்கொள்வேன். மாறாக நீங்கள் சீற்றம் கொண்டால் அதில் உள்ள வேடிக்கையை இழப்பீர்கள்.

இதை நான் என் நட்பு வட்டாரத்தில் எனக்கான தனிக்குணமாகவே வைத்து இருந்தேன். கில்லி படத்தில்கூட பிரகாஷ்ராஜ் ‘சிவசுப்பிரமணியன்’ என்ற போலிசின் பெயரை ‘கோயிந்தசாமி’ என விளிப்பார். அவர் கோபம் கொள்ள, “அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. நீ ஏன் சொல்ற?“ என்பார். அது என்னுள் ஆழ விதைந்துவிட்டதோ என்னவோ? அப்படி அடிக்கடி நான் பயன்படுத்தும் பெயர்கள் பார்த்தசாரதி, மகா கணபதி, திருச்செல்வம், யோகராஜ் போன்றன.

தமிழ் என்றொரு நண்பன் இருந்தான். முழுப்பெயர் தமிழரசன். சற்று பெருத்த உடல். முழுக்கை சட்டை மட்டுமே அணிவான். உளுந்து மூட்டையை மேலும் ஒரு சாக்கு கொண்டு சுற்றியது போல் இருப்பான். அவனை நிறைய பேர் உருவக்கேலி செய்வார்கள். நான் அப்படியில்லை. அவனுக்கு இதன்பால் என்னிடமும், என் இந்த பெயராடல் விசயத்திலும் பெரிய அன்பு மற்றும் கிரேஸ் இருந்தது. அவனின் நண்பர்களை நான் விசாரிக்கும்போதும் அவ்வாறே செய்தேன்.

‘ஒஹ்ஹ் நம்ம ராஜேஷா?’ என்பேன். உண்மையில் அவன் பெயர் சரவணனாக இருக்கும்.

‘ஜீ இப்ப நம்ம செல்வம் வருவான்,எதாச்சும் பேர் போட்டுவிடுங்க’ என வாலண்டியராக குதூகலிப்பான் தமிழ்.

சரி. இப்போ அதுக்கு என்ன? என்றால் ஒருமுறை எங்கள் சொந்த ஊர் சென்றபோது சுப்புராஜ் மாமா என்னை பார்த்து ‘என்னப்பா பாண்டி? என்ன பண்ற?’ என்றார். சொல்லில் ஒரு நக்கல். நானோ கிராமத்தில் கார்கோ க்ராக்ஸ் என கெட்டப்பில் இருந்தேன். சுற்றிலும் பார்த்து என்னைத்தான் சொல்கிறார் என்பதை தெரிந்து கொ ண்டேன்.திக் என்று இருந்தது. நம்மை அடிக்க சில விபூதிகள் காத்துக்கொண்டுதான் இருக்கும்போல்.

‘சொன்னேன் – எம் பேரு அசோக்கு.’

‘திருப்பரங்குன்றத்துல குளத்துல தவறி விழுந்த பின்னால நைட்டு நைட்டு எந்திரிச்சி எங்காச்சும் ஒடபோறேன் ஒடபோறேனு அரட்டிகிட்டே இருப்ப. வெளக்கமாத்தால ரெண்டு போட்டதுக்கு அப்புறம்தான் தூங்குவ. அப்ப உங்க தாத்தா வச்ச பேருதான் பாண்டி. பாண்டி சாமியோட பேரு. அந்த பேரு கொஞ்ச நாள்ல காணாமப் போயி வந்ததுதான் இந்த சோக்கு எல்லாம்’ – நீண்ட விளக்கம் கொடுத்து சுப்புராஜ் மாமா பீடியை காலால் போட்டு அமத்தையில் என் மஜா எல்லாம் அணைந்துவிட்டது போன்ற ஒரு நெருடல். ஆனாலும் இந்த பாண்டிக்கு முருகேசன்கள் எல்லாம் திருச்செல்வம்கள்தாம். யோகராஜ்கள்தாம். பெயரில் என்ன இருக்கிறது?

தமிழ்தான் ஒருமுறை கேட்டான் – ‘ஏன்ஜி என்ன மட்டும் அப்படி பேர் மாத்தி கூப்பிட மாட்றீங்க?’

