கட்டுரைகள்

‘ஜென்டில்மேன்களின் ஆட்டம்’ – உலகக்கோப்பை சில உணர்வுப்பூர்வ தருணங்கள்…

சேவியர் ராஜதுரை

உலகக்கோப்பை தொடர் முடிந்துவிட்டது. முதன்முதலாக இங்கிலாந்து அணி உலகக்கோப்யைக் கைப்பற்றியுள்ளது.இந்த உலகக்கோப்பைப் போட்டிகளின் போது நடந்த சில சுவாரசியமான மற்றும் அழகான தருணங்களைப் பற்றி பார்ப்போம்.
1. கோலியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்
இந்தியா ஆஸ்திரேலியா போட்டியின் போது ஸ்மித்தை இங்கிலாந்து ரசிகர்கள் ‘சீட்டர் சீட்டர்’ என பால் டேம்பரிங் பிரச்சனையை வைத்துக் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.அப்போது பேட் செய்து கொண்டிருந்த கோலி, “என்ன இது? இப்படி செய்யாதீர்கள்… உற்சாகப்படுத்துங்கள்” என ரசிகர்களிடம் ஸ்மித்திற்காக பேசினார்.உடனே ஸ்மித் வந்து கோலியை கட்டிப்பிடித்து விட்டுச் செல்வார்.கோலி துவக்க காலத்தில் ஆஸ்திரேலியா ரசிகர்கள் திட்டிய பாேது ரசிக்களை நோக்கி மைதானத்திலேயே நடுவிரலை காண்பித்தார்.தற்போது முற்றிலுமாக முதிர்ச்சியடைந்து ஒரு சிறந்த ஸ்போர்ட்ஸ்மேனாக இருக்கிறார்.
2. நோ ஈகோ
இந்தியா ஆஸ்திரேலியா விளையாண்ட அதே போட்டியில் ஸ்டார்க் ஓவரில் தோனி அடித்த சிக்சரை கோலி ஆச்சர்யமாக வாயைப் பிளந்தபடி பந்து போன திசையைப் பார்த்துவிட்டு அப்படியே தோனியை திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.அவ்வளவு க்யூட்டாக இருக்கும்.தோனிக்கும் கோலிக்கும் சண்டை, ஈகோ பிரச்சினை போன்ற வதந்திகளுக்கெல்லாம் அந்தப் புன்னகை பதில் சொல்லியது.
3. ரசிகரின் ஏமாற்றம்
பாகிஸ்தான் ஆஸ்திரேலியா ஆடிய குரூப் போட்டியில் 37 வது ஓவரில் வாகாப் ரியாஸ் வீசிய பந்தில் வார்னர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆசிப் அலி தவறவிட்டார்.அதைப் பார்த்தவுடன் பாகிஸ்தான் ரசிகர் கொடுத்த ரியாக்சன் செம வைரலானது.அந்த முகத்தில் அத்தனை ஏமாற்றம்.அந்தப் புகைப்படம் வலைதளங்களில் அதிகமாக டெம்ப்ளேட்டாகவும் ஜிஃப் பைலாகவும் பகிரப்பட்டு வருகிறது.
4. இங்கிலாந்து இலங்கை போட்டி
இங்கிலாந்துடனான போட்டியில், “இங்கிலாந்து முதலில் பேட் செய்தால் 400 ரன்களைக் கடக்கும், இங்கிலாந்து மிகப் பெரிய ரன்வித்தியாசத்தில் வெற்றி பெறும்,இங்கிலாந்தின் ரன்வேட்டையைத் தடுக்க இலங்கை முதலில் பேட் செய்தால் மட்டுமே முடியும்…” எனக் கிண்டல் செய்தார்கள்.அதேபோல முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணியும் 222 ரன்களே சேர்த்தது.முப்பது ஓவர்களுக்குள் இங்கிலாந்து வெற்றி பெறும் என ரசிகர்கள் நினைத்தனர்.இதோ இதில் வெற்றிக்கான சதவீதமாக ரசிகர்கள் கணித்திருப்பதை பாருங்கள்.96 சதவீதம் பேர் இங்கிலாந்து வெல்லும் என கருத்து சொல்லியிருந்தார்கள்.ஆனால் இலங்கை துவண்டுவிடவில்லை.”இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும் நீ தோத்துட்ட தோத்துட்டனு சொன்னாலும் நீயா தோக்குற வர நெவர் எவர் கிவ் அப்…” என நம்பிக்கையோடு ஆடி இங்கிலாந்தை 212 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தது. யாரும் எதிர்பார்க்காமல் வெற்றி பெற்றது.சில சமயங்களில் நம்மை யாராவது இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டனு சொல்லும்பொழுது இந்தத் திரைப்படக் காட்சியைப் பார்த்து இந்தப் போட்டியின் முடிவை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
5. வேங்கையன் மகன் ஒத்தையில நின்னான்

வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து மோதிய போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 291 ரன்கள் குவித்தது.பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் தனி ஒருவனாய் ஆட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சென்றார் பிராத்வெயிட். நூறு ரன்கள் அடித்த பிராத்வெயிட் வெற்றிக்கு 7 பந்துகளில ஐந்து ரன் தேவை, கைவசம் ஒரே விக்கெட் என்றிருந்த போது அவுட்டானார்.நியூசிலாந்து ஐந்து ரன்களில் வெற்றி பெற்றது.போராடி தோற்றுப் போன ப்ராத்வெயிட் அங்கேயே முழங்காலிட்டு அமர அருகில் வந்த வில்லியம்சன் அவருக்கு ஆறுதல் கூறினார்.கிரிக்கெட்டை எதிரி நாட்டோடு ஆடினால் ஒரு போரைப் போல பார்க்கின்ற வீரர்கள் மத்தியில் இவர்களைப் போன்ற வீரர்கள் மற்றும் இதுபோன்ற தருணங்களால்தான் கிரிக்கெட் அழகாகிறது.

