இயற்பெயர் குமரேசன்.அறையிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் அபராஜித் செல்வா என்று பக்கம் பக்கமாக எழுதி இருக்கும்.போன வாரம் பெயர் மாற்றி இருக்கிறான். தினமும் முன்னூறு தடவையாவது புதுப் பெயரை எழுத வேண்டும். மனதை ஒருமைப் படுத்தி அபராஜித் செல்வா அபராஜித் செல்வா என்று சொல்லிக் கொண்டே எழுத வேண்டும் அப்பதான் பவர் ஏறி பலன் கிடைக்கும்,
பதினாலு வருடங்கள் ஓடு ஓடு என்று ஓடோடி விட்டன. குமரேசன் என்கிற அபராஜித் செல்வா சென்னைக்கு வந்து….அஸிஸ்டென்ட் டைரக்டராக ஒரு பெரிய டைரக்டரிடம் பத்து வருடம் இருந்து விட்டு நாலு வருடங்களாக டைரக்ஷன் முயற்சி..எதுவும் செட் ஆகவில்லை.“கோய்முத்தூர்க்காரு ஒருத்தரு பேரை மாத்துறாப்ல பாஸு.மாத்துன கொஞ்ச நாள்லயே ரிசல்ட்டு கன்ஃபார்மு”என்றான் சோமசுந்தரக் காமாட்சி.இவனைப் போன்ற மற்றொரு எதிர்கால இயக்குனர். நிஜமாவா காமாட்சி என்று இவன் கேட்டதும். “நான் போன மாசம் பேரை மாத்திட்டேன் பாஸு இனிமே காமாட்சின்னு கூப்பிடாதே” என்றான்..“யார்ரா பேரை மாத்துனது ?” என்க “அந்த கோய்முத்தூர்க் காருதான். அவரு பேரு திலக் தியாகராஜ திருமூர்த்தி”
“திலக் தியாகராஜ திருமூர்த்தி? சொல்றதுக்கு கஷ்டமா இருக்காதா?”
“அவரு ஒரிஜினல் பேரு வேற..ஆனா இந்தப் பேரு வைச்சப்பறம்தான் அவரு மாசாமாசம் லச்சக்கணக்குல துட்டுப் பாக்கறாரு,,,தீ தீ தீ ன்னு உச்சரிப்பு வருதுல்ல? தீ மாதிரி அவர் புகழ் பரவி லச்சக்கணக்குல சம்பாரிக்கிறதா அவரே சொல்றாரு”
“சரி நீ என்னா பேர் மாத்தி இருக்கே?” “ சத்யா குரசோவா” “என்னது?”
“ஆமா பாஸு..சினிமா ரிலேட்டடா பேரு வைங்கன்னு சொன்னேன். உனக்கு பிடிச்ச டைரக்டர்ஸ் யாருன்னு கேட்டாப்ல. சத்யஜித்ரே அகிரா குரசோவான்னு சொன்னேன்.ரெண்டு செகண்ட்தான் யோசிச்சாரு…சட்டுன்னு இந்தப் பேரை பேப்பர்ல எழுதிக் குடுத்தாரு..எனக்கு அப்படியே மேலெல்லாம் ஜிவ்வுன்னு புல்லரிச்சிருச்சு..நம்மல்லாம் கதைக்கு டைட்டில் புடிக்க எம்புட்டு கஷ்டப்படறோம்?செகண்ட்ல பேரை யோசிக்கிறாப்ல!”
“சரி பேரை மாத்துனியே? ரிசல்ட்டு?”
“சொன்னா நம்ப மாட்டே…அதுக்கப்புறம் ரெண்டு பேர் கிட்ட கிட்டத்தட்ட ஓக்கே ஆகுற மாதிரி மீட்டிங்க் போய்ட்டிருக்கு…”
“என்னா பட்ஜெட்?” “ஒருத்தரு எம்பது ரூவாயில முடிக்கணும்ங்கிறாரு..”
“எம்பதா? எப்படி பாஸு முடியும்?”