‘செவ்வாழைகள் கிட்ட நா வச்சிக்கிறது இல்ல’ – என்றேன். ‘கூடவே இருக்கிற’ என்பதைப் போட்டு புரிந்து கொண்டான் தமிழ் என்கிற பரிகாசன். சின்னஞ்சிறு விசயங்களில் கூட பகடி தேடுவான். சில சமயங்களில் தானே ஒரு பகடியாக மாறுவான்.

‘ஜி, இந்த கேஸ்க்காரன் வேற இன்னைக்கு என்னப் பாக்க வாரானாம்’ -தமிழ்

‘எதுக்கு?’ – நான்

‘வேற எதுக்கு கேஸ் போடத்தான்’ – தமிழ்

மேலும், ‘நேத்துதான் அஞ்சு லட்சம் செக் பாஸ் பண்ணேன். ஒத்த ரூவாகூட கைல இல்ல’ – என புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவான். அவனின் பீடிகையைப் புரிந்து கொண்டு எனக்குள்ளும் ஜிபேயிலும் ஒரு பரிமாற்றம் நிகழும்.

‘யோவ் கேஸ்க்கு கொடுக்க காசு வேணும்னு கேக்கலாம்ல?’ என்றால், ‘அதுல ஒரு ஜாலி இருக்காது ஜி’ என்பான். பின்பு ஒருமுறை பார்க்கையில், ‘ஜி, அன்னைக்கு கேஸ்க்காரன் வந்தானா, அவன பார்த்தவுடன் உங்க ‘பிட்ட’ போட்டேன்’

புரியாமல் ‘என்ன?’ என்றேன். ‘ரெண்டு மாடி ஏறி களப்பா வந்து எறக்கி வச்சான். வச்ச அடுத்த செக்கண்டு என்ன பூங்குன்றன் இந்த வாட்டி லேட்டுன்னேன்.அவன் சிரிச்சிட்டே சொன்னான்.என் பேர் கண்ணன் ஸார். ஓ அப்டியான்னேன். களப்புலாம் கலைஞ்சி போன மாதிரி தெரிஞ்சான் ஜி அவன். அந்த நேரத்துல அவன் ஒருவாட்டியாச்சும் பூங்குன்றனா இருந்திருப்பான்லஜி?’

தமிழுக்கு இனமறியா குதூகலம். ‘ஆஆ…கண்டிப்பா’ என்றேன். கண்ணன்கள் பூங்குன்றன்கள் ஆவதில் என்ன பெரிய சிக்கல் இருந்துவிடப் போகிறது?

‘நீங்க அங்க இருந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க?’ என்றான். ‘அந்த நேரத்துல மனசுக்குள் என்ன தோணுதோ அதுதான் சொல்லியிருப்பேன்’ என்றேன்.இதை திட்டம் போட்டு செய்ய முடியாது. அது ஒருவித வன்முறை. ஒருவரின் பெயர் தங்கள் பெற்றோர்களால் ருசித்து வைக்கப்பட்டது. எனக்கெல்லாம் என் அப்பா அசோக் லேலண்டு லாரியில் பார்த்து ‘குமார்’ சேர்த்து வைத்தாராம். அதை உடைத்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரின் சாம்ராஜ்யத்தையே தகர்ப்பது போன்றது. சிறு போர் போன்றது. அந்த போருக்கு ஒரு சிறு நகைச்சுவை உணர்வும், கடந்து செல்லும் குணமும், சிறு கணமும் போதுமானது. ஒரு பாலகனிடம் இருக்கும் மிட்டாயை படக்கென பறித்து அதே நொடியில் படக்கென இன்முகத்துடன் திருப்பி அவனிடமே கொடுப்பதைப் போன்றது. சிறுவனுக்கும், அதனைப் பிடுங்கிய நமக்கும் ஏற்படும் ஒரு சிறு மனமாற்றம்தான் அந்த போரின் வெற்றி. நிறைய இடங்களில் பார்த்து இருப்போம்.

ஒருவரின் பெயரை மற்றவர்கள் எழுதுகையில் தவறு இருப்பின் அதை செவ்வனே திருத்தும் நபர்கள் உண்டு. கார்த்திக்கை ‘கார்த்தி‘ என்று எழுதினாலே குற்றம். பெயர் ஒரு அடையாளம். பெயருக்குள் ஒரு நபரின் உடல், குணம், அங்கீகாரம், நகை நட்டு, ஜாதி மதம், முடியில் எடுக்கும் வகுடு முதற்கொண்டு கலாச்சாரம், கத்திரிக்காய் என எல்லாமே அடங்கும். பெயரே அவராக இருக்கிறார்.

