நேற்றைய நிகழ்வில் நாள் தொடங்கும் முன்னரே பஞ்சாயத்தைத் தொடங்கியிருந்தனர். சரவணன் பற்றி ஏதோ சாக்ஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாத்திமா பாபு. “என்னடாது சம்பந்தமில்லாம நம்ம கிட்ட சொல்லிட்ருக்காங்க” என யோசித்துக் கொண்டே சாக்ஷி மையமாக ரியாக்ட் செய்து கொண்டிருந்தார். பின்பு குலேபகாவலி திரைப்படத்தின் “குலேபா….” பாடல் ஒலிக்க அனைவரும் தன்னிச்சையாக எழுந்து ஆடத் தொடங்க பன்னிரண்டாம் நாள் தொடங்கியது.
மார்னிங் ஆக்டிவிட்டியாக போட்டியாளர்களை கோழி பிடிக்கச் சொன்னார் சரவணன். இல்லாத கோழியை இருப்பது போல பிடிக்கத் துரத்த வேண்டும். அதில் மோகன் வைத்யாவை யாரோ ஏதோ சொல்லி விட்டார்கள் போல. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஓரமாக அமர்ந்திருந்தார். அனைவரும் என்னாச்சு என்னாச்சு எனக் கேட்க “எதுமில்லை மனசு சரியில்லை” என்றார். மோகன் வைத்யாவுக்கு எல்லோரும் தன்னைத் தாங்க வேண்டும், மரியாதை தர வேண்டும், எந்த விதத்திலும் கிண்டல் பண்ணக் கூடாது என விருப்பம். ஆனால் அனைவரிடமும் ஈடு கொடுத்து இணக்கமாக இருப்பது போலக் காட்டிக் கொள்கிறார். அந்த உரிமையில் யாரும் எதுவும் சொல்லி விட்டால் கண்ணில் ஜலம் வச்சுண்டு ஓரமாக அமர்ந்து கொள்கிறார். கிண்டல் செய்தவர் மன்னிப்புக் கேட்டதும், “அதெல்லாம் ஒன்னுமில்லேடா கண்ணா நான் உனக்கு அப்பா மாதிரி” எனச் சொல்லி கட்டியணைத்து முத்தம் கொடுத்து முதல் ஆளாக சமாதானம் ஆகி விடுகிறார். ஆனால், அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கிறார்.
கட் செய்தால் சாக்ஷிக்கும் கவினுக்குமான காட்சி. முந்தைய நாள் முகேன் பொட்டு வைக்கச் சொன்னதும் சாக்ஷி வைத்துக் கொண்டது கவினுக்குப் பிடிக்கவில்லையாம். பொசசிவ்னெஸ்ஸாம். “உனக்கு ஏன் அதெல்லாம் வருது? நீ மட்டும் எல்லார் கிட்டயும் பேசலாமா? இன்னைக்கும் நான் வைத்துக் கொள்வேன்” எனச் சொல்ல… கவின் அதற்கு சாக்ஷியை தத்தி எனத் திட்ட… சாக்ஷி அழகாக வெட்கப்பட்டுச் சிரிக்க… ஆஹா அவ்வளவு அற்புதமான காட்சி. பிண்ணனி இசை மட்டும் தான் இல்லை.
பிறகு வேண்டுமென்றே கவினைக் கடுப்பேத்த முகேனையே பொட்டு வைத்து விடச் சொல்லி வைத்துக் கொண்டார் சாக்ஷி. முகேன் பாவம். யாரையாவது கடுப்பேத்த பெண்கள் அவரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவரும் நட்புக்காக அனைத்தையும் செய்கிறார்.
பின்பு, “எனக்கு ஓட்ஸ் பிடிக்கலை. பாத்திமாம்மா பண்ண மாதிரி இனிமே பழைய சாதத்தை கொஞ்சம் நைட்டே எடுத்து வச்சுருங்க” என ரேஷ்மாவிடம் சொன்னார் மதுமிதா. அதோடில்லாமல் அதை கேப்டன் என்ற முறையில் மோகனிடம் சொன்னார். மோகன் வந்து சொன்ன போது, “நான் என்ன எடுத்து வைக்கிறது வேணும்னா அவுங்களையே எடுத்து வச்சுக்க சொல்லுங்க யாரும் குழந்தை இல்ல. வேலையே செய்யாம இருந்தா எப்டி? பிடிக்கலைனா அவுங்களையே சமைச்சு சாப்ட சொல்லுங்க ஓபன் கிச்சன் தான?” என்றார் ரேஷ்மா. உண்மை தான் இந்த முறை மதுமிதா பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியில் இருக்கிறார். ஒருமுறை கூட அவர் அங்கு வேலை செய்வது போல காட்டவேயில்லை. அதைத் தான் அவர்களும் குறிப்பிட்டனர்.
