கவிதைகள்
Trending

பியானோவைத் தழுவுதல்

இரா.கவியரசு

நாங்கள் தேநீர் குடித்து விட்டு
கேபினுக்குள் நுழைந்த போது
கணிணி எரிந்து கொண்டிருந்தது.
அடுத்த மாதம் முதல்
எங்களுக்கு வேலை இல்லை என்று
கூவியது ஒலிப்பெருக்கி.
நெருப்புக்கு பசியாக இருக்குமென்று
பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரித்தேன்
சட்டைப்பையில் பற்றிய தீயில்
உண்டியலில் இருந்து எடுத்து வைத்த
நூனூறு ரூபாய் பாதி எரிந்து விட்டது.
குளிரூட்டும் வசதி இருந்ததால்
முதலாளி அறைக்குள்
அவசரமாக நுழைந்தோம்.
அவரது வாயிலிருந்துதான்
மொத்த நெருப்பும்
குபீரெனக் கிளம்பிக் கொண்டிருந்தது.
தேநீர் நிலையத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது கார்
வெடித்துச் சிதறிய போது
வீட்டில் சிலிண்டர் தீர்ந்து விட்டதாக
அழைப்பு வந்தது.
அன்று மதியம் ஆகாயத்தில்
நூறு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின.
செல்ல மகளுக்கு
தோசை மிகவும் பிடிக்கும்
தீப்பிடித்த உளுந்து மூட்டை லாரிகள்
வங்காள விரிகுடாவுக்குள் விரைந்தன.
தீயணைப்புப் படை வந்தவுடன்
பீய்ச்சி அடித்த தண்ணீரால்
நெருப்பை விட்டுவிட்டு
எங்களை ஓட ஓட விரட்டியது.
நாங்கள் நெருப்பில்தான்
வெந்து கொண்டிருந்தோம்
ஆனாலும்
நடுத்தெருவில் நிறைய பியானோக்கள்
மென்மையாக
இசையெழுப்பிக் கொண்டிருந்தன.
ஒரு பியானோவை பற்ற வைத்து
எரியும் அதன் மடியில்
முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தேன்.
எனது வீட்டில்
தோசைக்காக
என்னைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button