தமிழை சொல்லாமல் இக்கதை முடியாது. சில வருடங்கள் அவனைக் காண முடியவில்லை. ஓடும் பேருந்தின் இருபுறமும் சிதறும் செத்த இலைகள்தானே நாம். ஒருநாள் ஓர் இரவில் சர்ச் அருகில் வரச்சொன்னான். சீரான படுக்கைப்பட்டைகள் இருந்த புளு நிற ட்ஷிர்ட் போட்டிருந்தான். முழுக்கைச்சட்டைகள் எங்கே போயின? ஆனால், அதே உடல்.

சூடான இரவு. ஆனாலும், சூடான டீ குடித்தோம். ஏனோ மனுஷனுக்கு சூட்டில்கூட சூடுதான் கேட்கிறது. வினோதமானது மனசு மட்டும்தான்.

கழுத்தில் ட்ஷர்ட் மறைவில் ஒளியும் சிலுவை, சர்ச் வாசல் என இருந்தவனை கேட்டேன்.

‘ஆமா ஜி ஒன்னும் முடியல, இந்தப் பக்கம் வந்துட்டேன். ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. அம்மா உள்ளதான் வேல செய்றாங்க’ என சர்ச்சைக் காட்டினான். அந்நேரம் மணி ஒலித்தது. நிறைய பேசிக்கொண்டே இருந்தான். கொஞ்சம் கேட்டுக் கொண்டே இருந்தேன். பேச்சுக்கள் எங்கே இருந்து உற்பத்தி ஆகிறதோ அந்த இடமே உடலின் புனித ஸ்தலம். வாய்ல இருக்கு வார்த்த – என சொல்வாள் கோட்டையூரில் மெஸ் நடத்தும் மாமி.

‘ஜி, ஒன்னு தெரியுமா… இந்த ஏரியால நான்தான் இப்போ குட்டி அசோக். அதான்ஜி நீங்க. இங்க வந்த புதுசுல பெக்கேன்னு வேலை வீடு காசுன்னுதான் இருந்தேன். காசு இல்லாதப்ப போர் அடிக்கல. இப்போ காசிருக்கு. ஆனா, ஒரு துடிப்பே இல்ல. அதான் பார்த்தேன். உங்க ‘பிட்ட’ போட்டேன். ஒரு மாதிரி வொர்க் அவுட் ஆச்சி. ரெண்டு பொண்ணுங்களையே இப்போ கரெக்ட் பண்ணிருக்கேன் ஜி’ என்றானே பாருங்க தமிழ் என்னும் ‘டைசன் சேவியர்’.

ஆளையும் வாழ்வையும் மாற்றியிருக்கிறது பெயர். அப்படியென்றால் பெயரில் என்னதான் இருக்கிறது தேவையை விடவும்? என்றே எனக்குத் தோன்றியது. போரில் தோற்பவனும் வெற்றியை பெறுகிறானோ? எது தேவையோ அதுவே தர்மம் – என்று அச்சிட்ட காலண்டரை முன்பு ஒருமுறை தமிழ் வீட்டில் பார்த்து இருக்கிறேன். அதில் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு இருந்தார். இங்கே பின்புறம் மாதா அழகிய புன்னகையுடன் நிற்கிறார். இருவரின் சிரிப்பையும் எந்தப்பெயர் பிரிக்கும்?

பேசிக்கொண்டே இருக்கையில் கடந்து செல்லும் ஒருவனை பார்த்து தமிழ் சொன்னான். ‘என்ன செந்தூரப்பாண்டி,வேளைக்கு வர நேரமா இது?. அவனோ, ‘யோவ்.. போய்யா!’ என சிரிப்பளித்தான்.

‘அவர் சர்ச் வாட்ச்மேன் ஜி. பேரு ஆரோன். அவருக்கு நா டெய்லி இப்டி ஏதாச்சும் சொல்லி கூப்டனும். அப்படியே சிரிச்சிட்டே உள்ள போவாரு.’ என்றான் தமிழ். எப்போதும் தமிழ்தான் எனக்கு.

பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டு, ‘சரி ஜேக்கப்… வரட்டுமா?’ என்றேன்.

‘ஜீஈஈஈஈஈ..!’ என்றான்.

குளிர்ந்து மாறியது இரவு.

11asok@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button