“நான் ரெண்டு ரூவாக்கி ஒரு கதை சொன்னேன். யூத் லவ்வு. டீச்சரோட மகளை டீச்சர் கிட்ட படிக்கிற ஸ்டூடண்ட் காதலிக்கிறான்.இந்தப் பையனுக்கு ஃபீஸ் எல்லாமே கட்டறது அந்த டீச்சர்தான்..டீச்சர் விடோ…அவ மகளுக்கும் ஹீரோவுக்கும்தான் லவ்வு….அந்த டீச்சரை டாவடிக்கிற பிடி மாஸ்டர்தான் வில்லன்.அவன் என்ன பண்றான். டீச்சர் கிட்ட நல்ல பேர் எடுக்கணும்ங்கிறதுக்காக ஹீரொவை ஃபுட்பால் கிரவுண்ட்ல வைச்சு அடி நொக்கு நொக்குன்னு நொக்கி எடுக்கறான்.” இதைச் சொல்கையில் குரசோவா பல்லைக் கடித்துக் கொண்டு கைகளை இறுக்கி காற்றில் குத்தி காலால் தரையை உதைத்து மானசீகமாக ஹீரோவை நொக்கி எடுத்தான். எப்பவுமே அப்படி இன்வால்வ்மென்ட்டோடுதான் கதை சொல்வான்.
“சரிதான்…அகிரா குரசோவா சத்யஜித்ரே ரெண்டு பேர் பேரையும் சேர்த்து வைச்சுகிட்டு இப்படி ஒரு கதையா சொல்லுவே?”
“லட்சியத்தும் நடைமுறைக்கும் வித்தியாசமிருக்கில்ல? ரெண்டு மூணு படம் ஜெயிச்சிட்டு அப்புறம் நமக்குப் பிடிச்ச படத்தை எடுக்க வேண்டியதுதான்…நான் செவன் சாமுராயையே தமிழ்ல எடுத்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன் தெரியுமா?”
“பழைய பங்களாவோட கதவு நிலை எல்லாம் பிரிச்சு விக்கிற மாதிரி சீன் சீனா பிரிச்சு ஏற்கனவே அந்த படத்தை பல பேரு எடுத்தாச்சு பாஸு”
“சரி அதை விடு. இந்த ரெண்டு பார்ட்டியில ஏதாச்சும் ஒண்ணு எனக்கு ஓக்கே ஆய்ரும்…பேரை மாத்தி ஒரே மாசத்தில இப்படி ஒரு டெவலப்மென்ட்டு…அதனால நீயும் மாத்து நல்ல ரிசல்ட் தெரியும்.காசா? பணமா? மாத்திரு”
“அவரு ஃப்ரீயா பேர் மாத்தி தர்றாரா?”
“ரெண்டாயிரம் கேட்டாப்ல. இந்த மாதிரி அஸிஸ்டென்ட் டைரக்டர் சார். அப்பப்ப டிஸ்கஷன், ஸ்பாட் ஒர்க்னு வண்டி ஓடுது…அவ்வளவு முடியாதுன்னு நிலைமையைச் சொன்னேன். புரிஞ்சுக்கிட்டாப்ல.ஆயிரத்து ஐநூறுதான் வாங்கினாரு….ஜெயிச்சதுக்கப்புறம் என்கிட்ட வாங்கன்னு சொல்லி இருக்காரு….சாயங்காலம் நாம அவரைப் போய் பாக்கறோம்.என்னா?”
அவரைப் போய் பார்த்து ஆயிரம் ரூபாய் கொடுத்து அபராஜித் செல்வா என்று பெயரை மாற்றியாகி விட்டது..வெளியே வந்து காமாட்சி சொன்னான். “இனிமேல் நீ என்னை காமாட்சின்னு கூப்பிடக் கூடாது…நானும் உன்னை குமரேசன்னு கூப்பிட மாட்டேன்.புரியுதா அபராஜித்?”
