
அறுதல்
நெருப்புக் குமிழ்களினூடே தத்தளிக்கும்
ஓரிரவில்…
நிறமற்ற கனவிலிருந்தேன்.
யானையின் துதிக்கை மீதேறி
நெடுதூரப் பயணம்
நேரிடாத வீதிகளில்
உலவிக் கொண்டிருக்கும்
மழலைகளின் கூச்சல்களில்
ஓடிக் கொண்டிருக்கும் யானையின்
மீதிருக்கும் இருப்பு
உருண்டு கீழே விழுவதும்
நசுங்குவதற்குமான
சாத்தியங்களை ஆலோசிக்கும்போதே
அலுங்கல் இல்லாமல்
ஆகப்போவதற்கான ஆவலுடன் இருக்கிறது.
*
உடைந்ததான ஒன்றைத்
தேட வேண்டும்…
மலையுச்சியிலும்
ஆழ்கடலிலும் மட்டுமல்லாது
வீட்டின் பரணிலும்
கிணற்று முகட்டின்
கரையிலும் கூட
கிடைக்கும்.
கண்ணாடிச் சில்லுகள்
மழுங்கியும்
கூழாங்கற்கள்
கூர்மையாகவும்.
*
எங்கும் நிகழாவண்ணம்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
காற்று.
*
சொல்
சிறகு
கொள்ள
கண்சிமிட்டும்
‘தருணம்’தான்..
அது மட்டும்
அமராமல்
ப
ற
ந்
து
கொண்டேயிருக்கிறது.
*