6. ஷமியின் ரிவன்ச்

இந்தியா வெஸ்ட்இண்டீஸ் போட்டியின் போது ஷமியை போல்டாக்கி விட்டு கார்ட்டெல் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் ஷமிக்கு சல்யூட் அடித்து அனுப்பினார்.இதன் பிறகு களமிறங்கிய வெஸ்ட்இண்டிஸ் அணி தோல்வியடைந்தது.சாகல் பந்தில் கார்டெல் ஆட்டமிழக்க ஷமி கார்டெல் வழியனுப்பியது போலவே ஒரு ஷல்யூட் அடித்து சிரித்தார்.உண்மையில் அது ஒரு ஸ்வீட் ரிவன்ச்.அவர் ஆக்ரோசமாகவோ சீண்டவோ இல்லை.கார்டெல்லும் அதேபோலத் தான்.

7. சீனியர் ரசிகை

பொதுவாக கிரிக்கெட்டைப் பார்க்க இளம் ரசிகைகளே அதிகம் வருவார்கள்.அவர்களையே கேமராமேன்களும் அதிகமாக காண்பிப்பார்கள்.ஆனால் இந்தியா பங்களாதேஷ் போட்டியின் போது 87 வயது பாட்டி விசில் ஊதிக்கொண்டு இந்திய அணியை உற்சாகப்படுத்தினார்.அதை அன்று அத்தனை கேமராக்களும் பதிவு செய்தன.போட்டி முடிந்த பிறகு கோலியும் ரோகித்தும் மைதானத்திலேயே அவரிடம் சென்று பேசி உற்சாகப்படுத்தியதற்கு நன்றி கூறினர்.

8. இந்த ஆட்டம் போதுமா குழந்த!

இந்தியா நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் ஜடேஜா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துவிட்டு அவருடைய ஸ்பெஷல் ஸ்டைலான வாள்சுற்றலை சுற்றினார்.பிறகு மைதானத்தை நோக்கி கையை உயர்த்தி இந்த ஆட்டம் போதுமா எனக் கேட்பது போல சைகை செய்தார்.சஞ்சய் மஞ்சரேக்கர் அவரை அணியில் எடுத்ததற்கு விமர்சனம் செய்திருந்தார்.அவருக்கான பதிலை தன்னுடைய ஆட்டத்தின் மூலம் கொடுத்தார் ஐடேஜா.அதன் பிறகு சஞ்சய் மஞ்சரேக்கரும் ஜடேஜா சிறப்பாக ஆடியதாக ட்வீட் செய்தார்.அரைசதம் அடித்த பிறகு ரோகித் கில்லியில் த்ரிசா விஜயை உற்சாகப்படுத்துவது போலவே ட்ரஸ்சிங் ரூமிலிருந்து ஜடேஜாவைப் பார்த்து செய்தது அழகான மொமண்ட்.

9. தோனி ரன்அவுட்

இந்த மொமண்ட்டை இன்னும பல ரசிகர்கள் மறக்கவில்லை.தோனி ஓடி வரும் பொழுது நேரடியாக பந்தை ஸ்டெப்ஸில் எறிந்து ரன்அவுட்டாக்கினார் கப்தில்.அந்த ரன்அவுட் நியூசிலாந்தை வெற்றி பெறச் செய்தது.கிரீசுக்கும் பேட்டுக்குமான அந்த இடைவெளி தான் இந்தியாவின் வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளியாக இருந்தது.அதைத் தொடர்ந்து தோனி,ரோகித்,கோலி சோகமே உருவாக கண்கலங்கிவிட்டனர்.

10. சிக்ஸர் இல்லை. ஆனால் ஆறு ரன்கள்…
இங்கிலாந்து நியூசிலாந்திற்கிடையேயான இறுதிப் போட்டியில் இறுதி ஓவரில் ஸ்டோக்ஸ் இரண்டாவது ரன்னிற்கு ஓடும் போது கப்தில் கீப்பரிடம் எறிந்த பந்து ஸ்டோக்ஸ் மேல் பட்டு ஆறு ரன்கள் போனது
11. கவலைப்படாதே கப்தில்
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கப்தில் சூப்பர் ஓவரில் ரன் அவுட்டானவுடன் கோப்பையை இழந்த சோகத்தில் கண்கலங்கி அங்கேயே அமர்ந்துவிட்டார்.உடனிருந்த நீசமும் கப்திலை தேற்றினார்.அப்போது கிறிஸ் வோக்ஸ் வெற்றி பெற்ற தருணத்தில் கொண்டாட்டங்களையும் தாண்டி கப்திலிடம் வந்து ஆறுதல் கூறினார்.கிரிக்கெட் இது போன்ற அற்புதமான தருணங்களால் அழகு பெறுகிறது.’ஜென்டில் மென் கேம்’ என்பதை இதுபோன்ற சம்பவங்கள் தான் நினைவுபடுத்துகின்றன.
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button