`புரியுது குரசோவா”
ஒரு மாதம் கடந்து விட்டது… தினமும் நோட்டுப் புத்தகத்தில் மந்திரம் போல் எழுதிக் கொண்டிருக்கிறான்…அன்றைக்கு குமரேசனின் மன்னிக்கவும் அபராஜித்தின் மேன்ஷன் அறைக் கதவு உற்சாகமாக தட்டப்பட்டது. திறந்தா குரசோவா நின்று கொண்டிருந்தான்…
“சொன்னனா இல்லையா? உனக்கு குட் டைம் ஸ்டார்ட் ஆயிருச்சு..ஒரு பார்ட்டி வந்திருக்காப்ல. படம் பண்ணனுமாம். கதை கேக்கறதுக்காக தங்கி இருக்காரு..உடனே கிளம்பு” அபராஜித்தின் உடலெங்கும் ஒரு ஆனந்த அதிர்வு ஜிவ்வென்று மீட்டப்பட்டது. “நிஜமாவா? எங்க?” “டி நகர்ல ஒரு சர்வீஸ் அபார்ட்மென்ட்ல தங்கி இருக்காரு…தகவல் வந்துச்சு. உடனே உன் கிட்ட சொல்லலாம்னு வந்தேன்”
அபராஜித் நெகிழ்ந்தான்,“நீ கதை சொல்லலையா?”
“நமக்குதான் அங்க மீட்டிங்க் போய்க்கிருக்கே பாஸு…அதுல ரெண்டுல ஒரு சப்ஜெக்ட் கன்ஃபார்ம் ஆயிரும். நீ கிளம்பு…கதை ஏதும் மைன்ட்ல இருக்கில்ல?”
“ ஒரு லையனா இருக்கு. ஃபுல்லா ஃபார்ம் ஆகலை.”
“அதை கொஞ்சம் பாலிஸ் பண்ணிச் சொல்லிரு பாஸு….புடிச்சிருச்சின்னா மேக்கொண்டு டெவலப் பண்ணிக்கிரலாம்.லேட் பண்ணாம கிளம்பு”
அபராஜிதன் அறையிலிருக்கும் அலமாரியைத் திறந்தான். முருகன் லட்சுமி சரஸ்வதி பிள்ளயார் சாயிபாபா பன்னாரி அம்மன் ஆஞ்சநேயர் ஆகிய கடவுள்கள் உள்ளே ஒட்டப்பட்டிருந்தனர். எல்லாரையும் கும்பிட்டான். குங்குமம் இட்டுக் கொண்டான். ப்ராஜக்ட் ஓகே ஆகி விட்டால் சாமிகளுக்கு வேண்டியதைச் செய்வதாக வேண்டிக் கொண்டான். சுமாரான சட்டையை எடுத்து உதறினான்.
“பாஸு…என்னாது? கறுப்புச் சட்டையை போட்டுகிட்டு போனா சரி வராது..”
“ஏன்? நம்மளை மாதிரி ஆட்கள் ப்ளூ ஜீன்ஸும் கறுப்புச் சட்டையுமாத்தானே அலையிறோம்?” “இந்த ப்ரொட்யூசர் நிறைய சென்டிமென்ட் பாக்கறவரு…கறுப்பு வேணாம்…மஞ்சக் கலர் சட்டை இருக்கா?”“இல்லை” என்ற அபராஜித் கொடியில் தேடினான்…ப்ளூ கலரில் பொடி கட்டம் போட்ட சட்டை சுமாராக இருந்தது. அதை அணிந்து கொண்டான். குரசோவா ஒரு செகன்ட் ஹேன்ட் பைக் வைத்திருந்தான். அதில் இருவரும் கிளம்பினார்கள்.
ப்ரொட்யூசரின் அறைக்கு முன்னால் இருந்த ஹாலில் இரண்டு பேர் வேட்டி கட்டி அமர்ந்திருந்தார்கள். டிவியில் படம் ஓடிக்கொண்டிருந்தது. இவர்கள் பவ்யமாக விஷ் பண்ண “யாரைப் பாக்கணும்?”
