இணைய இதழ்இணைய இதழ் 83கவிதைகள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

வெள்ளிக்கிழமையென்றாலே
அம்மையின் கால்களுக்கு
ஓய்வு என்பதில்லை
விரிசல் விட்ட
கால்களில்
அப்பிக் கிடக்கின்றன
சகதிகளும்
திடமான நம்பிக்கையும்

வெடவெடுத்துப் போய்
கூடையை இறக்கி
கூவும் அவளுக்கு
அவ்வப்போது
கூறுக் காய்களுக்கிடையில்
நீந்திப் பாய்கிறது
மெல்லிய குரலின்
மௌன‌ ரீங்காரம்
ஒவ்வொரு வாரச்சந்தையிலும்…

****

கிணற்றடியில்
நினைவுகளைக் கிளப்பி
துவைத்துக் கொண்டிருக்கும்
வெள்ளந்தி அப்பாவிடம்
முத்தத்தை நடவு செய்யும்
வண்ணத்துப்பூச்சியின்
தூரத்து வாசனையை
சுழியெழுப்பி
நிமிரும்
புழுதிக் காற்றுக்கிடையில்
ஒற்றைப் பனையிலிருந்து
லயித்துக் கொண்டிருக்கிறது
இளைப்பாறும் சுடரொளி.

****

கொடிப்பிச்சிகளும்
கோபுர வெற்றிலையும்
விரித்தாடும்
மூங்கில் வரிந்த வேலியில்
நார் திரிந்த
கொடிக் கயிற்றில்
தறி வேட்டியின்
நுரைப் பூக்களை
சிலுப்பி உதறுகையில்
வந்தமர்கிறது
கதிர் அறுப்பில்
கூடுகளை இழந்த
எச்சக் கோலமிடும்
ஊர்க்குருவிகளின் படை

********

[email protected]

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button