கவிதைகள்
கவிதைகள் -ஜான்ஸி ராணி

1)
ஒளிக்கும் அதன் இன்மைக்கும்
பிறந்ததாயிருக்கின்றன
நம் புரிதல்கள்.
உச்சிக்கும் வீழ்ச்சிக்கும்
உருண்டோடும் பிரியங்கள்.
அடர்காதல் வனங்களை
பதங்கமாக்கி கருக்கும்
க்ஷணநேர பித்துக்கள்.
சிறகணிந்த தேவன் _ வால் முளைத்த சாத்தான்
என
உன் உருண்டோடும் கோலிக்குண்டின்
திரவ லாகவத்தை
வெண்சிறகுகளுதிர்த்து
மண்டையோட்டு மாலை தரித்தே
அணைக்கிறேன் நான்.
2)
ஆண் vs பெண்
பெ: என் யானைப் பசிக்கு
சோளப்பொறி உனதன்பு.
ஆ: என் யானைப் பசிக்கு
சோளப்பொறி உன் காமம்.
பெ: காதல் பூவாகி காயாகி
கனிந்து பின் கலவியாகும்
நுண்ணியதெனதுலகில்.
ஆ:நியதிகளற்றது எனதுலகு
பெ: Men are from mars
women are from venus
ஆ: எதிர் துருவமே ஈர்ப்பல்லவா
பெ:என் இரங்கல் எல்லாம் ஈர்ப்பில் உடையும் என் சுயங்களுக்கு.