“சாரைப் பாக்கணும்” “தூங்கறாரு” “வெயிட் பண்றோம் சார். ஃபோன் பண்ணி இருந்தோம் வர்றமின்னு” “உக்காருங்க”
அரை மணி நேரம் ஆயிற்று. டிவியில் போட்டிருந்த மொக்கைப் படத்தின் கொடுமையான காமெடி சீனுக்கு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதில் ஒருவன் அபராஜித்தைப் பார்த்து “கதை சொல்லத்தானே வந்திருக்கிங்க?”
“ஆமாங்க சார்” “இந்த மாதிரி காமெடி நிறைய வைச்சு சொல்லுங்க…சாருக்கு பிடிக்கும்” அபராஜித் மனதில் பெரும் அவநம்பிக்கை தோன்றியது..இருந்தாலும் வாய்ப்பை விட்டு விடக் கூடாது. மூச்சை ஆழமாக இழுத்து விட்டு பதட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.தான் படித்த மேதைகளின் வாழ்வில் அவர்கள் நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் என்று நினைவு படுத்திப் பார்க்க முயன்றான். எழவு! எதுவும் நினைவுக்கு வரவில்லை.
ஒரு வழியாக ப்ரொட்யூசர் எழுந்து காஃபி எல்லாம் குடித்து விட்டு உள்ளே கூப்பிட்டார். போய் உட்கார்ந்தார்கள்.
“ரெண்டு பேரும் கதை சொல்லப் போறீங்களா?” “இல்லை சார்…இவர் மட்டும்தான்.” “அப்புறம் நீங்க எதுக்கு வந்திருக்கீங்க?”
“நான் இவரு ஃப்ரண்டு சார்”
“பரவால்லை”‘ என்று சேரில் நிமிர்ந்து அமர்ந்தார்….அபராஜித்தை உற்றுப் பார்த்தார். “என்னா ராசி தம்பி நீங்க?”
“நான்…கன்னி ராசி சார்”
முகத்தில் ஏதோ திருப்தியுடன் `சரி சொல்லுங்க..என்னா மாரியான சப்ஜெக்ட் இருக்கு?ஒரு ரூவாயில முடிக்கணும். மேக்ஸிமம் ஒண்ணு இருவதுதான். அதுக்குள்ள ஒரு கதை சொல்லுங்க பாப்பம்”
அபராஜித் இவரை எப்படி இம்ப்ரெஸ் செய்வது என்று யோசித்தான்.“ஒரு லவ் ஸ்டோரி இருக்கு சார்….அப்புறம் ஒரு சஸ்பென்ஸ் கதை. முதல் ஷாட்டிலேயே ஹீரோவை கொன்னுர்றாங்க….யார் கொன்னதுன்னு”
“ நீ என்னப்பா `அந்த நாள்` சினிமா கதையை சொல்றே?”
“ இது வேற மாதிரி சார்..கடைசியில ஹீரோ சாகவே இல்லைன்னு வரும்”
அவர் சரிந்து உட்கார்ந்தார்.“இத பாரு தம்பி….இப்ப பேய்ப்படம் தான் ட்ரெண்டு…வேற எந்த கதையும் கேக்கறதா இல்லை…நல்ல பேய்க்கதையா ஒண்ணு சொல்லு எடுத்துருவோம்”
அபராஜித் இதை எதிர்பார்க்கவில்லை.அவனிடம் ஒரு காதல் ஒரு கிரைம் என்று இரண்டு ஐடியாதான் இருந்தது.“என்னா யோசிக்கிறே?”
ரொம்பவும் யோசிக்கக் கூடாது…பேய்க்கதை இல்லை என்றும் சொல்லக் கூடாது…சரசர என்று தனக்குத் தெரிந்த பேய்களை மனதுக்குள் கொண்டு வந்தான். “சார்…ஒரு வில்லேஜ்…அங்க ஒரு டீன் ஏஜ் பொண்ணு. ஒரு நாள் தனக்குத் தானே பேசிக்கிறா…சிரிக்கிறா….இந்தியில பேசறா…இங்க்லீஷ்ல பேசறா….தோட்டத்துக்குப் போய்ட்டு வரையில ஒரு புளியமரத்தை கடந்து வரும்போது…”
அவர் சலிப்புடன் இடை மறித்தார்“ அட நீ என்னப்பா வில்லேஜ் ஸ்டோரியை சொல்லிக்கிட்டு….க்ளாமர் வேணும்.”
