இணைய இதழ் 125கவிதைகள்

இரா.சந்தோஷ்குமார் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

நிழல் தொட்டில்

வயது நரம்புகள் படர்ந்த
பாறையின் மேல்
ஒற்றை எறும்பின் பயணமாய் நகர்கிறது
தனிமை.

பள்ளிப் பேருந்தின்
கடைசிச் சத்தம் ஓய்ந்த மாலையில்
வெறிச்சோடிய வீட்டு நாய்க்குட்டி
ஏமாற்றமாய் வாலாட்டுகிறது

வாங்கி வைத்த
டெடிபியர் பொம்மைகள்
மெத்தையில் அமர்ந்து
தன் தோழியைத் தேடுகின்றன

அவள் தலையில் சூடிக் கலைத்த
பூக்களைப் போல
என் மேஜை முழுக்க உதிர்ந்து கிடக்கின்றன
மருந்து வில்லைகள்

தலைமுடியின் நரைக்கூட்டைக் கலைத்து விளையாட
ஒரு சின்னஞ்சிறு சிட்டுக்குருவியின்
விரல்களைத் தேடுகிறது
அகவை

இரவின் ஆழத்தில்
என் எச்சில் தட்டைத் துடைக்கையில்
அவள் பாதியாய் மிச்சம் வைத்த
சோற்றுப் பருக்கைகள்
கனவாகின்றன

இன்னமும் அச்சுப் பதியாத
குட்டிப் பாதங்களின் சுவடுக்காக
வெறும் சாம்பலாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது
என் முதுமையின் பிரசவம்.

*

மறுபடிமச் சாம்பல்

என் தோட்டத்தை விட்டுப்
பறந்து போன பறவையின்
நிழல் ஒன்று

ஒரு சிறுமியின் சிரிப்பாக
இன்றென் வாசலில் விளையாடுகிறது

விட்டுப் போன பறவையின்
அதே புன்னகையைச்
சூடி வரும் அந்தப் பட்டாம்பூச்சி
என் அனாதை முற்றத்து வேலியோரம்
சிறகடிக்கிறது

நெஞ்சுக்கூட்டுச் சிறைக்குள்
பசியோடு கிடக்கும் தந்தைமை விலங்கு
அதன் அருகே கடக்கையில் மட்டும்
பாசத்தால் வாலாட்டி முனகுகிறது

நெருங்கித் தீண்ட முடியாத
அந்தத் தூரத்து மழலை நிலவு சிரிப்பின்
ஒளித் துண்டுகளைத் திருடி
என் அந்திமக் கால இருட்டு அறைக்குள்
ரகசியமாய்ப் புதைத்துக் கொள்கிறேன்.

*

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button