பின்னர், லக்ஸரி பட்ஜட் டாஸ்கிற்காக யானை அணியினர் ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு அழைக்கப்பட மற்றவர்களும் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர். போட்டியின் பெயர் ‘சாப்பாட்டு ராஜா’. ஆம், சாப்பிடும் டாஸ்க் தான். குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு முடிக்க வேண்டும். பாத்திமா பாபு, ரேஷ்மா, முகேன் மூவரும் யானை அணியின் சார்பாகச் சென்றனர். ஆனால் நாம் சென்றிருக்கலாமோ என்ற ஏக்கம் அனேகம் பேரிடம் இருந்தது. லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்குகளின் முடிவில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 1870 பாய்ண்டுகள் கிடைத்துள்ளன. இதில் வனிதா மட்டும் தான் முழுமையாக 1000 பாய்ண்டுகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
சாண்டியை அழைத்து டெய்லி டாஸ்க்கைச் சொன்னார் பிக் பாஸ். “இந்த முறை முதல் வார எவிக்சனுக்காக போட்டியாளர்களே ஒரு மனதாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்” இதை ப்ராங் டாஸ்க் எனச் சொன்ன பிக் பாஸ், அனைவரும் சேர்ந்து மீராவை வெளியேற்றுவதாக அறிவியுங்கள் என்று கூறினார்.
வெளியே வந்து டாஸ்க் லெட்டரைப் படித்தவுடன் முதலில் முகம் வெளிறிப் போனது மதுமிதாவுக்குத் தான். பேயறைந்தாற் போல ஆனார். பின்னர் ஹவுஸ் மேட்ஸை வெளியில் அழைத்து வந்து ப்ராங் டாஸ்க் என பிக் பாஸ் சொன்னதைத் தெரிவித்தார் சாண்டி. உள்ளே அனைவருமே, ” மதுமிதாவை நாமினேட் செய்யத் தான் விருப்பம் ஒட்டு மொத்த வீட்டின் முடிவாதலால் மீராவைச் சொல்கிறோம்” எனக் கூறினர். ஒருவேளை இந்த டாஸ்க் உண்மையானதாக இருந்திருந்தால் ஒட்டுமொத்த எதிர்ப்புடன் வெளியேறியிருப்பார் மதுமிதா.
ஆனால், இந்த டாஸ்க்கால் மீராவின் மீதான பிம்பம் வனிதா அணியினருக்கே மாறத் தொடங்கியுள்ளது. மீரா விடைபெறும் போது நடந்து கொண்டது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது. சாண்டி ப்ராங் டாஸ்க் என அறிவித்ததும் அனைவரும் மீராவிடம் சாரி சொன்னனர். அபியிடம் “உனக்கும் எனக்கும் என்ன தான் பிரச்சனை?” எனப் பேச முன் வந்த மீராவிடம் எகிறிய அபியை வனிதா அதட்டியது உண்மையிலேயே ஆச்சரியம் தான். இடையில் நாமினேட் செய்யும் போது பாத்திமா, மீராவை தேவதை எனக் குறிப்பிட்டதைக் கண்டித்தார் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதா மீராவுக்காக பேசியதை பெர்சனலாக எடுத்துக் கொண்ட அபி, சாக்ஷி, ஷெரினிடம் வந்து என்னை அடுத்த வாரம் நாமினேட் செய்து வெளியேற்ற திட்டமிடுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
பின்பு சாக்ஷி, “நான் இந்த வார நாமினேசன் லிஸ்ட்டில் இருக்கேன். அதைப் பற்றி துளியும் அக்கறை இல்லாம இவ அடுத்த வாரம் என்னை நாமினேட் செய்திருவாங்கனு பேசுறா. எவ்ளோ சுயநலம்?” எனக் கலங்கினார். ஷெரினும், வனிதாவும் “ஒருத்தரை நம்புனா முழுசா நம்பு. எதுக்கெடுத்தாலும் ஓவரா ரியாக்ட் பண்ணாத” என அபிராமிக்கு அறிவுரை கூறினர். கொஞ்ச நேரம் தனியாக அழுது கொண்டிருந்த அபி, சாக்ஷி ஷெரினிடம் மன்னிப்புக் கேட்டார்.
பின்பு சாண்டியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தன் குழந்தையின் அழுகை ஒலியை சவுண்ட் மிக்ஸ் செய்து சாண்டி வைத்திருந்த ரிங் டோனை ஒலி பரப்பிய பிக் பாஸ், அவர் குழந்தையின் வீடியோவையும் ஒளிபரப்பினார். கேக் அனுப்பி வைத்தார். குழந்தையை டிவியில் பார்த்த சாண்டி கதறி அழுதார். ஏன்ப்பா பிறந்தநாள் அதுவுமா எப்பவும் சிரிச்சுட்டே இருந்த பையனை அழ வைக்குறீங்க. ப்ச்.
அப்றம் சொல்ல மறந்துட்டேன். தனக்கு சப்போர்ட் செய்ததற்காக வனிதாவிடம் நன்றி கூறி, இது நாள் வரை நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து கட்டியணைத்துக் கொண்டார் மீரா. இது தான் இன்றைய Moment of the show. பொறுமையில்லாமல் கூட கூடப் பேசும் குணத்தை மட்டும் குறைத்துக் கொண்டால் மீரா வீட்டின் கடுமையான போட்டியாளாராக மாறுவார். கடைசி வரை நீடிப்பார்.