அபராஜித் இந்த குறுக்கீட்டில் வெலவெலத்து யோசிக்க குரசோவா சட்டென்று அவரது பல்ஸை பிடித்தான்..ஆபத்பாந்தவனாக இடையில் களம் புகுந்தான்
இவன் இன்னொரு நாட்டும் வைச்சிருக்கான் சார்…ஒரு பங்களாவுக்கு மூணு பசங்க மூணு பொண்ணுங்க டூர் போறாங்க..அந்த பங்களாவுல பேய் வருது…அப்படிங்கற மாதிரி ஒரு ஐடியா சார்…ஒரே ஒரு மலை பங்களாதான் லொகேஷன்…ஏழு எட்டு ஆர்ட்டிஸ்ட்டுதான்…பட்ஜெட்டும் கம்மியா வரும்…ஸ்விம்மிங்க் பூல் இருக்கிற பங்களாவா பிடிச்சிட்டோம்னா க்ளாமர் சீன் நிறைய வைச்சிரலாம்”
“மலை பங்களாவில ஸ்விம்மிங்க் பூல் இருக்குமா?”
“ இல்லேன்னா பாத்ரூம்ல ஷவர் இருக்குமில்லை சார். அதை யூஸ் பண்ணிக்கிட்டா போச்சு” அபராஜித் குரசோவாவின் சினிமா ஸ்மார்ட்னெஸை வியந்தான்…என்னா அடி அடிக்கிறான்?
ப்ரொட்யூஸர் அபராஜித்தை பார்த்தார் “என்னா தம்பி? பண்ணிரலாமா?”
அபராஜித் தடுமாற்றத்துடன் “கொஞ்சம் சீன்ஸ் ச்யோசிக்கனும் சார்”
“யோசி, ரெண்டு நாள் டைம் எடுத்துக்கிட்டு சீன் பண்ணிக்கிட்டு வா.மேற்கொண்டு பேசலாம்” அவர் கையை அசைக்க இருவரும் வெளியே வந்தார்கள். உதவி இயக்குனர்களின் தாய்மடியான டீக்கடை ஒன்றில் சென்று அமர்ந்தார்கள்.
“என்ன பாஸு நீ லூஸா இருக்கே? அந்த ஆளு கேட்டவுடனே என்கிட்ட பத்து பேய்க்கதை இருக்குன்னு அடிச்சு விட வேணாமா?முழிச்சுகிட்டு இருக்கே?”
“இல்ல…நம்ம ஊருல எல்லாம் எப்படி பேய் பிடிக்குதோ அப்படி வைச்சு நேட்டிவிட்டியோட பண்ணலாம்ல?” “ட்ரெண்ட் மாறிருச்சு பாஸு. எல்லாமே இப்ப இம்போர்ட்டட்…பேயா இருந்தாலும் இறக்குமதிதான் பண்ணனும். எல்லாமே ஃபாரின் ஆன பிறகு சினிமாவில மட்டும் என்னத்துக்கு நேட்டிவிட்டி பாக்கறே?”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் நவநீத் உள்ளே நுழைந்தான். இவர்களை விட பத்து வயது சின்னவன்…எஞ்சினியரிங்க் படிப்பை பாதியில் விட்டு விட்டு சினிமாவுக்கு வந்தவன்…இரண்டு குறும்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு வாய்ப்புத் தேடிக்கொண்டு இருப்பவன்.. இவர்களைப் பார்த்து ஹாய் என்று சொல்லி எதிரே அமர்ந்தான்.“என்ன சார்? சீரியஸா டிஸ்கஷன் போகுது போல?”
