சகதி
காய்ந்த இலையின்
முன்னிருந்த நிறமொத்த நீரை
வான்புனல் குழிதோண்டி
சேகரம் செய்திருந்தது
புவனத்தில்!
துரு ஏறிப் போயிருந்த
மக்காடுடன்
நீருள் புகுந்து வெளியேறியது
மிதிவண்டி.
ஸ்கூட்டர்களும்
கார்களும்
லாரிகளும்
மேற்கொண்டு கலக்கிவிட்டுப்
போயிருந்தன.
நாட்கள் கழிந்தொழியவே
தெரிய வந்தது
காணாமல் போன கலங்கல் நீர்
மறைத்து வைத்திருந்தது
பல்வேறு டயர் தடங்கள் கூடிய
துருப்பிடித்த மண்ணை.