“ஆமா நவநீத். ஒரு கோஸ்ட் ஸ்டோரி பண்ணனும்…அதான் பேசிக்கிட்டிருக்கோம்”
“அதுக்கு எதுக்கு பேசி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு..? கோ ஃபார் சம் டிவிடிஸ் ப்ரதர்” அபராஜித் தயங்கினான்,“டிவிடி பார்த்து படம் பண்றதுல எனக்கு இஷ்டம் இல்லை. சொந்தமா யோசிச்சு ஒரு கதை பண்ண முடியாதா? இத்தனை வருஷமா சினிமால இருக்கோம்..புக்ஸ் படிக்கிறோம்”
நவநீத் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்“ சார். உங்க முன்னாடி ஒரு ஸைடில தட்டில அன்னாசிப் பழத்தை அறுத்து ஸ்லைஸ் பண்ணி வைச்சிருக்கு….அதுக்குப் பக்கத்திலேயே இன்னொரு அன்னாசிப் பழம் தோலோட கட் பண்ணாம அப்படியே இருக்கு. நீங்க எதை சாப்பிடுவீங்க?”
“கட் பண்ணி வைச்சிருக்கிற ஸ்லைஸைத்தான் சாப்பிடுவேன்”
“அப்ப டிவிடி பாருங்க சார். பத்து டிவிடி பாத்தா ரெண்டு படம் ரெடி சார்…ஏன் சார் எனர்ஜியை வேஸ்ட் பண்ணனும்?”
அபராஜித் குரசோவாவை பார்த்தான். குரசோவா முகத்தில் குதூகலம்.
“ஞானக்குழந்தை மாதிரி பேசறான் பாரு. இதான் யூத்தோட அட்வான்ஸ்மென்ட்டு..உனக்கு முப்பத்தி மூணு வயசு ஆகுது….லேட் பண்ணக் கூடாது…..இவன் சொல்றதுதான் சரி…டிவிடி வாங்க கிளம்பறோம். நவநீத்….டிவிடி எங்க வாங்கலாம்?”நவநீத் சொன்னான்,“ஷபீர் கிட்ட போவோம். தமிழ் சினிமாவோட போக்கை மாத்தினதே ஷபீர்தான் ?”“ஷபீரா? யாரு அது?”
“பஜார்ல டிவிடி விக்கிற ஆளு. இன்டர்நேஷனல் சினிமாவை நம்ம இன்டஸ்ட்ரிக்கு அறிமுகப் படுத்தினது யாருன்னு என்கிட்ட கேட்டா நான் ஷபீர்னுதான் சொல்வேன். அவருக்கு தெரியாத வேர்ல்ட் டைரக்டர்ஸே கிடையாது.”
இரவெல்லாம் அபராஜித்தும் குரசோவாவும் டிவிடி பார்த்தனர். கண்கள் சிவந்து விட்டன. மனம் முழுக்க பேய்களின் நடமாட்டம். காலையில் குரசோவா எழவில்லை அபராஜித் மட்டும் சிகரெட் வாங்கலாம் என்று போகையில் நர்மதாவைப் பார்த்தான். நர்மதா க்ரூப் டான்ஸர்களில் ஒருத்தி. ரெண்டு வருடங்களாக காதலிக்கிறார்கள். படம் பண்ணியதும் திருமணம் என்று பேசி வைத்திருக்கிறார்கள். இவனைப் பார்த்ததும் புன்னகையுடன் வந்தாள். “இன்னைக்கு எதும் ஷூட்டிங்க் இல்லையா நர்மதா?”
“நைட் கால்ஷீட்… ராத்திரிதான் போகணும்”
“எங்க?” “பனையூர்கிட்ட செட் போட்டு எடுக்கறாங்க…நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே?” “விடிய விடிய தூங்காம பேய்ப்படமா பாத்தேன்..அதான்” சிரித்தாள்,`என்ன வேண்டுதலா?” “இல்லை…ஒரு ப்ரொட்யூஸருக்கு பேய்க்கதை சொல்லணும்.அதான்” “செலவுக்கு காசு வைச்சிருக்கியா?”
`இருந்த காசுக்கு டிவிடி வாங்கிட்டேன்…உன் கிட்ட கேக்கலாம்னுதான் இருந்தேன் நீயே வந்துட்ட”அவள் தன் குட்டி பர்ஸை எடுத்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாள்.
“நல்லா சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம் போடு.உன்னைய பாக்க எனக்கே சகிக்கலை”
புன்னகையுடன் விடை பெற்று கடைக்குப் போய் சாப்பிட்டான். வந்து தூங்கினான். மறுபடி பேய்ப்படங்கள்…ஒரு வழியாக நள்ளிரவு ஆன போது வாங்கிய அனைத்து படங்களையும் பார்த்து முடித்திருக்க குரசோவா இனி நீ எழுது பாஸு என்று கிளம்பிச் சென்று விட்டான்…அபராஜித்தின் மூளை குழம்பி இருந்தது. அடுத்த நாள் காலையில் அமர்ந்து பேப்பரையும் பேனாவையும் வைத்து யோசித்தபோது எதுவுமே ஓடவில்லை…கண்டபடி கிறுக்கினான். சாயங்காலம் ஆனது. வடபழனி முருகன் கோயிலில் போய் சாமி கும்பிட்டான். மறுபடி வந்து எதையோ எழுதிப் பார்த்தான்….ம்ஹூம் …திருப்தியாகவே இல்லை…
மறுநாள் குரசோவா வந்தான். “என்ன பாஸு…எதும் எழுதினியா?”
“இல்லை பாஸு…டிவிடி பாத்துட்டு உக்காந்தா எதுவுமே ஓட மாட்டேங்குது”
“ அது சரி ..எதை மாத்தணும்? எதை கோர்க்கணும் எப்படி பட்டி டிங்கரிங்க் பாக்கணும் ங்கிறது ஒரு கலை…அது உனக்கு செட் ஆக லேட் ஆகும்…விட்டுராதே….ட்ரை பண்ணிக்கிட்டே இரு…எதுவுமே பழகப் பழக வந்துரும்”
நாலு நாள் ஆனது ஒரு வழியாக போராடி என்னத்தையோ எழுதி முடித்தான் குரசோவாவிடம் சொல்லிக் காட்டினான். குரசோவா…“ம்..ஓகேதான் பாஸு..இதை விட பெட்டரா எதிர்பார்த்தேன். பட் ஓகே..இதை சொல்லி ஓகே பண்ணிருவோம்…அப்புறம் ஸ்பாட்ல டெவலப் பண்ணிக்கிரலாம்…ரெண்டு நாள்னு சொல்லி நாலைஞ்சு நாளாக்கிட்டோம்..இன்னைக்கே போய்ப் பார்த்துரலாம்”
இருவரும் கிளம்பி ப்ரொட்யூஸரைப் பார்க்கப் போனார்கள். சர்வீஸ் அபார்ட்மெண்ட் காலி செய்யப்பட்டிருந்தது.. டென்ஷனாகி விசாரித்ததில் அவர் நேற்று காலி செய்து விட்டு கிளம்பி விட்டதாக ரிசப்ஷனில் சொன்னார்கள்.அபராஜித் கண்கலங்கி நிற்க குரசோவா தேற்றினான்.
“விடு பாஸு….நமக்கு இதென்ன புதுசா? அடுத்த ஆளைத் தேடுவோம்.
இவர்கள் தேடல் தொடர்ந்து கொண்டிருக்க ஆறேழு மாதத்தில் பல படங்கள் ரிலீஸாகின. அதில் இவர்கள் சந்தித்த ப்ரொட்யூஸரின் படமும் ரிலீசானது…குரசோவாதான் அதிர்ச்சியுடன் அந்த தகவலை தெரிவித்தான்.
“பாஸு அந்த ப்ரொட்யூஸரை கவுத்து படம் பண்ணது யாரு தெரியுமில்லை? நம்ம நவநீத்து!” “டைரக்ஷன் ப்ரமோத் கர்ணான்னு போட்டுருக்கு?”
“அவனும் பேரை மாத்திருக்கான் பாஸு..அதே கோய்முத்தூர் காருகிட்டே”
“ திலக் தியாகராஜ திருமூர்த்தி கிட்டயா?”“ஆமா…அவர் கிட்ட பேரை மாத்தினா ஒர்க் அவுட் ஆகும்னு சொன்னேன்ல? படம் பண்ணிட்டான் பாத்தியா?” “நாமளும்தான்டா மாத்தினோம்?”….“பேட் லக்குன்னுதான் சொல்லணும்…அந்த படத்தை பாத்தியா?”
`இல்லை நீ பாத்தியா?” “பாத்தேன்..க்ளாமர் பிச்சிருக்கான். பேயே சீன் காட்டிக்கிட்டுதான் வருது.” “என்ன கதை?” “அஞ்சு ஜோடிங்க, ஒரு பேய்,ஒரு காட்டு பங்களா…ரெண்டு கொரியன்,ஒரு சைனா படத்தை மெர்ஜ் பண்ணி இருக்கான்….மேக்கிங்க்கை மட்டும் படு ஸ்டைலா மாத்திட்டான்….ஃபுல் மேக்கிங்க் ஸ்டைலும் வேற ஒரு ஹாலிவுட் படம்..என்னா கொடுமைன்னா இந்த எல்லாப் படமும் நாமளும் பாத்ததுதான்.”
அபராஜித்தை தோல்வியின் வேதனை போட்டு அழுத்தியது. “துரோகம் பண்ணிட்டானே பாஸு அந்த நவநீத்து!” “நான் அப்படி நினைக்கலை….நீ பாத்த டிவிடியைத்தான் அவனும் பாத்தான்….நீ சரியாப் பண்ணலை…அவன் கரெக்டா பண்ணிட்டான்….டைமுக்குள்ள பண்ணிட்டான்…ஓட்டப்பந்தயத்தில நம்மளை ஒருத்தன் முந்தி இருக்கான். அவ்வளவுதான். இதில என்ன துரோகம்?”
அபராஜித் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். “என்ன மாப்ளை பேசாம இருக்கே?”
`பதினாலு வருசமாச்சுடா..நேத்து வந்தவனெல்லாம் ஜெயிச்சுட்டுப் போய்க்கிட்டே இருக்கான்….பயமா இருக்குடா…”“என்ன பயம்? நம்பிக்கையோடதானே வந்தோம்? இப்ப எதுக்கு பயம்?” “பழசாயிருவோமோன்னு பயம்” “தேவையில்லாத பயம் பாஸு, சிந்தனைக்கு வயசாகாம பாத்துக்கணும் அவ்வளவுதான்” படிக்கட்டில் யாரோ வரும் சத்தம் கேட்டது…நர்மதா வந்தாள். முகத்தில் புன்னகை “எங்கியாச்சும் போயிருப்பியோன்னு பயந்துகிட்டே வந்தேன். நல்ல வேளை ரூம்ல இருக்கே” “என்னா மேட்டரு நர்மதா?”
“எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் சொன்னாரு…படம் பண்றதுக்கு ஒரு ப்ரொட்யூசர் வந்திருக்காராம். திருப்பூர்க்காரர்…கதை கேக்கணும்னு சொன்னாராம் எனக்கு தகவல் வந்துச்சு. உன்னை கையோட கூட்டிப் போக வந்திருக்கேன்…கிளம்பு கிளம்பு.
அந்த அறையில் திடீர் உற்சாகம் பீறிட வேக வேகமாக அபராஜித் சட்டையை அணிந்து கொண்டு கிளம்பினான்..
குரசோவா கேட்டான்…“என்ன சப்ஜெக்ட் சொல்லலாம் அபராஜித்?”
அபராஜித் பதில் சொல்லுமுன் நர்மதா சொன்னாள்,“அவருக்கு பேய்க்கதைதான் வேணுமாம்….ரெண்டு ரூவா பட்ஜெட்ல” குரசோவாவும் அபராஜித்தும் சிரித்துக் கொண்டார்கள்…
“இந்த டைம் அடிச்சுத் தூக்கறோம் பாஸு” கிளம்பினார்கள்.
(ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த சிறுகதை, பாஸ்கர் சக்தி அவர்களின் ‘முயல் தோப்பு’ தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. ஆசிரியரின் உரிய அனுமதி பெற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)